நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-5
பெருவை பார்த்தசாரதி
ஆசிரியர்கள்: “எனது பிறப்புக்குக் காரணமான பெற்றோர்களுக்கு நான் முதலில் கடமைப்பட்டிருப்பது போல, நான் முறையாக வாழ்வதற்கு வழிகாட்டிய எனது ஆசிரியர் அறிஞர் அரிஸ்டாட்டில் அவர்களுக்கு நான் இரண்டாவதாகக் கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
மருத்துவத் தொழில், வக்கீல் தொழில், ஆராய்ச்சி போன்ற பல துறைகளில், ஆசிரியப் பணியும் ஒரு உன்னதமான தொழில்களில் ஒன்று. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவும், குடும்ப உறவைப் போலவே ஒரு வகையில் உன்னதமானதுதான்.
ஆசிரியர் என்றால் அப்பணியைச் செவ்வனே செய்கின்ற ஆசிரியரை மட்டுமே குறிக்கும். தரையிலே கிடக்கும் கல்லிலே சிற்பத்தைச் செதுக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற ஒரு சிற்பி போலத்தான், தலை சிறந்த மாணவனை உருவாக்குகின்ற ஆசிரியரையும் ஒப்பிடுவார்கள். ஒரு நல்லாசிரியர் என்பவர் வகுப்பிலே, மாணவனின் கவனம் சிதைந்து விடாமல் இருக்கப் பல வழிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தி, கல்வியில் நாட்டம் குறையாதவாறு திறமையோடு அப்பணியைச் செய்வார்கள். ஒவ்வொரு மாணவனிடமும் ஒளிந்து கொண்டிருக்கும், ஆற்றல், செயல்திறன், அறிவுத்திறன் போன்றவற்றை அறிந்து ஊக்குவித்து, அந்தப் பொக்கிஷங்களை வெளியே கொண்டு வருகின்ற வலிமையை ஒரு நல்லாசிரியரால் மட்டுமே முடியும்.
ஒரு சில ஆசிரியர்கள் வகுபறையில் தாம் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்குப் புரிகிறதா?…., இல்லையா?…. என்பது கூடத் தெரியாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பார்கள். சில ஆசிரியர்கள் மேற்கோள்களைக் காட்டிப் பாடங்களை நினைவில் பதிய வைப்பர். ஒரு சில ஆசிரியர்கள் நடத்துகின்ற பாடம் மாணவர்களின் மனதில் ‘அறிவு’ என்கிற தீப்பொறியை உண்டாக்கி, நாளடைவில் அதை ஒரு சுடராக, அறிவுச்சுடராக கொழுந்து விட்டு எரியச் செய்து விடும். இப்படிப்பட்ட ஆசிரியர்களே மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியராக அமைகின்றனர்.
“எல்லா வழிகளிலிருந்தும், உயரிய சிந்தனைகள் எல்லா நேரத்திலும் நம்மிடம் வந்து கொண்டேயிருக்க வேண்டும்” என்ற வாசகம் தமிழ் வேதங்களில் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிற வேத வாக்காகும். இதைப் போல வகுப்பிலே பாடம் நடத்தும்போது, மாணவர்களின் உயரிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
என்னுடைய பள்ளிப் பருவத்தில், தமிழ்ப் பாடம் என்றாலே பல மாணவர்கள் பாதியிலேயே எழுந்து வகுப்பிலிருந்து நழுவி விடுவார்கள். அந்த வகுப்பறையில் இரண்டு நுழைவாயில் உண்டு. தமிழ் ஆசிரியர் பாடத்தை ஆரம்பிக்கும் போதே, “மாணவர்களே இங்கு யாருக்காவது தமிழ் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் இரண்டாவது நுழைவாயில் வழியாக, மற்ற மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் வெளியே செல்லலாம்” என்பார். ஆசிரியர் இடையிடையே தனது வாழ்வியல் அனுபவத்தையும் கதையாக அவ்வப்போது சொல்லி, தமிழ்ப் பாடங்களின் சுவை குன்றாமல், மாணவர்களை வகுப்பு முடியும் வரை ஈர்த்து/இழுத்துச் செல்வார். மாணவர்களில் ஒருவர் கூட எழுந்து செல்லாமல் வகுப்பு முடியும் வரை இருந்தது, இன்றைக்கும் என் நினைவில் வரும். படிப்பதற்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அனுபவம் எப்போதுமே மனம் சிந்திப்பதற்குத் துணை நிற்கும் என்பதையும், பல இடங்களில் ‘மேற்கோள்களைச்’ சொல்லி நினைவில் நிறுத்துவார்.
