வெட்கம் இல்லாத பதவி நேசர்களுக்காக ஒரு சட்ட மசோதா
அண்ணாகண்ணன்
தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்
மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
என் பார்வையில், செந்தில் பாலாஜி போன்றவர்களுக்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது ஆகி, எவ்வளவு காலம் சிறையில் இருந்தாலும் அமைச்சர் பதவியை விடாதவர்களுக்கு இனி வேறு வழியில்லை.
We cannot be so shameless that we continue to occupy constitutional positions while facing serious charges என அமித் ஷா கூறியுள்ளார். வெட்கம் இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பதவியிலிருந்து விரட்டத்தான் வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கத்தக்க குற்றச்சாட்டில், 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், 31ஆவது நாள் அவர்கள் பதவி இழந்துவிடுவார்கள். இதில் பிரதமர் பதவியையும் சேர்த்தது, பா.ஜ.க.வின் நடுநிலைமையைக் காட்டுகிறது. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்று இதன் மூலம் நிலை நாட்டுகிறார்கள்.
பொய்யான குற்றச்சாட்டில் கைது ஆகிச் சிறையில் இருந்தால்…? இப்படி நிறைய நடந்திருக்கிறதே.
பொய் என நிரூபித்துவிட்டு வெளியே வந்து, பிறகு பதவி ஏற்க வேண்டியதுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையே விதித்தாலும் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்து, வழக்குகளைக் கால வரையின்றி இழுப்பார்கள். சாட்சிகளைக் கலைப்பார்கள். எதிர்க்கட்சிகளின் சதி என்பார்கள். இந்த அரசியல் விளையாட்டில், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது. மேலும், சிறையில் இருந்து இவர்கள் எந்த அலுவலும் பார்க்க முடியாது. அப்படி இருக்க, அந்தப் பதவி எதற்காக?
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்றே சட்டம் கருதும். ஆனால், பெரும் பதவிகளில் இருப்பவர்கள், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மிரட்டி, சாட்சிகளைக் கலைத்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அதிக வாய்ப்பு உண்டு. எனவே தார்மீக ரீதியாக அவர்கள் தாமாகப் பதவி விலக வேண்டும். அல்லது நீக்கப்பட வேண்டும்.
சிறையில் இருக்கும் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்காத முதலமைச்சரை இந்தச் சட்டம், மறைமுகமாகக் கண்டிக்கிறது. இது ஈகோ விஷயம் கிடையாது, அரசு அலுவல் தடைப்படுகிறது, மக்கள் பணம் வீணாகிறது, குறுக்குவழியில் செல்வாக்கு செலுத்த இடம் உண்டாகிறது எனச் சுட்டிக் காட்டுகிறது.
செந்தில் பாலாஜியைப் பதவியிலிருந்து நீக்கத் தமிழக ஆளுநர் வலியுறுத்திய போது, தமிழக முதலமைச்சர் மறுத்தார். இப்போது ஆளுநரின் நிலையே சரி என்பதை இந்தச் சட்டம் நிறுவுகிறது. இது ஒரு வகையில் ஆளுநருக்கு வெற்றி. தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் ஆளுநர் வழிகாட்டுகிறார்.
