பாகவதப் பாரதத்தில் போர்ச் சித்திரிப்புகள்
வே. பா. இதழ் நேசராஜ்
முனைவர் பட்ட ஆய்வு மாணவி
அரிய கையெழுத்துச் சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ithazhjoyson@gmail.com
ஆய்வு நெறியாளர்: முனைவர் த. ஆதித்தன், இணைப்பேராசிரியர்
ஆய்வுச் சுருக்கம்
மனிதனின் உள்ளத்தில் இயல்பாக ஊறி எழும் பல்வேறு உயிர்க்குணங்களுள் போர் உணர்வும் ஒன்று என்பதைப் பாரதம் போன்ற இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு மன்னனின் புகழ்நிறைந்த, வளமான வாழ்வைக் கண்டு மனம்நொந்த இன்னொரு நாட்டு மன்னனுக்கு, அத்தகைய வாழ்வு தமக்கு இல்லையே என்று பொறாமை ஏற்பட்டது. அதைத் தாமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால், அவர்களுக்குப் பலவகையிலும் குற்றங்கள் செய்யத் துணிந்தான். அதனால் அவர்களுக்கிடையில் அது மிகப்பெரிய போராக உருவெடுத்தது. இத்தகைய சூழலில் ஒரு நாட்டைப் பாதுகாப்போடு ஆள்வதற்கு அடிப்படை உறுப்பாகப் படை அமைந்தது. படை இருந்தால் பாதுகாப்பு என்ற இலக்கணத்தோடு நாட்டை ஆட்சி செய்தவன், அதற்கேற்ப படைகளை உருவாக்கினான். அதுவே காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நான்காக வகைப்படுத்தப்பட்டுப் பழங்காலம் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. போரின் ஆக்கமும் அழிவும் போர்த்தலைமையின் அறிவாற்றல், மதிநுட்பம், அரும்பண்புகள், படைவீரர்களின் தகுதி, குழுவுணர்வு முதலியவற்றைப் பொறுத்தே அமைகிறது; அதன் அடிப்படையிலேயே படையை அணிவகுத்தல், போர் நடைபெறும்போது அதில் முன்னேற்றம், தாக்குதல், காத்தல், பின்வாங்குதல் முதலிய செயல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு படைப்பிரிவினரும் அதற்கேற்பப் போர்க்கருவிகளைப் பயன்படுத்துதல் வெற்றிக்கு வழிவகுத்தன. சங்ககாலம் முதலே வில், வாள், வேல், அம்பு, தண்டம், கேடயம், கவசம் முதலிய கருவிகளைக் கொண்டு எதிரிகளோடு போரிட்டுள்ளனர். மகாபாரதத்தில் போரின்போது இக்கருவிகளோடு மேலும் பல ஆயுதங்கள், கணைகள் முதலியன பயன்படுத்தியதைக் காணலாம். குருச்சேத்திரப் போர் பாகவதப் பாரதத்தில் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
குறிப்புச் சொற்கள்: போர் – படை – அணிவகுப்பு – தூது – போர்க்கருவிகள் – போர்க்களம் – போரிசைக்கருவிகள்- போர் அறம் – கடமை
முன்னுரை
பாகவதப் பாரதம் பதினெட்டாம் நூற்றாண்டில் (பொ.ஆ.1745-1755) தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய, தமிழுக்குப் புதிய வரவான ஒரு நாட்டுப்புறக் காப்பியம். இதனை இயற்றியவர் தேரிக்கரையான் ஸ்ரீபல்பநாப நாடார் ஆவார். அம்மானை யாப்பிலான இக்காப்பியம் 26,000 அடிகளைக் கொண்டது. ‘பாரதமும் பாகவதமும் பண்பாய்த் தெரிந்தெடுத்து’ அவற்றைப் பொருத்தமாக இணைத்துப் படைத்து இக்காப்பியத்திற்குப் ‘பாகவதப் பாரதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார் ஆசிரியர்1. பாகவதப் பாரதத்தில் பன்னிரண்டு போர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இறுதிப் போரான பாரதப்போர் என்னும் குருச்சேத்திரப் போர்ச் சித்திரிப்புகளை இக்கட்டுரை விவரிக்கிறது.
போருக்கான காரணம்
அளவுகடந்த மண்ணாசையால் போர் நிகழ்வதுண்டு. தன்னாட்டில் வாழும் குடிகள் வளத்துடன் வாழ்வதற்குப் போதிய இடமில்லாததினாலும்; இடம் சிறிதென்னும் ஊக்க மேலீட்டினாலும் மன்னர் போர் தொடுப்பர்; அரசுரிமைக்குத் தடையேற்படும்போதும்; சொல்லில் அல்லது செயலில் மானக்குறைவு ஏற்படும்போதும் போர் மூளும். தம் படைவலி, தம் செங்கோல், தம் ஆணை முதலியவற்றை யாவரும் ஒப்புக்கொண்டு தமது ஆட்சிக்கு உட்பட்டிருக்க, தாம் அரசருக்கு அரசராகத் திகழவேண்டும் என்ற உட்கோளே அக்கால அரசரின் போர்கள் பலவற்றிற்குக் காரணமாக இருந்துள்ளன. வெண்ணிப்பறந்தலை, கருவூர், கூடல், வாகைப்பறந்தலை, நெய்தலங்கானல், தலையானங்கானல், கானப்பேர் முதலிய இடங்களில் இக்காரணம் பற்றியே போர்கள் எழுந்துள்ளன2. இவை மட்டுமன்றி, அரச குடும்பத்திற்குள் ஏற்படும் முரண்கூட போர் ஏற்படும் சூழலை உருவாக்கும்; அது மேற்குறித்த காரணங்களில் ஒன்றோ அல்லது பலவாகவோ இருக்கும். அத்தகைய காரணங்களால் ஏற்பட்ட போர்தான் பாரதப்போர்.
பாகவதப் பாரதம்வழி பின்வருவனவற்றைப் போருக்கான காரணங்களாக அறியமுடிகிறது. அவை, துரியோதனனுக்கு ஏற்பட்ட மண்ணாசையும்; தானே ஒட்டுமொத்த நாட்டுக்கும் மன்னராக இருப்பதோடு, மன்னவர்க்கெல்லாம் மன்னவராகவும் இருக்க வேண்டும் என்ற பேராசை; பாண்டவர்களின் இராசசூய வேள்வியின்போது தர்மருக்கு வேதியர்களும் பிற மன்னவர்களும் செய்த சிறப்புகளைத் துரியோதனனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்தமை முதலியன.
