அவ்வை மகள் 

கணக்கு போடணும்னா ஆகாயம் மாதிரி அகலம் வேணும்.

பாயின் கேர் எனும் அலாதியான போக்கு கொண்ட கணித மேதையைப் பற்றிப் பேசினோம். பாயின் கேர் மற்றும் ராமானுஜனின் கணித வரலாற்றுச் சிந்தனைகளை கவனிப்பது நல்லது எனவும் பார்த்தோம். இவ்விருவரின் கணித வரலாற்றுச் சிந்தனைகளைக் காணும் முன்னர் இராமானுஜன் தொடர்பான சில விஷயங்களையும் இன்ன ஒரு சில விஷயங்களையும் அறிந்து கொள்ளுவது நன்று.

பாயின் கேர் போன்று உலகப் புகழ் பெற்ற ஒரு கணித மேதை இராமானுஜன். இருவரும் சம காலத்தவர்கள். பாயின் கேரின் சாதனைகள் அசாத்தியமானவை என்றால் இராமானுஜனின் கண்டுபிடிப்புகள் பிரமிக்க வைப்பவை. இராமானுஜன் இத்தகையக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிராவிட்டால் இவை போன்ற “சமாச்சாரங்கள்” கணிதத்திலே இருக்கின்றன என்கிற “பிரக்ஞை” எழுவதற்கும் கூடக் குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டாவது ஆகியிருக்கும் என்று பேராசிரியர் ஹார்டி வாய் விட்டுப் பாராட்டியிருக்கிறார்.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அவ்விதப் “பிரக்ஞை” வந்து அதற்கு மேல் கணித ஆய்வாளர்கள் இவற்றை ஆய்வு செய்யக் களம் இறங்கியிருந்தாலும் கூட இராமானுஜன் செய்திருக்கிற கண்டுபிடிப்புகளை அவர்கள் நிகழ்த்த இன்னும் ஒரு நூற்றாண்டு பிடிக்கும்.

இராமானுஜனைப் போல–அத்தனை எண்ணிக்கையில் மட்டுமல்ல-அத்தனைச் செறிவாக–அத்தனை தீர்க்க தரிசனத்தோடு-அத்தனை நிபுணத்துவத்தொடு–அதுவும் அத்தனை “வெரைட்டி”யோடு அதுவும் – அத்தனைச் சிறு வயதில் – அதுவும் உலகத் தளத்திலிருந்து தொடர்பற்றதொரு நாட்டிலிருந்து – அதுவும் அத்தனை அடிப்படையற்ற வறுமைச் சூழலில் இருந்து எவரேனும் கணிதக் கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்க முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல முடியும்.

இவற்றையெல்லாம் ஒரு மனிதனால் செய்திருக்க முடியுமா என்கிற பிரமிப்பை – சொற்பதம் கடந்த புளகாங்கிதத்தை நமக்குள் ஏற்படுத்தும்படியான பிரம்மாண்டத்தை நிகழ்த்திப் போயிருக்கிறவன் இராமானுஜன்!

“காந்தி எனும் மனிதன் சதை – தசை – இரத்த ஓட்டத்தோடு – இந்த மண்ணின் மீது வாழ்ந்து போந்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று நெக்குருகி ஐன்ஸ்டீன் வாய் விட்டு – நெகிழ்ந்து பாடினானே அது போன்றதொரு – ஏன் அதைவிடவும் ஒருபடி மிஞ்சும் புகழாரத்திற்குச் சொந்தக்காரன் ராமானுஜன்!
அதுவும் ராமானுஜன் பட்டிருக்கிற பாடு, அனுபவித்திருக்கிற சொல்லொணாத்துயர்!

‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்று அவ்வை கதறினாளே அவ்வாறே ஒவ்வொரு நாளும் நிதர்சனமாய்க் கதறினவன் இராமானுஜன்!

கணக்குப் போட்டுப்பார்க்க – பதிவு செய்து வைக்க – பேப்பர் – நோட்டுப் புத்தகம் – இங்க் – வாங்கக் கூட முடியாமல் அவன் பட்டிருக்கிற அவஸ்தை!

சாக் பீசாலும் – பலப்பத்தாலும் போடவேண்டியிருந்த காரணத்தால் – போட்டு அழிக்க வேண்டியிருந்த நிர்ப்பந்தத்தால்  அவன் பதிவு செய்யாமலேயே மறைந்து போன கணக்குகள் எண்ணிறந்தவை! எவரே அவற்றை மீட்டுத்தர முடியும் அல்லது மீண்டும் உருவாக்கித் தரமுடியும்? அது நிரந்தரமான இழப்பல்லவா?

ஹார்டி சொல்லுவார்: “ஏழ்மை எனும் ஒன்று இராமானுஜத்தின் அளப்பரிய பொக்கிஷங்களை உண்டுவிட்டது” என்று.

செல்வம் ஏழ்மையைப் போக்கும் என்பார்கள் – ஆனால் ஏழ்மை செல்வத்தினை உண்ணும் ஒப்பற்ற சிந்தனையை யதார்த்தத்தை இராமானுஜனின் மூலம் ஹார்டி நமக்குக் காட்டுகிறார்!