கிராமத்திலே நகைச்சுவையாகப் பேசப்படுகின்ற அனைவருக்கும் தெரிந்த உரையாடல் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அதிகம் படிக்காத அனுபவமுள்ள ஒரு கிராமவாசியின் வீட்டிற்குப் படித்துப் பட்டங்கள் பல வாங்கிய ஆசிரியர் ஒருவர், நண்பர் என்ற முறையில் விருந்தாளியாகச் செல்கிறார். இருவரும் வீட்டிற்குள்ளே இருந்தபடி உரையாடுகிறார்கள்.
ஆசிரியர்:அந்த மாடு நிற்காமல் சுத்திக்கிட்டு இருக்கே எப்படி?
நண்பர்: அது செக்கு மாடு, ஒரே இடத்திலே சுத்துவது ஒண்ணுதான் அதுக்குத் தெரியும், நிற்காம சுத்திக்கிட்டே இருக்கும்.
ஆசிரியர்: நீங்க எங்கயோ வேல பாத்துக்கிட்டு இருக்கீங்க, அது வேல செய்யாம நின்னுடுச்சின்னா உங்களுக்கு எப்படித் தெரியும்?
ஆசிரியர்: செக்கு இழுக்கும்போது மாடு கழுத்துல கட்டியிருக்கிற குடுவமணிலேர்ந்து சவுண்டு வருதுல்ல, மாடு வேல செய்யலன்னா, அது நின்னுரும்.
நண்பர்:ஒரு வேள அது சுத்தாம நின்னுகிட்டே, கழுத்த மட்டும் ஆட்டிகிட்டே இருந்தா? அப்ப உங்களுக்கு எப்படித் தெரியும்?
நண்பர்:அதெல்லாம் அப்படி செய்யாதுங்க வாயில்லா ஜீவனுங்க.
ஆசிரியர்:அதெப்படி அவ்ளோ உறுதியா, நம்பிக்கயா சொல்றீங்க?
நண்பர்:அதுவா? அந்த மாடு, உங்கள மாதிரி Mphil, Phd எல்லாம் படிக்கலீங்க தம்பி…….அதுதானுங்க.
நண்பரின் யதார்த்தமான இந்தப் பதில், படித்த ஆசிரியரைக் கூடச் சிந்திக்க வைத்து விடுகிறது.
சிறு வயதிலிருந்தே படிக்க வேண்டும் என்று ஆசையும், தமிழ் மேல் அளவு கடந்த பற்றும் உள்ள ஒரு இளைஞன், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்து, பல பட்டங்களை வாங்கி மேதையானார். இந்தப் பெருமையெல்லாம், இவருக்கு வந்து சேர, அவருடைய ஆசிரியராக இருந்தவர் வழிகாட்டியாகச் செயல்பட்டார். அந்த இளைஞனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசான், ஒரு சில பழங்கால சுவடிகளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி, அதற்கு அர்த்தங்களை எழுதித் தரச் சொன்னார். அந்த மாணவனும், சளைக்காமல் எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் எளிதில் பொருள் கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்தார். அன்றிலிருந்துதான் அந்த இளைஞனுக்கு, அன்றிலிருந்துதான் அவருக்குச் சுவடிகளின் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. பின்னாளில், பல சுவடிகளைத் தேடிப், படித்து ஆராய்ந்து, பல தமிழ் காப்பியங்களை எளிய தமிழில் வெளியுலகுக்கு அறிமுகப் படுத்தினார்.
பழங்காலச் சுவடிகளைத் தேடிச் சென்றபோது பல இன்னல்களுக்கு ஆளானார். ஏட்டுச் சுவடிகள் எல்லாம் செல்லரித்துப் படிக்க முடியாதபடி சிதைந்து போயிருக்கும், சில சுவடிகள் கையில் எடுத்தால் அப்பளம் போல் உடைந்து விடும். இவ்வளவு சிரமத்துக்கிடையில் அவற்றையெல்லாம் சேகரித்து, அதில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்து, அச்சிட்டு எளிதாக எல்லோருக்கும் புரியும் எளிய தமிழில் நூல்களாக வெளியிட்டார்.
