நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்(பகுதி-3)
தி.சுபாஷிணி
வசந்தவல்லி என்று ஒரு இளம் நங்கை, வழக்கம் போலப் பந்தாட வருகிறார். பந்தாடவும் செய்கிறார். ஆட்டம் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு அக்கூட்டம் ஆரவாரமாய் வருகிறது. குற்றாலநாதன் வசந்தவல்லியை ஆசையோடு பார்க்க வருவது போல் பவனி வருகின்றான். முதலில் வசந்தவல்லி கவனிக்கவில்லை.ஆட்டத்திலேயே நோக்கமாய் இருந்தவர்,திடீரென்று எப்படியோ குற்றாலநாதரைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான். குற்றால நாதரின் எடுப்பும், தோரணையும், மிடுக்கும், ஒய்யாரமும் உருக்கி விட்டன வசந்த வல்லியை. அவளால் நிலைகொண்டு நிற்க முடியவில்லை. இவளைக் கண்ட தோழியர் முதலில் என்ன மந்திரமோ? மாயமோ எனப் பயந்தனர். பின் இவளுக்கு மருட்சியும், வெருட்சியும் இல்லை. குற்றால நாதர்பால் எழுந்த காதல் மயக்கம்தான் எனக் கண்டு கொள்ள வசந்த வல்லியோ, பார்த்தது பார்த்தபடி நிற்கின்றாள். ஊன் செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை. அவரைக் கண்டு உள்ளம் உருகி, மயக்கம் வருகுதே! மோகம் என்பது இதுதானோ! தோழியரே! முன்னமே இதனை நான் அறிந்ததில்லையே அன்னை சொல்லும் கசந்து, தாகமேயறியாது நிற்கின்றேனே! கையிலுள்ள வளையலும் சரிகிறதே! நான் என்ன செய்வேன் எனக் காதல் மயக்கத்தில் உள்ளம் சரிகிறாள். இவள் நிலைக் கண்டு வசந்தவல்லியின் தோழியர் குற்றால நாதரிடம் தூது சொல்லத் தயாராகி நிற்கின்றார்கள். அவளிடம்,
“வந்தால் இன்னேரம் வரச்சொல்
வாராது இருந்தால் மாலையாகிலும் தரச்சொல்
தந்தால் என்னெஞ்சைத் தரச் சொல்
தாராது இருந்தால் தானுண்ட
நஞ்சை யாகினும் தரச்சொல்”
எனக்கூறி வசந்தவல்லி காதலரிடம் தூது அனுப்புகிறார்.
விஷயம் பார்த்தால் சாதாரண விஷயம்தான். நடைமுறையில் உள்ள சாதாரணமாகத்தான் இருக்கிறது. எதுவும் சாதாரணமாகத்தான் தெரியும். சூரியன், சந்திரன், மனிதன் எல்லாம் சாதாரண விஷயம்தான். அது எப்போது அசாதாரணமாக, அற்புதமாக, பிரமாதமாகத் தெரியும் என்றால் “பேஷ் பேஷ்” எனப் பாராட்டப்படும் என்றால், உணர்ச்சியால்தான் அது அற்புதமாகும். உணர்ச்சியின் உச்சத்தில்தான் உன்னதமாகத் தெய்வீகமாகக் காட்சியளிக்கும். வசந்த வல்லிக்குப் பிரிவாற்றாமை, எந்த அளவிற்குக் கொண்டு செல்கிறது? ‘அவன் உண்ட நஞ்சையாகிலும் தரச்சொல், உண்டு உணர்வற்றுப் போய் விடுகிறேன் நான். என்னால் இந்தப் பிரிவைத் தாங்கி உயிர் தரிக்க இயலாது’ என மனம் நொந்து போகிறாளாம். அந்த அளவு ‘உணர்ச்சி’ அவளை எடுத்துச் சொல்கிறது. அது கவிக்கு உருவம் கொடுத்து விடுகிறது. உணர்ச்சி ஏதாகிலும் இருக்கலாம். ஆனந்தமோ, அவலமோ, கண்ணீரோ களிப்போ எதுவாகிலும் இருக்கலாம். அதற்குத் தமிழ் உருவம் கொடுத்து விடும்.
பாடலை இரண்டு இரண்டு வரியாகச் சொல்வார் இரசிகமணி. பின் மீண்டும் பாடல் முழுவதும் சொல்லி விடுவார். கேட்பவர் மனத்தில் அப்படியே அழகாய் அமர்ந்து விடும்.
இப்படிக் கேட்ட பாடலில், திருமதி. ருக்மணிதேவி அருண்டேல் அமெரிக்கா ஐரோப்பா எனக் குறவஞ்சி நாடகமாக நடிக்கப்பட்டது. இன்றும் அந்த மரம் இருக்கும். தன் %