தூய்மைப் பணியாளருக்கு அநீதி – அடிப்படை அமைப்பிலேயே சிக்கல்
அண்ணாகண்ணன்
சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்பட அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் ஊதியம் உயர்கிறது. படிகள் உயர்கின்றன. ஓய்வூதியம் உயர்கிறது. பணிப் பாதுகாப்புடன் மருத்துவ வசதி, காப்பீடு, போனஸ் உள்ளிட்ட பலவும் கிடைக்கின்றன. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இவை இன்னும் பெருமளவு உயரும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் இவற்றை மறுப்பது ஏன்?
அவர்களை அரசுப் பணியாளர் என்பதிலிருந்து தனியார் தொழிலாளர் என மாற்றியபோதே, அவர்களின் உரிமைகளை இழந்துவிட்டார்கள். அவர்கள் கேட்பது, ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும். வழங்க முன்வருவதோ, காலை உணவும் காப்பீடும்.
அரசுத் துறைகளைத் தனியார்மயம் ஆக்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், சிலரை மட்டும் இவ்வாறு தனியார் துறைக்கு மாற்றிவிட்டு, இதர துறைகளில் உள்ளோர் பல மடங்கு ஊதியத்துடன் வாழ்வது, மிகப் பெரிய பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் இல்லையா?
1. தனியார்மயம் ஆக்குவதாக இருந்தால், அனைத்து நிலைகளிலும் அவ்வாறு ஆக்குங்கள். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ஊதியம் என்று வரையறை செய்யுங்கள். கார்ப்பரேட் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். வேலைத் திறனுக்கு ஏற்பவே ஊதியம், ஊதிய உயர்வு. வேலைத்திறனில் பழுது இருந்தால் பணிநீக்கம் என நடைமுறைப்படுத்துங்கள். கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.
2. அரசுத் துறை, தனியார் துறை ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள். அரசுத் துறைக்கு மட்டும் கூடுதல் ஊதியம் என்பது தவறான முன்னுதாரணம். மக்கள் வரிப்பணத்திலிருந்தே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது. 7 கோடிப் பேரின் வரிப்பணம், 2 சதவிகித (14 லட்சம்) அரசு ஊழியர்களுக்காகச் செலவிடப்படுகிறது. பெரும்பான்மைத் தமிழர்கள், தகுதியான ஊதியம், பணிப் பாதுகாப்பு இல்லாமல் போராடும்போது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் பாதுகாப்பான வாழ்க்கை என்பது, சமூகத்தின் அடிப்படை அமைப்பிலேயே உள்ள சிக்கல். அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதில்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதே சிக்கல். கொடுத்தால் எல்லோருக்கும் கொடுங்கள். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே சட்டம், ஒரே கண்ணோட்டம் இருக்க வேண்டும். இதுவே உண்மையான சமூக நீதியாக இருக்கும்.