கால்கள் நடந்து நடந்து தேய்ந்து போயின, சுவடிக்கு உரிமையாளர்கள் பலர் வீட்டில் இருந்து கொண்டே இல்லையென்று சொல்வார்களாம், பலமுறை வரச்சொல்லி அலைக்கழிப்பார்களாம், சிலரிடம் அவமதிப்பும், கையூட்டு கொடுத்தும் சுவடிகளைப் பெற வேண்டியிருக்குமாம். இப்படிப் பல இன்னல்களைச் சந்தித்து, பல அரிய நன்னூல்களை அச்சிட்டு அரங்கேற்றித் தமிழ்க் கடலாகத் திகழ்ந்தவர். மஹா மஹோஉபாத்தியாயர், தமிழ்த் தாத்தா, திராவிட வித்யாபூஷணம், என்று பல பட்டங்களைத் தாங்கிக் கொண்டு, ஓயாத கடல் அலைபோல் இன்றும் புகழுடன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்பு உருவச் சிலையாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிற உவேசா அவர்கள் வாழ்ந்த காலம் 87 ஆண்டுகள், எழுதிய நூல்களும் 87.
உவேசா போன்று இன்னும் பல தமிழ் மூதறிஞர்கள், திருவிக, பாரதிதாசன், பரிதிமாற் கலைஞர், வஉசி, கவிமணி, மூ.வரதராசனார், வாகீஸகலாநிதி கிவாஜ, பேரரிஞர் முவ, ஞானமனி சுவாமி சித்பவானந்தர், தமிழ்மலை மறைமலையடிகள், தமிழை உலகறியச் செய்த கால்டுவேல்ஐயர் இவர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல அரிய நூல்களை எழுதிக் குவித்துள்ளனர். தமிழ் மீது உண்மையிலேயே பற்று இருந்தால், நீண்டு கொண்டே போகின்ற இந்த அறிஞர்களின் பட்டியலில், விட்டுப் போன இன்னும் பலரது பெயர்களை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
நகைச்சுவையும் கலந்து பாடம் நடத்துவது, சில ஆசிரியர்களுக்கே உரிய தனித்தன்மை. நகைச்சுவை உணர்ச்சி என்பது ஆசிரியப் பணிக்கு மிக அவசியம். இந்த உணர்ச்சி இல்லாவிட்டால், ஆசிரியப்பணியை, மாணவர்களிடத்திலே செம்மையாகச் செய்ய இடையூறு நேரலாம். தொலைக்காட்சிகளில், மக்கள் அதிகம் விரும்பக்கூடிய நிகழ்ச்சிகளில், நகைச்சுவைக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது. எங்கெல்லாம் நகைச்சுவை இடம் பெறுகிறதோ, அங்கெல்லாம் நிச்சயமாக ஆசிரியரும் மாணவரும் இடம் பெற்றிருப்பர். அதிகமாக அரங்கேறும் நகைச்சுவைக் காட்சிகள், பள்ளிகளில் ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் காட்சிகளைச் சார்ந்தே இருக்கும். நாம் படிக்கின்ற காலங்களைச் சற்று நினைவுக்குக் கொண்டுவந்தால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் எப்போதும் மாணவர்களின் குதூகலத்துக்குக் குறைவில்லாமல், அதே சமயத்தில் பாடங்களிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வார்கள். மாணவர்களும் சளைக்காமல் ஆசிரியரோடு நகைச்சுவை உணர்வோடு பாடங்களைப் பயிலுவதுண்டு. தினமும் நம் கைபேசிக்கு எண்ணற்ற குறுந்தகவல் சிரிப்புகள் வருகின்றன. அதில் ஆசிரியர், மாணவர் இடையே சில ரசிக்கக் கூடிய சிரிப்புகள் சிலவற்றைக் காண்போம்.
முட்டை போடும் விலங்கினம் எது?…..
மாணவன் எழுதிய பதில்-ஆசிரியர்.
ஒரு தவறான பதிலுக்கு, ஆசிரியர்களைச் சில சமயங்களில் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி விடுவார்கள் மாணவர்கள். இந்தப் பதிலுக்கு ஆசிரியர் 0 மதிப்பெண் கொடுத்தால், ஆசிரியர் என்ன ஆவார்.
******
ஆசிரியர்:ஏன் நான்கு நாட்களாக ஸ்கூலுக்கு வரவில்லை?…
மாணவன்: எங்க அப்பா ரொம்பப் புத்திசாலி சார், அவர் சொல்றதான் நா கேட்பேன்.
ஆசிரியர்: ஏன் உங்க அப்பா ஸ்கூல் போக வேண்டாம்னு சொன்னாரா?
மாணவன்: அதில்லை சார், நமக்கு சம்பந்தம் இல்லாத இடத்துக்கெல்லாம் போகக்கூடாது என்று சொல்லி விட்டார்.
*******
மாணவன்: நம்ம கல்வி முறையிலே சில மாற்றங்களைக் கொண்டு வரணும் சார். அப்பதான் சார், நாடு உருப்படும்.
ஆசிரியர்: நீ பாடத்தையே ஒழுங்காப் படிக்கமாட்டே?..உனக்குக்கூட யோசனை சொல்லனும்னு தோணுதோ?அப்படி என்ன மாற்றம் கொண்டு வரணும்ன்னு நினைக்கிற?..