தன்புய வலியும் நான்குதம்பியர் வலியும் மாயன்
வன்புய வலியும் கொண்டே மண்ணெலாம் கவரயெண்ணி
இன்புயச் சிகரிமன்னர் யாரையும் தன்கீ ழாக்கி
மின்புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான்3
எனத் துச்சாதனன் துரியோதனிடம் கூறி, அவனை வெறுப்பேற்றினான். இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர்கள் வாழ்ந்துவரும் நாளில் துரியோதனன் மனத்தில் அச்சப்பட்டு, நாளை பாண்டவர்கள் நாட்டை இருகூறாப் பகுக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது என்று மனந்தடுமாறி, கன்னனிடம் அறிவுரை கேட்க, அதற்குக் கன்னன்,
பஞ்சவரோ நாடு பகுந்தாள வாறதுகாண்
அஞ்சப்பொருது வெட்டி ஐவரையும் கொன்றுழக்கி
ஆருமறியாத அத்தினா புரத்தினிலே
போர்பொரலா மென்று கன்னன் புத்திமிக உரைத்தான்4
கன்னனின் அறிவுரையால் எப்படியும் பாண்டவர்களைப் போரில் வென்று நாடு முழுவதையும் தாமே ஆளலாம் என்று எண்ணினான் துரியோதனன்.
பாண்டவர்களின் வளர்ச்சியால் துரியோதனனுக்கு ஏற்பட்ட பொறாமை; தம் ஆற்றலை மாற்றான் இகழ்வது கண்டு பொறுக்கமுடியாமை; தன்மானம் காத்து, ஆட்சியுரிமையை நிலைநாட்ட முயன்றமை ஆகியன துரியோதனாதிகள் சார்பில் பாண்டவர்களுக்கு எதிராகப் போர் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன. பாண்டவர்கள் சார்பில் தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்துள்ளது.
தூது
‘பகையை நட்பாகவும் நட்பைப் பகையாகவும் ஆக்குபவன் தூதுவன். போரும் அமைதியும் அவனால்தான் ஏற்படுகின்றன’5. இரு பெரும் மன்னர்களுக்கிடையே போர் நிகழாமல் தடுப்பதற்காகத் தூது செல்லும் வழக்கம் இருந்துள்ளதைப் பின்வரும் இலக்கியச் செய்திகள் வழி அறிகிறோம். ஒரு மன்னனிடம் தூது செல்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறள்6 விளக்குகிறது. அதியமானுக்காகத் தொண்டைமானிடம் ஔவையார் தூது சென்றதைப் புறநானூறு7 எடுத்துக்காட்டுகிறது. பாரதத்தில் கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்வு ‘கிருஷ்ணன் தூது’ என்னும் கதைப்பாட்டு இலக்கியமாகப் புகழுடன் நிலைத்து நின்று பேசப்படுகிறது8.
பாகவதப் பாரதம் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் சபையில் கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்வைச் சித்திரிக்கிறது. அங்குச் சென்ற கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு நாட்டில் பாதிப் பாகத்தைப் பகிர்ந்து கொடுக்கும்படி வேண்ட, அதற்குத் துரியோதனன் மறுப்புத் தெரிவிக்க, கிருஷ்ணர் ஆளுக்கொரு ஊரைக்கொடு அல்லவென்றால் ஆளுக்கொரு வீட்டையாவது கொடு என்று கேட்கிறார்9. அதற்குத் துரியோதனன், தெள்ளுதமிழ் வல்ல திருமாலே, ஐவருக்கு எள்ளளவு பூமிகூட கொடுக்கமாட்டேன் என்றான்10. கிருஷ்ணர் துரியோதனனிடம் சென்ற சமாதானத் தூது பலனளிக்கவில்லை.
போர்ப் படைகள்:
நாட்டைக் காப்பதற்கும் பகைமன்னன்மேல் போர்தொடுப்பதற்கும் ஒரு நாட்டில் நான்கு வகையான படை ஏற்படுத்தப்பட்டது. பகைநாட்டோடு போர்தான் தீர்வு என ஒரு மன்னன் நினைத்துவிட்டால், அவன் தன் படை பலத்தைப் பெருக்குவான். படையின் சிறப்பைக் கூறும் திருக்குறள், ”ஒரு மன்னவனின் செல்வங்கள் எல்லாவற்றிலும் மேலான செல்வம் என்பது, நான்கு படையுறுப்புகளும் நிறைந்து, அஞ்சாது பகைவரை வெல்லும் படை எனக் குறிப்பிடுகிறது11. மன்னனின் திருமேனி எனப் போர்ப்படையைத்,
’தாழ்கழன் மன்னன் தன் திருமேனி
வாழ்க சேனாமுகமென வாழ்த்தி’
எனச் சிறப்பிக்கும் சிலப்பதிகார அடிகளுக்குத், ‘திருமேனியாகிய சேனாமுகம்; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி’ என உரை வகுத்துள்ளார் அடியார்க்குநல்லார்’12.
கன்னன் சொல்கேட்டுத் துரியோதனன் விராடபுரத்தில் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து வருமாறு அஸ்வத்தாமனுக்கு ஆணையிட்டான். மன்னவனின் ஆணைக்கிணங்க, அவன் மூன்று அக்குரோணி படைகளைத் திரட்டிச் சென்று,
தாம் முக்குறுணி தளத்துடனே தானடந்து
வென்றியுடைய விலா(ரா)டன் திருநாட்டில்
சென்றுநிரை கொள்ளவென்று திரைகடல்போலே வளைந்தான்13 .
அக்குரோணி என்பது பாரதப்போரில் ஈடுபட்ட படைகளின் அளவைக் குறிப்பதாகும். அக்குரோணி என்பதில் பத்தி, சேனாமுகம், குல்மம், கணம், வாகினி, பிருதனை, சமு, அனீகினி என்ற எட்டு உட்பிரிவுகள் காணப்படும். பத்தி என்பது ஒரு தேர், மூன்று குதிரைகள், ஐந்து சிப்பாய்கள், ஒரு யானை ஆகியவை கொண்டது. சேனாமுகம் என்பது மூன்று பத்திகள்; குல்மம் என்பது மூன்று சேனாமுகங்கள்; கணம் என்பது மூன்று குல்மம்கள்; வாகினி என்பது மூன்று கணங்கள்; பிருதனை என்பது மூன்று வாகினிகள்; சமு என்பது மூன்று பிருதனைகள்; அனீகினி என்பது மூன்று சமுக்கள்; அக்குரோணி என்பது பத்து அனீகினிகள் ஆகும். அதாவது, இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது தேர்கள்; இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது யானைகள்; ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று ஐம்பது காலாட்கள்; அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்துக் குதிரைகள் அடங்கியது ஓர் அக்குரோணி ஆகும்14.
சதுரத்துக்குச் சதுரமாகிய பத்துக் காதம் தொலைவுள்ள கடலில் படைகள் இறங்கும்போது, கடல் வற்றி வறண்டு எங்கும் ஒன்றுபோல் காட்சியளித்தால் அந்தப் படை ஓர் அக்குரோணி என்னும் இலக்கு ஆகும் எனப் பாகவதப் பாரதம் கூறுகிறது15.