வறுமை என்பது ஒப்பற்ற உயர்செல்வமான – அறிவுச்செல்வத்தைப் – பதிவு செய்யவும் கூடத் தடையாய் அமையும் என்பதனை – திறமை மிகவுள்ள எளிமையான மனிதர்கள் வெளிச்சத்திற்கு வரவொட்டாமல் – வறுமை எத்தனைப் படுத்தும் என்பதனை ஹார்டியின் இந்த வாசகம் படம் பிடித்துக் காட்டுகிறது.

“Slumdog Milliannaire” என்ற திரைப்படத்தின் கதாநாயகனை – அச்சிறுவனை – உண்மையில் பல பேர் கட்டாயம் பார்த்திருப்பார்கள் – சென்னையில் சுற்றித் தெரிந்து கொண்டிருந்தவன் – பல்லவன் பஸ்சில் ஏறி எங்கைக்கு எங்கோ போவான் – போட ஒழுங்கான உடுப்பில்லை – பசி பசி – அவனைப் பசி ஆட்டிப் படைத்த வேதனையை நான் கண்டிருக்கிறேன் – பல்லவன் கண்டக்டர்கள் பரிதாபம் பார்த்து ஓசியில் அவனைப் பஸ்சில் பயணிக்க அனுமதித்ததையும் – அவர்களுக்கு ஓட்டல்களில் கிடைக்கும் ஓசிச் சாப்பாட்டை அவனுக்கு அளித்து அவனை ஆதரித்ததையும் பலரும் அறிவார்கள்.

ஒருமுறை அவனை 21E கண்டக்டர் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் – அவனை எங்கள் வீட்டிற்குக் கூட்டிகொண்டு போனேன் – குளிக்க வைத்து – உடுப்புக்கள் வழங்கி – உணவு தந்து – நீ இங்கேயே இருந்து கொள் என்று சொன்னேன் – ஒரு நாள் இருந்தான் – அடுத்த நாள் “மிக்க நன்றி நான் புறப்படுகிறேன் என்றான்” “உன்னை இங்கேயே இருந்து கொள்ளலாம் என்றல்லவா சொன்னேன்!” என்றேன். “சொன்னீர்கள் அக்கா. ஆனால் வீட்டிற்குள் இருந்து என்னால் இயங்க முடியாது –வேலிகளுக்குள் என்னைப் பொருத்திக் கொள்ளும் சுபாவம் எனக்கு இல்லை – சராசரி மனித வாழ்க்கைக்குள் எனது இயக்கங்கள் அர்த்தமில்லாதவையாகத் தோன்றுகின்றன!

“நான் உன்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைக்கிறேன்! எவ்வளவு வேண்டுமானாலும் படிக்க வைக்கிறேன்!”

சிரித்தான் – சிரித்தான் – அவனது சிரிப்பு அடங்க நிமிடங்கள் ஆயின.

“என்னப்பா?”

“பள்ளிக்கூடம்னதும் சிரிப்பு தாங்ககலக்கா! தெனத்திக்கும் கிளாச விட்டு வெளியில தான் நிப்பேன் – எனக்கு லூசுன்னு பேரு – லொட லொடாண்ணு கேள்வி கேட்டு தொந்தரவு பண்றனாம் – கிளாஸ் எடுக்க முடியலியாம் – தெனத்துக்கும் ஒவ்வொரு கிளாசுலயும் வெளியத்தான்! எல்லாப் பாடத்திலேயும் எனக்கு பெயில் மார்க் தான்- ரெண்டு வருஷம் உக்கார வச்சுட்டாங்க! மத்யானம் அந்த சாப்பாட்டுக்காக எல்லாத்தையும் பொறுத்துப்பேன்! சாப்பாட்டு ஆயா கிட்ட கேட்டு கொஞ்சம் கூட வாங்கித் தின்னுவங்கா. நாள் முழுக்க நிக்கறது பசி ரொம்ப ரொம்ப எடுக்கும் – தாக்குப்பிடிக்க முடியாதுக்கா!”

“இப்படி வெளிய நிக்கற நேரத்தில கரி வெச்சு சுவத்துல கணக்கை போட்டுத் தள்ளிப்புட்டேன் – எச் எம் வெளாசிப் புட்டாரு! ஒன்ன மாதிரி ஒதவாக்கரைங்களுக்கு ஸ்கூல் கட்டி வெக்கலை போடான்னுப்புட்டாரு!”

என் கண்ணில் அருவி! வழிந்தது நீரா? குருதியா? என் ஜீவன் கரைந்தது!