மாணவன்: எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்டே, ஆன்சர் (answer sheet) பேப்பரைக் கொடுக்கறாங்க, ஆனா ஒண்ணுமே தெரியாத மாணவன்கிட்டே கொஸ்ச்சின் பேப்பர (question paper) கொடுக்கறாங்க, இது நியாயமா சார்.
பள்ளிக்கூடங்களிலிருந்து, கல்வியை முடித்து வெளியேறும் மாணாக்கர்களிடம் படிப்பறிவு இருந்தாலும், வாழ்வியல் அனுபவம் என்பது அவ்வளவாக இருக்காது. அப்படியானால் பள்ளிக்கு வெளியே படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பது அர்த்தம். அதுதான் பண்பு மற்றும் ஒழுக்கம். கற்றறிந்த முதியவர்களிடமிருந்துதான் அனுபவம் என்ற பாடத்தைப் படிக்க முடியும். படிப்போடு, அனுபவ படிப்பையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்து, ஒரு மனிதனை மாமனிதனாக ஆக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
ஓயாது எதையாவது பயனுள்ள நூல்களை, தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். படித்த நல்ல விஷயங்களை எங்காவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் அறிவுதானே மூலதனம். இந்த அறிவினைப் பெற்று, மனிதவளத்தை மேம்படுத்த பயனுள்ள நூல்கள் எவ்வாறு நமக்கு வழிகாட்டுகிறது என்பதை ஆறாவதுஇதழில்தொடருவோம்.
நல்வரவு. நகைச்சுவை தான் கலகலப்பு. ‘முட்டை போடும்’ ஜோக் டாப்ஸ்! வகுப்பில் யார் காலை வாரி விடலாம் என்று திட்டமிட்டு வருவோம். எங்கள் விஞ்ஞான ஆசிரியர் டி.எஸ். ஆர் எங்கள் காலை வாரி விடுவார்! ஒரே சிரிப்பு. விஷயம் தெரியாத வாத்தியை இறக்கி வைத்து விடுவோம். அதுவும் கல்லூரியில் கேட்கவேண்டாம். கோட்டும் ஸூட்டுமாக வரும் மிஸ்டர்.எக்ஸ் ( நாங்கள் வைத்த செல்லப்பெயர்) பவுடர் பூசுவார். பாடம் தடுமாறுவார். கோ-எஜுகேஷன். விடலை பசங்க. நேர்மாறாக, சொல்லின் திறனால் எம்மை கட்டிப்போடும் ராமு சார் ரொம்ப பாபுலர். அதுவும் செல்விகளிடமும். இத்தனைக்கும் அவருக்கு டிரஸ் சென்ஸ் கிடையாது. நல்லுதாணமாக இருக்கவேண்டும் தான்; எளிதல்ல. வேஷம் போடலாம். உதவவேண்டாம். ஆனால், விதி முறிக்கக்கூடாது. ஆறாங்கிளாசில் ஒரு தடியனுக்கு என் விடைத்தாளை காட்டச்சொன்னார், சூபர்வைசர். மறுத்து விட்டேன். உன்னை ஃபையில் ஆக்குவேன் என்றார். நான் பெருங்குரல் எடுத்து அழுதேன். பாவ்லா தான். தலைமை ஆசிரியர் வந்தார். தர்மம் வாகை சூடியது. இன்று தோன்றுகிறது, கொடுத்திருக்கலாம் என்று. எனக்கு இருந்த வசதி அவனுக்கில்லை, பாவம். ஆந்தையின் மீதம் ஐந்து, பிறகு. ஆமாம்! இந்த ஆந்தை மைண்ட் மேப்பிங்க் நீங்கள் படைத்ததா? அல்லது ஆசிரியர் நெட்டிலிருந்து பிடுங்கிப்போட்டாரா?
“எல்லா வழிகளிலிருந்தும், உயரிய சிந்தனைகள் எல்லா நேரத்திலும் நம்மிடம் வந்து கொண்டேயிருக்க வேண்டும்”~ சரி தான். ஆனால், தேடினால் தானே, அவை வரும். அந்த உத்தி ஆசிரியர்கள் சொல்லித் தரவேண்டும். நன்றி,இன்னம்பூரான்
important and very beautiful
Good article and hilarious jokes.
Guess it is not only good teachers that are responsible to seed knowledge into students or young kids. It should continue in the house as well by providing such atmosphere and also the support.
Most of the knowledge I believe are learnt outside the schools and colleges by exploring different things. Exploring different things while in school are still a long way to get appreciated by parents or society these days.