படை அணிவகுத்தல்:
மன்னர்கள் படை, கொடி, குடை, முரசு முதலியவற்றோடு குதிரைப்படையும் யானைப்படையும் தேர்ப்படையும் தார்ப்படையும் (காலாட்படை மற்றும் தூசிப்படை) கொண்டிருந்தனர் என்பதைப்
படையும் கொடியும் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய
என்னும் தொல்காப்பிய நூற்பா16 வாயிலாக அறியலாம். எதிரிகளை வீழ்த்தும் வியூகம் அறிந்து நால்வகைப் படையையும் வகுப்பது படையணி வகுப்பு ஆகும். இதனைத் திருக்குறள்,
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து17
எனக் குறிப்பிடும்.
ஒரு படைக்குப் பகைவரைத் தாக்கும் திறமையும்; தாக்குதலைத் தாங்கும் திறமையும் இருக்க வேண்டும்; இது தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என நான்கு வகைப்படும். தண்டம் என்பது படையைக் குறுக்காக நிறுத்துவது; மண்டலம் என்பது பாம்புபோல் வளைவாக நிறுத்துவது; அசங்கதம் என்பது வேறுவேறாக நிறுத்துவது; போகமாவது நால்வகைப் படையையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்துவது18. அதனைக் கருத்தில் கொண்டே படையை அணிவகுப்பர்.
படையைத் தனக்கு அனுகூலமாக இருக்கும் பகுதியில் தெற்குநோக்கி நிறுத்தாமல் சூரியன் பின்புறமாக இருக்குமாறும்; தங்களுக்கு அனுகூலமாக காற்று வீசுமாறும் பார்த்து வியூகத்தை அமைக்க வேண்டும்19. எதிரி எதிர்ப்புறத்திலிருந்து தம்மை ஆக்கிரமிக்கக் கூடுமானால் மகரவியூகத்திலும் (முதலைவடிவம்); பின்புறத்திலிருந்து வளையக்கூடுமானால் சகடவியூகத்திலும் (வண்டிவடிவம்); பக்கங்களில் இருந்து தாக்கக்கூடுமென்றால் வஜ்ரவியூகத்திலும் (வைரக்கல் வடிவம்); நாற்புறத்திலிருந்தும் தாக்குதல் வரக்கூடும் என்ற ஐயமேற்பட்டால் சர்வதோபத்ர வியூகத்திலும் (சதுர வடிவம்); ஒவ்வொருவராக மட்டுமே செல்லக்கூடிய பாதையாக இருந்தால் ஊசி வியூகத்திலும் (ஊசிபோன்று நீள்வடிவம்) பயணிக்க வேண்டும்20.
இரு பகைநாட்டு மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது, எதிரியை எதிர்த்துப் போரிடும் தன்மை அறிந்து, அவரவர்தம் படைகளின் தன்மைக்கேற்ப, தலைமைக்கேற்ப படைப்பிரிவை ஏற்படுத்திக் கொள்வர். துரியோதனனுக்குப் பாண்டவர்கள்மேல் இருந்த வன்மத்திற்குப் போர்தான் தீர்வு என முடிவானவுடன், இருதரப்பினரும் அவரவர் தங்கள் படைகளைத் தகுதியுடன் பிரித்தத்தைப் பாகவதப் பாரதம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.
ஓரணிக்குத் தேரதுதான் ஒன்பது நூறாயிரம்
காரணிந்த தேரதுக்குக் கரிகள் நூறாக
போரணிந்த தேரது கரிக்கு புரவியது நூறாக
காரணிந்த தேரதுக்குக் காலாட்கள் நூறாக21
படைகள் பிரிந்தன. துரியோதனனுக்காக முதலில் பீஷ்மர் படையை அணிவகுத்தார். வலிமையுடைய வீரர்களைக் கொண்ட படைகளை அவர், யானை, யாளி, சிங்கம் மற்றும் பெரிய பறவையின் வடிவாக வகுத்தார். இதனை,
காரானை யாளிசிங்கம் கவர்ந்த புள்ளிக்கு நாமாவும்
பேரான கண்டப் பேரண்ட பட்சிதன் வடிவும்22
எனப் பாகவதப் பாரதம் காட்சிப்படுத்துகிறது. அப்படைப்பிரிவு ஒன்றில் கன்னனை சேனாதிபதியாக்கி, அப்படைப் பிரிவை நாலணிக்குப் பின்னணியாக்கி வகுத்தார் பீஷ்மர்23. துரியோதனனிடம் பதினெட்டு அக்குரோணி படைகள் இருந்தன. பீஷ்மர் எட்டுத் திசையிலும் முந்நூற்று இருபது காத தூரத்தில், இருபத்தொரு அணிகளைக் கொண்ட படைகளைச் சிறு கடல்போல் நிறுத்தினார். பதினான்காம் நாள் போரில் துரியோதனாதிகள் தங்கள் படைகளை, ’நாலுதிக்குந் தறியாய் நாலெட்டுக் காதமிடம், எண்ணரிய சேனையெல்லாம் எண்பதணி வகுத்துப்’ போரிட்டனர்24.
பாண்டவர் படையை மாயவர் கருடன் வடிவில் அமைத்தார்25. பகதத்தன், வீமசேனன், அருச்சுனன், நகுலன், சாத்தகி, கடோற்கயன், அவீமன், சீகண்டி, சுகந்தன் முதலியோரின் தலைமையில் படைகள் அணி வகுக்கப்பட்டன; அவை ஓர் அக்குரோணி அளவுடையதாக இருந்தன26.
போர்க்கருவிகள்
தானை, யானை, புரவி, தேர் என்னும் நால்வகைப் படையில் தானைப்படை எனப்படும் காலாட்படையினர் பயன்படுத்தும் போர்க்கருவிகளைக் கொண்டு அதனை வில்படை, வாள்படை, வேல்படை என மூன்றாக வகைப்படுத்துவர். இவ்வாறு அவர்கள் பிரிந்திருந்தாலும் படைவீரர்கள் இம்மூன்று போர்க்கருவிகளை மட்டுமன்றி, வேறு சரங்களையும் பயன்படுத்தினர். வில் வீரர்கள் பெரிய கேடயங்களையும் கவசங்களையும் குத்து வாள்களையும் வைத்திருந்தனர். தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தினர். குதிரைப்படை வீரர்கள் நீண்ட வேல்களுடன் குதிரைப்படைக்கென்று தனித்த முறையில் செய்யப்பட்ட கேடயங்களையும் குத்துவாள்களையும் உடைவாள்களையும் பெற்றிருந்தனர். தேர்ப்படை வீரர்கள் பல்வேறு விதமான வில்களையும் அம்புகளையும் பெற்றிருந்ததோடு, நீண்ட வேல்களையும் எறிவேல்களையும் குத்துவாள்களையும் பயன்படுத்தினர்; அவர்கள் தானைப்படையினர் வைத்திருப்பதுபோன்று கவசங்களையும் கேடயங்களையும் வைத்திருந்தனர்27.
