இன்னும் புதிதாய்ப் பிறப்பேன்
பிச்சினிக்காடு இளங்கோ
இன்று புதிதாய்ப் பிறந்தேன்
இன்னும் புதிதாய்ப் பிறப்பேன்
நன்றாய்ப் பொழுது புலரும்
நன்றாய் எல்லாம் மலரும்
கவிதை கோடி பிறக்கும்
கவிதையில் உண்மை சிறக்கும்
கவிதைக் கண்களால் விழிப்பேன்
காட்சிக் கவிதைகள் வடிப்பேன்
மனிதம் பாடிக் களிப்பேன்
மனிதர் வாடத் துடிப்பேன்
கனியாய்ச் சொற்கள் உதிர்ப்பேன்
கனிவாய் நட்பை வளர்ப்பேன்
உறவில் நட்பில் வேடம்
அறவே இல்லாப் பாடம்
நாளும் நடத்தி வாழ்வேன்
நானும் வாழ்ந்து வெல்வேன்
எல்லை களில்லாத் தேசம்
இதயந் தோறும் நேசம்
பொங்கும் நாள்வர வேண்டும்
பொலியும் மாட்சிகள் வேண்டும்
வானம் போலக் கடலும்
காற்றைப் போல் நீரும்
பொதுவாய்ப் போகும் காலம்
பூத்தால் வெல்லும் ஞாலம்
படத்திற்கு நன்றி:http://thurgood.deviantart.com/art/The-Sounds-of-Nature-76640947
சிறந்த எண்ணங்கள், சிறந்த சொல்லாட்சி, கவிஞர்களுக்கு மட்டும் தான் இவ்வளவு உயரத்தில் அமர்ந்து, இவ்வுலகை நோக்கும் சிந்தனை தோன்றும் போலும்.