பாலகன் பேசுகிறான்:

“அந்த எச் எம் சொன்னதும் சரின்னு பட்டது – சோத்துக்காத் தானே நான் ஸ்கூலைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டிருந்தேன் – கணக்குன்னா எனக்கு உயிர் – எனக்குக் கணக்குல வர்ற சந்தேகத்துக்கு அங்க உதவி பண்ண யாருமே இல்லையே! அவங்க போடற கணக்கு சுவாரஸ்யம் இல்லாம இருக்குங்கறது மட்டுமில்ல – அந்தக் கணக்குங்க ஒவ்வொண்ணையும் வேற மாதிரியும் போட முடியும்! இப்படிப் போடலாமே டீச்சர் என்றால் என்மேல் பொல்லாப்பு வந்துடுது அவங்களுக்கு.” ‘நீ பெரிய ஜீனியசாக்கும்! நீ என்ன பி. எஸ். ஸி படிச்சிருக்கயா எம்.எஸ்.ஸி படிச்சிருக்கயா?’ன்னு வெடுக் வெடுக்குன்னு திட்டுவாங்க! அதோட இல்லாம அந்தக் கணக்கெல்லாம் எனக்குத் தூசிக் கணக்கா இருக்கு – ரொம்ப ரொம்ப சுலபம்!”

“எனக்குக் கணக்குன்னா அதில சவால் இருக்கணும் – விறு விறுப்பு இருக்கணும்! – இதச் சொன்னேன் – “ஒன்னோட அப்பாவை வேணும்னா ஒனக்காக ஸ்பெஷலா ஸ்கூல் கட்டச்சொல்லு – ஒனக்கு இந்த வகுப்பில இடம் இல்ல” ன்னு வேற பேச்சு!”

“தம்மாத்துண்டு நோட்புக்ல – ஸ்லேட்ல என்னால கணக்குப் போட முடியாது – இது கர்வம் இல்ல – இது என்னால் முடியாதது – இதச் சொன்னபோது எனக்கு மண்டைக் கனம்னு சொன்னாங்க! ஒரு வேளைச் சோறு கட் – மத்தபடி ஸ்கூலுக்குப் போகாததால எனக்கு நஷ்டம் ஒண்ணும் இல்ல!”

சோகம் விலகி, கண்ணில் பிரகாசம் காட்டித் தொடர்கிறான்,

“கணக்கு போடணும்னா ஆகாயம் மாதிரி அகலம் வேணும்! எனக்கு எழுதிக் கட்டுப்படியாகாது! எண்ணத்துல உருவாக்கிக் கண்ணாலேயே கணக்குப் போடுவேன்! எனக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது – எந்தக் கணக்க வேண்டுமானாலும் போடுவேன்! இதத்தான் நீ போடணும் – இப்படித்தான் போடணும்னா என்னால அது முடியல!”

“எனக்கு வேண்டியது சுதந்திரம் – குப்பத்தில் அது நிறையவே கிடைக்குது! அப்புறம் – பல்லவன் பேருந்துப் பயணம் சுகமா இருக்கு – ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து விட்டன்னா – வானம் என் கையிலதான்! ஆனா இந்தப் பசி – இந்தப் பசி இந்த ஒண்ணுதான் எனக்கு ஒரே தொந்தரவு – இதற்கு ஒரு வழி பிறந்துடிச்சின்னா நானும் என் கணக்கும்னு போயிடுவேன்!”

“இங்கு வா, எப்போது வேண்டுமானாலும் வந்து சாப்பிடு!”

“முடியும்போது வருகிறேன் – எனக்கு ஒரு கணக்கு – ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திக்கு!”

அந்தச் சிறுவனின் இந்தப் பேச்சைக் கேட்டு பிரமித்துப் போனேன் – இந்த வாசகம் ஆதி சங்கரரின் மொழி போலத் தெரிந்தது! பாரதியின் தொனி அதில் இருந்தது – இராமானுஜனின் கதறல் அதிலே இருந்தது.

இராமானுஜனும் பாரதியும் சங்கமித்து உருவாக்கிய குழந்தையாகத் தெரிந்தான் அவன்!

அரசவைக் கவியாக அவனை அமர்த்திய காலையில், நான் இந்த சமஸ்தானத்தில் – இந்த அரண்மனையில் –இந்தப் பதவியை – படாடோபத்தை வைத்துக்கொண்டு செய்யப்போவது என்ன என்று பதறினானே – கதறினானே பாரதி அந்தக் கூக்குரல் அன்று எங்கள் வீட்டில் ஒலித்தது அச்சிறுவனின் குரலில்!

“எனது முதல் பிரச்சினை பசி ஒன்று தான் – இது தீருமளவுக்கு மட்டும் எனக்கு உதவித் தொகை கிடைத்ததென்றால் – நான் எனது கணித ஆராய்ச்சியில் இன்னமும் தீவிரமாக ஈடுபட முடியும்” என்று உருக்கமாகக் கடிதம் எழுதினானே இராமானுஜன் அதன் உண்மைப் பிரதிநிதியாய் அன்று அந்த சிறுவன் என் முன்னே நின்றான்!

பள்ளிக்கூடத்தில் பெயிலாக்கப்பட்டதோடல்லாது வெளியேற்றவும் பட்ட இராமானுஜனை அன்று நான் கண்டேன்!

“நன்றி அக்கா! நான் வருகிறேன்!” வெளியேறினான்!

கொஞ்ச நாட்களில் அவன் சென்னையில் எங்குமே காணப்படவில்லை!

மேலும் பேசுவோம்.

 

படத்திற்கு நன்றி:http://www.ramanujanmathsociety.org

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.