அர்ச்சுனன் ஏராளமான கணைகளைக் கொண்டு போரிட்டான். அவை அனைத்தும் அவனது குருமார்கள் அவனுக்குப் பரிசாகக் கொடுத்தவையாகும். துரோணர் அவனுக்குக் கம்சனை வதைத்த கண்ணன் சரம், இந்திரன் கொடுத்த ஈராணியன் கணை, சந்திரன் கொடுத்த சிவமணி, ஆதித்தன் கொடுத்த அக்கினிக்கோல் முதலியவற்றைக் கொடுத்தார். கிருபாச்சாரியார் சிவன் அவருக்கு அளித்த சரத்தைக் கொடுத்தார். பீஷ்மர் வில், பிறை, நான்கு கணைகள், மோகினி அஸ்திரம், மூர்த்தி அஸ்திரம், அன்னை பராசக்தியின் மெய்க்கவசம் போன்ற தேர், அழகிய தாமரை ஆகியவற்றைக் கொடுத்தார். பரசுராமன் அர்ச்சுனனுக்கு வாரி என்னும் கணை, வாசு என்னும் ஞாண், சிறந்த மழு, ஒரு தேர், மேனியைக் காக்கும் சக்கரம், பிறைவாய்ச்சரம், நான்கு திசைகளிலும் நான்கு விதமாய்த் திகழும் நாலாயிரம் கோடி கோலவாய் அம்புகள் ஆகியவற்றைக் கொடுத்தார். விதுரன் அர்ச்சுனனுக்கு முப்புரத்தை எரித்த விற்களில் மேலான வில் ஒன்றைக் கொடுத்தார். போர்க்களத்தில் புகுந்து உடன் மீளவும்; நடுவில் நின்று முன்னணியையும் பின்னணியையும் முறிக்கின்ற தந்திரத்தையும் வியாசர் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார்28. அர்ச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்து பாசுபதக் கணையைப் பெற்றிருந்தான்29. குருமார்கள் கொடுத்த போர்க்கருவிகளோடு அருச்சுனன் போர்க்களம் கண்டான்.
துரியோதனனும் வீமனும் தேர்ப்படையினர் என்றாலும் அவர்கள் காலாட்படையினர்போல் தரையிலிருந்து தண்டாயுதத்தாலும் போரிட்டனர்30. கன்னன் அம்பு எய்வதில் வல்லவனாக இருந்தான். அவனிடம் சக்திவாய்ந்த நாகக்கணை இருந்தது31.
படைக்கருவிகள் கைவிடுபடை, கைவிடாப்படை என அவை அவற்றின் செயல்பற்றி இருவகைப்படும். கைவிடுபடை அஸ்திரம் என்றும்; கைவிடாப்படை சஸ்திரம் என்றும் வழங்கப்படும். பண்டைக்காலப் போர்க்கருவிகள் எய்படை, எறிபடை, குத்துப்படை, வெட்டுப்படை, அடுபடை, தடுபடை என அறுவகைப்பட்டன. அம்பு எய்படை; விட்டேறு எறிபடை; வேல், ஈட்டி, குந்தம் முதலியன குத்துப்படை; வாள், மழு முதலியன வெட்டுப்படை; தண்டு முதலியன அடுபடை; கவசம், கேடயம் முதலியன தடுபடை என அழைக்கப்பட்டன. மேற்குறித்த அறுவகைப் படைக்கருவிகளின் செயலால் எய்படை முதல் அடுபடை முடியவுள்ள ஐந்தும் தாக்குப்படை என்றும்; ஆறாவதாக உள்ள தடுபடை காப்புப்படை என்றும் கொள்ளலாம்32.
போரிசைக் கருவிகள்
பாரதப்போரில் போர்க்களத்தில் வீரத்தைத் தூண்டும் பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதை வில்லிபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. போர் தொடங்குவதற்கு முன்னர் போர்ப்படையை வருணிக்கும்போது பலவகை இசை வாத்தியங்களின் ஒலிகள் எழுந்ததை, ‘வளைமுழக்கின கிடுகு கொட்டின…..’ என்னும் பாடல் வழி அறியமுடிகிறது33. மேலும், மத்தளம் முதலாகவுள்ள தோற்கருவிகளும்; வெண்கலத்தால் செய்யப்பட்ட மணி, தாளம் முதலிய கஞ்சக்கருவிகளும்; புல்லாங்குழல், நாயனம் முதலிய துளைக்கருவிகளும்; வீணை, யாழ் முதலிய நரம்புக் கருவிகளும் ஏழுகடல்கள் பொங்கி எழுந்ததுபோலவும்; ஏழு தீவுகளும் எதிர்த்தனபோலவும்; ஏழுமேகங்களும் ஒருசேர இடித்தனபோலவும் முழங்கி இசைத்தது34. குருச்சேத்திரப் போரில் முரசுகள் ஒலித்ததையும்; இடம்புரி, வலம்புரி, சஞ்சலம் ஆகிய சங்குகள் முழங்கியதையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது35.
பாரதப்போரில் பயன்படுத்தப்பட்ட போரிசைக் கருவிகள் சிலவற்றைப் பாகவதப் பாரதம் குறிப்பிடுகிறது. அவற்றில் முதலானது சங்கு. இச்சங்கு வெற்றிச் சங்கு, அபாயச் சங்கு என இருநிலைகளில் ஒலித்ததைக் காணமுடிகிறது. வீமன் வெற்றிச் சங்கு ஊதியதைப் பலவிடங்களில் காணமுடிகிறது36. படைவகுப்பில் இயற்றப்படும் குழூஉக்குறிகளை இசைக்கருவிகளின் வேறுபட்ட இசையால் அறிவிக்கும்போது அது இன்னதென்று படைவீரர் தவிர, வேறுயாரும் அறியாத வண்ணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்37. அந்த வகையில் அமைந்ததுதான் கிருஷ்ணர் எழுப்பிய அபாயச் சங்கு ஓசை. அவ்வோசையைப் பிறரால் புரிந்துகொள்ள முடியாதபோது தர்மர் மட்டுமே இது அபாயத்தைக் குறிக்கும் ஓசை எனப் புரிந்துகொண்டார். படையில் குழூஉக்குறிப் பயன்பாட்டின் சிறப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது. கிருட்டினரையும் அருச்சுனரையும் கன்னன் முதலானோர் சூழ்ந்த நிலையில் அருச்சுனன் இறப்பது முடிவாகிவிட்டது எனத் தேவர்கள் அஞ்சினர். அப்போது கிருட்டினர் அபாயச் சங்கை ஊதினார். அவ்வோசையைக் கேட்ட தருமர் அச்சத்தால் நடுங்கி, சாத்தகியை அணுகி விபரம் கேட்டார். இதனைப் பாகவதப் பாரதம்,
அப்போது மாயவனார் அரசர் நடுநடுங்க
மெய்ப்பான சங்கை விசனாக ஊதிடவே
சங்கோசை கேட்டதற்பின் தன்மர் மிகநடுங்கி
இங்கேவா சாத்தகியே என்றவரை வரவழைத்து
தார்நெடுமாலும் இப்போ சங்குவாய் வைத்தனர் காண்
போர்விசையர்க்கு இப்போது பொல்லாங்கு வந்ததுண்டோ38
என அபாயச் சங்கொலி கேட்ட தருமரின் மனநிலையைச் சித்திரிக்கிறது.
பதினான்காம் நாள் போரில் துரியோதனன் படையில், ‘சாலமொடு சங்கு சமுத்திரம்போலே முழங்க’ எனச் சங்கும் சாலகையும் முழங்கியது குறிப்பிடப்படுகிறது39. சாலம் என்பது சாலகை அல்லது சாலரி என வழங்கும். இது ஒரு வகை இசை வாத்தியம், முப்பத்தேழாவது மேளகர்த்தா ஆகும்40. மேலும், பதினான்காம் நாளில் கிருஷ்ணர் தம் சக்கரத்தால் சூரியனை மறைக்க, போர் முடிந்துவிட்டது எனத் தவறாகக் கணித்த துரியோதனாதிகள் தம் இருப்பிடத்திற்குப் புறப்பட்டபோது, ‘தம்பட்டம் பேரிகைகள் தாரை கொம்பு தான் முழங்கச் சென்றனர்’41. பதினேழாம் நாள் போரில் கன்னன் மகன் விசகருணன் போருக்குப் புறப்பட்டபோது, ‘தம்பட்டம் நன்றதிர தாரை சின்னம் தானதிர’ தன் தந்தையின் முன் வந்தான்42. இவ்வாறு குருச்சேத்திரப் போரில் இசைக்கருவிகள் பல பயன்படுத்தப்பட்டிருப்பது புலப்படுகிறது.
போர்க்களம்
போர்க்களம் வந்த துரியோதன பாண்டவர் படையால் நான்கு திசையிலும் பூமி நடுங்கியது. துரியோதனன் படைகளைப் போர்க்களத்தில் பீஷ்மர் வகைவகையாய் அணிவகுத்து நிறுத்தினார்.
தென்னான் பாவி திரியோதனன் படையை
கோலமுள்ள வண்மை குருக்கேத்திரந் தனிலே
நாலுதிக்கும் பூமி நடுநடுங்கக் கூடியதே
எண்ணரியதோர் படையை இயல்வீட்டிமனாரும்
மண்ணதிர விண்ணதிர வகைவகையாய் தானிறுத்தி43
முன்னணிக்கு முகவாயில்போல் பீஷ்மரே நின்றார். பாண்டவர் படையைப் போர்க்களத்தில் கிருஷ்ணர் கொண்டு நிறுத்தியதை,
ஏற்றமுள்ள பஞ்சவர்கள் எண்ணரிய சேனையெல்லாம்
தோற்றமுள்ள மாயவனார் குருக்கேத்திரந் தனிலே
வாய்த்த சிறுகெருடன் வன்னவடிவாகி யொக்க
தோற்றமுடனே அணியைத் துவங்க மிகவே வகுத்தார்44
எனப் போர்க்களத்தில் போர்வீரர்களின் அணிவகுப்பைப் பாகவதப் பாரதம் புலப்படுத்துகிறது.
முதல்நாள் முதல் பதினெட்டு நாள் வரையுள்ள போரில் போர்க்களம் பரவலாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. சான்றாக, பத்தாம்நாள் போரில் பீஷ்மர், பாண்டவர் படையை எதிர்த்துப் போரிடுவதற்காகப் போர்க்களம் நோக்கிப் புறப்படும்போது பலவித நிமித்தங்களை எதிர்கொண்டார். தேரேறிப் போர்க்களம் வந்தவர், மிக்க கோபத்துடன் பலரையும் வெட்டிச் சரித்தார். தேரோடு பல தேர்கள் முட்டி மோதின; அத்தருணத்தில் கரிகள் பரிகள் குடல்சரிந்தன; காலாட்கள் பார்வேந்தர் பட்டுவிழுந்தனர்; பகதத்தன், சிகசத்துவமுடைய சேரசோழ பாண்டியர், பாஞ்சாலர் முந்நூறு பேரும் பட்டார் படுகளத்தே45 எனப் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது.
போர்க்களத்தில் வீரர்கள் போரிடுவதால் கிளம்பிய செந்தூள் மேலிருக்கும் சூரியன் இருப்பதை அறியமுடியாதபடி மறைத்து விட்டது46. வீமன் கன்னனின் படைவீரர்களைத் துரத்தித் துரத்தி அடித்தான். பல மன்னர்களையும் வீரர்களையும் அவன் கொன்று குவித்ததால் வீரர்கள் கொதித்தெழுந்ததை,
அடித்தே குமித்தனர்காண் அங்கேதான் துரத்தி
இடித்தே குமித்தனர்காண் இரணகளம் சூடெனவே47
எனப் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது. மேலும், அங்குப் பேயும் கழுகும் பருந்தும் நரியும் விருந்துண்ட காட்சியும்; இரத்த ஆற்றில் யானைக்குட்டி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் கீழ்வருமாறு சித்திரிக்கப்படுகின்றன.
கொன்று குருதியிட்டக் கொலைக்களத்தைப் பார்ப்பளவில்
கரிகள் குடல்சரிய காலாக்கள் தான்மடிய
பரிகள் குடல்சரிய பார்வேந்தர் பட்டுவிழ
அரசர் தலையுருள ஆள்வீரர் தான்மடிய
மூவுயற்றோன் தன்கரத்தை முகமுங் கரமுமுருள
ஆறுங் குருதி யலைந்தோட அக்களத்தில்
பாறுங் கழுகும் பருந்தும் விருந்துண்ணவே
சீறுநரி பேய்கள் தின்றே யேப்பமிட்டிடவே
ஏறுங் குருச்சேத்திரத்தில் ஆற்றொழுங்கிடவே
கட்டன் கொடியன் கடும்பாவி நெட்டூரன்
குட்டிமதக் கரியைக்கூட இழுத்தோடிடுமாம்
இப்படியோடும் இரத்தாற்றைத் தான்பார்த்து
செப்பமுள்ள சொல்லான் திருமாலும் ஏதுரைப்பார்48
இவ்வாறு பாகவதப் பாரதத்தில் போர்க்களம் சித்திரிக்கப்படுகிறது.
போர் வீரர்கள்
துரியோதனாதிகளுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர்தான் தீர்வு என்று முடிவானபோது படைகள் அணிவகுக்கப்பட்டன. அப்போது தலைமைப் பொறுப்பேற்றிருந்த பீஷ்மரும் கிருஷ்ணரும் அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப படைத்தலைவர்களையும் அவர்களுக்குக் கீழ் நின்று போரிடும் போர் வீரர்களையும் தேர்வு செய்தனர். போரில் வீரமரணத்தைத் தழுவிய வீரர்களும்; உடல்பாகங்களை இழந்து துன்பத்தை அனுபவித்த வீரர்களும் ஏராளம். அவர்களின் புலம்பல்களைப் பாகவதப் பாரதம் எடுத்துரைக்கிறது. போரில் பரிகளையும் கரிகளையும் வெட்டித் துண்டாக்கிவிட்டு, கணையிழந்து வில்லிழந்து தட்டழிந்து, தலைகெட்ட நூல்போல் வீரர்கள் ஓடினர்49. ஏராளமானோர் பிழைப்பதற்கு வேறு வழிதெரியாமல் போரிட்டு, இது நம் விதியென எண்ணி மடிந்து விழுந்தனர். மேலும் பலர் காலிழந்து, கையிழந்து, சென்னி அறுபட்டு மயங்கி வீழ்ந்தனர். சிலர் நஞ்சையுண்ட மீன்போல் நடுங்கி வீழ்ந்தனர். சிலர் ஓடிப் பிழைத்துக் கொள்ளலாம் என்று போக வழிதேடிப் புலம்பித் திரிந்தனர். ஓடிப்பிழைக்க ஓரிடமும் காணாமல் வழிதேடித் தடுமாறித் திரிந்தனர்.
மாண்டு விழுகையிலே மகாகோடி சேனையுள்ளார்
பூண்ட விதியெனவே பொருது மடிவாரும்
கால்தெறித்து வீழ்வாரும் கைதெறித்து வீழ்வாரும்
நீலமுடன் அப்பொழுது நின்று விழுவாரும்
சென்னியற்று வீழ்வாரும் சிவனெனவே வீழ்வாரும்
வன்னிச் சிராயதுபோல் மதிமயங்கி வீழ்வாரும்
நஞ்சையுண்ட மீன்போல் நடுநடுங்கி வீழ்வாரும்
என்செய்வோம் ஈசுரரே என்று விழுவாரும்
ஆபாத கேடன் அரவக் கொடியுடையோன்
மாபாவி யென்று மயங்கி விழுவாரும்
சாகமாட்டாமல் தலைமேல் கையைவைத்து
போக வழிதேடிப் புலம்பித் திரிவாரும்
ஓடிப்பிழைக்க ஒருவிடமும் காணாமல்
தேடி வழிபார்த்துத் தியங்கித் திரிவாரும்50
எனப் போர்க்களத்தில் உயிருக்குப் போராடிய போர்வீரர்களின் அவலநிலை சித்திரிக்கப்படுகிறது.
போர் அறம்
ஒரு மன்னனுக்கு அறமே செங்கோல், அனைவரும் உறங்கும்போது அது விழித்திருக்கும்51. ஒரு மன்னனுக்குப் போரில் வெற்றியைக் கொடுப்பது அவன் போர்க்கலமாகிய வேல் அல்ல; அவனது முறைதவறாத செங்கோல் ஆகும் என்பதை,
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடது எனின்52
எனத் திருக்குறள் எடுத்துரைக்கிறது. ‘மன்னன் உலகத்தைக் காப்பான்; அவனைச் செங்கோல் காக்கும்’53. அறநெறிப்படி ஆட்சி செய்யும் மன்னர்களுக்கிடையே ஏதோ சில காரணங்களுக்காகப் போர் மூண்டுவிட்டால், போரில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் சார்ந்த நெறிமுறைகள் பல காணப்படுகின்றன. அவற்றை அந்தந்த நாட்டுப் போர்வீரர்கள் ஒழுகி நடக்க வேண்டும். போருக்கான காரணங்கள் என்னவென்று புரிந்துகொள்ளுதல், போர் செய்யும் முறை, போரின்போது நடந்துகொள்ளும் விதம், கொல்லக்கூடாதோர் யார் யார்?, போர் வீரர்கள் ஒருவருக்கொருவரை மதித்தல், காலையில் சூரிய உதயத்திற்குப் பின்னர் போரைத் தொடங்கி, மாலையில் சூரிய மறைவில் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் முதலியவை போர் அறமாகக் கொள்ளப்படும். போர் என வந்துவிட்டால் எதிர்ப்பக்கம் போரிடுபவரைக் கொல்வதுவே வெற்றி. இந்தக் கொலை வெற்றியின் அடையாளம். ஆனால் எதிரிகளில்கூட இன்னாரைக் கொல்லலாம், இன்னாரைக் கொல்லக்கூடாது என அறம்சார்ந்த பல நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றன நீதிநூல்கள்.
போர்த் தருமத்தை அறிந்த போர்வீரன் அறத்தை மதித்து நடந்து கொள்வான். போர்க்களத்தில் போருக்கு அஞ்சி இன்னோரிடத்தில் அடைக்கலமாகி இருப்பவன், அலி, கைகூப்பி வணங்குபவன், தலைமயிர் அவிழ்ந்து சரியப் பெற்றவன், நான் உனக்கு ஆளாகின்றேன் எனக் கூறுகின்றவன், உறங்கிக்கொண்டிருப்பவன், கவசம் முதலியன பூண்டு போர்வீரனாக இல்லாதவன், ஆடை இல்லாதவன், ஆயுதம் இல்லாதவன், போர் செய்யாதவன், போரைக் கண்டுகொண்டிருப்பவன், மற்றொருவனோடு போரிட்டுக் கொண்டிருப்பவன், தண்ணீர் குடிப்பவன், உணவருந்துபவன், பிற செயல்களில் முனைந்திருப்பவன், அச்சமுடையவன், புறங்கொடுத்தோடுபவன் ஆகியோரைக் கொல்லுதல் தகாது. மேலும், வயது முதிர்ந்தோர், பாலகர், பெண்கள், துணையில்லாத மன்னவன் ஆகியோரையும் கொல்லுதல் கூடாது. போர்வீரர் தம் தகுதிக்கேற்பவுள்ள பகைவீரனோடு போரிட்டு அவனைக் கொல்லுதல் அறநெறிக்கு அப்பாற்பட்டதாகாது. அறத்தின்வழி செய்யப்படும் போருக்கு மட்டுமே இது பொருந்தும். வஞ்சகமாகச் செய்யப்படும் போருக்கு இவை பொருந்துவதில்லை54.
போர்க்களத்தில் எதிரி நிராயுதபாணியாக நிற்கும்போது அவரைக் கொல்லுதல் அறத்திற்கு மாறானது. பத்தாம் நாள் போரிலும் பதினேழாம் நாள் போரிலும் முறையே பீஷ்மரும் கன்னனும் ஆயுதமின்றி நிற்கும்போது, அர்ச்சுனன் அவர்களைக் கொல்லுதல் முறையன்று, அவர்களை நான் கொல்வதில்லை என்று கிருஷ்ணரிடம் கூறியதைப் பாகவதப் பாரதம் கீழ்வருமாறு சித்திரிக்கிறது.
ஆதி முதலான் அருள் வீட்டிமனாரும்
பாதிநா ளொன்றதிலே பருத்த சிலைபோட்டு
வெற்றிசெய்து போர்க்களத்தில் வெறுங்கையே நிற்கையிலே
கொற்றவரே நானவரைக் கொல்லவல்லேன் எனவுரைத்தார்55
கண்ணான பஞ்சவர்கள் காசினியை ஆள்வாரென்று
விண்ணோரென கன்னன் வெறுங்கையே நிக்கலுற்றான்
வெறுங்கையால் நிக்கையிலே விசையா நீ கொல்லுமென்றார்,
மெய்யான கன்னனவன் வெறுங்கையால் நிக்கையிலே
எய்வேனோ பாவம் எனக்குப் பலியாதோ56
என்றான் அர்ச்சுனன். கிருஷ்ணர் அவனிடம் அவர்கள் மரிக்க வேண்டியவர்கள் என்பதற்கான அறநெறி சார்ந்த காரணங்களையும் அதற்குரிய வழிமுறைகளையும் கூறி, அவர்களைக் கொல்லுமாறு வற்புறுத்தினார்.
தேற்றரசனால் தன் மகன் அவீமன் (அபிமன்யு) கொல்லப்பட்டான் என்பதை அறிந்து, பதினான்காம் நாள் போரில் மாலைநேரம் தேற்றரசனைக் கொல்வது என்று கிருஷ்ணரும் அர்ச்சுனனும் முடிவு செய்தனர். ஆனால் மாலையில் தக்க நேரத்தில் அவன் இருக்குமிடத்திற்குத் தேரைக் கொண்டுசெல்ல முடியாதபடி இருந்தார் கிருஷ்ணர். அப்போது அவர் தன் கையிலிருந்த சக்கரத்தால் சூரியனை மறைத்தார்57.. பொழுது அடைந்தது என போரை முடித்துக்கொண்டு, இசைக்கருவிகள் முழங்க, துரியோதனாதிகள் ஆற்றில் நீராடித் தம் பாசறைக்குச் சென்றனர். மகிழ்ச்சியோடு சென்ற மன்னர்களின் பின்னால் தேற்றரசன் சென்றுகொண்டிருந்தான். அந்தப்பொழுதில் மாயவர் சக்கரத்தைப் பின்வாங்க, சூரியனும் உதித்தான். அப்போது மாயவர் அர்ச்சுனனிடம், தேற்றரசன் போய்க்கொண்டிருக்கிறான், சிவனை நோக்கித் தவமிருக்கும் அவன் தகப்பன் கையில் தலை அறுந்து விழுமாறு அவன்மேல் சரத்தைச் செலுத்து என்றார்58. மாயவர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன், பொழுது அடைந்துவிட்டது என்று எண்ணிப் போகிறவரைக் கொல்வார்களோ? ஈசனை நோக்கிப் பூமியில் செய்துகொண்டிருக்கும் தவத்தைக் குலைப்பார்களோ? என்றான்59. உடனே கிருஷ்ணர், அர்ச்சுனா, போர்க்களத்தில் சாத்திரம், நீதி, தர்மம் பற்றிப் பேசுவார்களோ? இது உனக்கொரு பண்பா? என்று கூறி, வில்லில் சரத்தைப் பூட்டி அவன் கையில் கொடுத்து, தேற்றரசனைச் சொன்னபடி கொல் என்றார். கிருஷ்ணரின் கட்டளையை ஏற்ற அர்ச்சுனன் ஏவிய சரத்தில் தேற்றரசன் தலை அறுந்து, தவம் செய்துகொண்டிருந்த அவன் தந்தை கையில் வீழ்ந்தது60. தர்மத்திற்கு எதிராக இருப்பவனைக் கொல்லுதல் போர் அறம் என்பதற்கேற்பத் தேற்றரசன் அர்ச்சுனனால் கொல்லப்பட்டான்.
மனிதாபிமான கடமை உணர்வு
மனிதாபிமான கடமையுணர்வு என்பது ஒருவரின் சொந்த நலன்களைத் தாண்டி, பிறரின் நலன்களைக் கருத்தில்கொண்டு செய்யப்படும் செயல்பாடுகள் ஆகும். இது மனிதநேயம், இரக்கம், கருணை முதலிய உணர்வுகளோடு தொடர்புடையது. ஒருவருடைய துன்பத்தைக் கண்டு அதைத் தணிக்க அல்லது நீக்குவதற்கு உதவுவது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் கடமைகள் இதன்பால் அடங்கும். இறந்தவனைக் காணும்போது, காலை நம்மோடு இருந்தவன் மாலை நம்மோடு இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொருவர் மனத்தையும் அழுத்தும். அதனாலேயே விழுப்புண் பட்டிறந்தோரை முறைப்படி மரியாதையுடன் அடக்கம் செய்வர். பாகவதப் பாரதம், ஒவ்வொரு நாள் போரின் இறுதியிலும் இறந்தோரை அடக்கம் செய்வதோடு, அவர்களுக்குரிய கடமைகளையும் செய்து, நீராடிச் சென்ற படைத்தலைவர்கள் மற்றும் போர்வீரர்களின் மனிதாபிமான கடமை உணர்வைச் சித்திரிக்கிறது.
வெற்றியுடன் பட்டவரை வீரமுடனே அடக்கி
மற்றுமிரு படையும் வாகாகப் பட்டவரை
முற்றும் எடுத்தடக்கி முழுகினார் நீரதிலே61
என முதல்நாள் போரின் முடிவில் இறந்தோரை முறைப்படி அடக்கம் செய்து நீராடிச் சென்றதைக் காணமுடிகிறது. நான்காம் நாள் மற்றும் ஒன்பதாம் நாள் போரின் இறுதியில்,
அன்றுபட்ட மன்னரையும் ஆனவீரர் தங்களையும்
நன்றியுடன் நடத்தி நல்சுனையில் நீராடி
முழுபடையும் தங்கள் பதிக்கேகினர் காணப்போது62
அன்று வரையில் கதிரோனும் போய்மறைந்தான்
பட்டவரசரையும் பார்வீரர் தங்களையும்
இட்டமுடனே எடுத்தடக்கி நீர்மொழுகி63
எனப் போரில் இறந்தோருக்குச் செய்யும் இறுதிக் கடனை நெறியோடு ஆற்றியதைப் பாகவதப் பாரதம் புலப்படுத்துகிறது.
முடிவுரை:
பகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவே இல்லை. அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல்மீதிலே ஆணை செலுத்த விரும்புவர். கடலாட்சி பெற்றபின்னர் வானவெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதிது இல்லை. அது இவ்வுலகத்து இயற்கை என்பது ஒரு தமிழ்க் கவிஞன் கூற்று64. அக்கூற்றுக்கு இணங்க மண்ணாசை கொண்ட வணங்காமுடியோனாகக் குருநாட்டில் வலம்வந்த துரியோதனனால் ஏற்பட்டதே குருச்சேத்திரப்போர். பாகவதப் பாரதம் அப்போரை வெகுவாகச் சித்திரிக்கிறது.
மேற்கோள் குறிப்புகள்
- சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: ஆராய்ச்சிப் பதிப்பு, ப. 88
- சு. வித்தியானந்தன், தமிழர் சால்பு, பக். 52, 53
- நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) வில்லி பாரதம், இராசசூயச் சருக்கம், பா.எ. 169
- சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 409
- தமிழ்நாடன் (மொ.பெ.ஆ), மநுதர்மம், ப. 103
- பரிமேலழகர் (உரை), திருக்குறள், அதிகாரம் 69
- இளங்குமரன் (உரை), புறநானூறு, பா. எ. 95
- க. கருப்பையா, ஓலைச்சுவடியில் மகாபாரதம்: கிருஷ்ணன் தூது
- சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 796
- மேலது, ப. 796
- பரிமேலழகர் (உரை) மு.கு.நூல், பா.எ. 761
- அடியார்க்குநல்லார் (உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், காட்சிக்காதை, 191, 192
- சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 733
- லட்சுமி சுப்பிரமணியன், இதிகாசக் களஞ்சியம், பக். 28, 29
- சிவ. விவேகானந்தன், மு.கு. நூல். பக். 835, 836
- புலியூர்க்கேசிகன் (உரை), தொல்காப்பியம், மரபியல், நூ. 72
- பரிமேலழகர், மு.கு. நூல், பா.எ. 767
- கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப.. 683
- ஸ்ரீஆனந்தநாச்சியாரம்மா (மொ.பெ.ஆ), அர்த்தசாஸ்திரம், ப. 543
- மேலது, ப. 540
- சிவ. விவேகானந்தன், மு.கு.நூல், ப. 820
- மேலது, ப. 820
- மேலது, ப. 821
- மேலது, ப. 945
- மேலது, ப. 838
- மேலது, ப. 840
- அ.இராகவன், தமிழ்நாட்டுப் படைக்கலன்கள், ப.21
- சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: உரைநடைக் காப்பியம், பக். 95, 96
- மேலது, ப. 308
- மேலது, ப. 461
- மேலது, ப. 552
- தங்கங் கந்தசாமி, போரியல் அன்றும் இன்றும், ப. 150
- நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) மு.கு.நூ, உத்தியோகப் பருவம், பா.எ. 376
- மேலது, பா.எ. 388
- மே.கு.நூ, முதற்போர்ச் சருக்கம், பா.எ. 18, 19
- சிவ. விவேகானந்தன், பாகவதப் பாரதம்: ஆராய்ச்சிப் பதிப்பு, பக். 889, 893, 905
- மு.கதிரேசஞ் செட்டியார் (மொ.பெ.ஆ), சுக்கிரநீதி, ப. 338
- சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 955
- மேலது, ப. 946
- கழகத் தமிழகராதி, ப. 446
- சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 964
- மேலது, ப. 988
- மேலது, ப. 843
- மேலது, ப. 843
- மேலது, பக். 912-915
- மேலது, ப. 930
- மேலது, ப. 959
- மேலது, ப. 964
- மேலது, ப. 950
- மேலது, பக். 950, 951
- தமிழ்நாடன் (மொ.பெ.ஆ), மநுதர்மம், ப.101
- பரிமேலழகர் (உரை), திருக்குறள், பா.எ. 546
- மேலது, பா.எ. 547
- மு. கதிரேசஞ் செட்டியார் (மொ.பெ.ஆ), மே,கு.நூ, பக். 229, 230
- சிவ. விவேகானந்தன், மே.கு.நூ. ப. 916
- மேலது, ப. 997
- மேலது, ப. 964
- மேலது, ப. 965
- மேலது, ப. 965
- மேலது, ப. 965
- மேலது, ப. 891
- மேலது, ப. 897
- மேலது, பக். 911, 912
- ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழர் வீரம், ப. 16
பயன்பட்ட நூல்கள்
அடியார்க்குநல்லார் (உரை), சிலப்பதிகாரம் மூலமும் உரையும், உ.வே.சா. நூலகம், சென்னை, 1927
இராகவன், அ, தமிழ்நாட்டுப் படைக்கலன்கள், அமிழ்தம் பதிப்பகம், சென்னை, 2007
இளங்குமரன் (உரை), புறநானூறு மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2003
கதிரேசன் செட்டியார், மு (மொ.ஆ), சுக்கிரநீதி, சன்மார்க்கச் சபை, மேலைச் சிவபுரி, 1926
கலைக்களஞ்சியம், தொகுதி-6, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1959
கழகப் புலவர் குழு, கழகத் தமிழகராதி, கழக வெளியீடு, சென்னை, 2004
சேதுப்பிள்ளை, ரா.பி, தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2011
தங்கங் கந்தசாமி, போரியல் அன்றும் இன்றும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1987
தமிழ்நாடன் (மொ.ஆ), மநுதர்மம், காவ்யா, சென்னை, 2011
நாராயண வேலுப்பிள்ளை, எம் (உரை) வில்லி பாரதம்- பாகம் 1-5, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2006
பரிமேலழகர் (உரை), திருக்குறள், கழக வெளியீடு, சென்னை, 1951
புலியூர்க்கேசிகன் (உரை), தொல்காப்பியம், பாரி நிலையம், சென்னை, 1977
லட்சுமி சுப்பிரமணியன், இதிகாசக் களஞ்சியம், லட்சுமி பிரசுரம், சென்னை, 2006
வித்யானந்தன், சு, தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 2021
விவேகானந்தன், சிவ., பாகவதப் பாரதம் உரைநடைக் காப்பியம், காவ்யா, சென்னை, 2020
விவேகானந்தன், சிவ., பாகவதப் பாரதம் ஆராய்ச்சிப் பதிப்பு, காவ்யா, சென்னை, 2021
ஸ்ரீஆனந்த நாச்சியாரம்மா, (உரை), அர்த்தசாஸ்திரம், ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010
