வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்
சாந்தி மாரியப்பன்
பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்த
கூட்டுக்குடும்ப விழுதுகள்
அற்றும் இற்றும் போன பின்
தனிமை கொன்று கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மரத்தில்
மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,
மனித நேயத்தைப் போலவே.
சென்றவர்களெல்லாம்
மீண்டும் வரக்கூடுமென்ற
மீதமிருந்த நம்பிக்கையுடன்
ஆகாயத்துடன் உரையாடியபடி
மேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்
ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது
பறவைகளின் தாலாட்டுக்குரல்,
இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.
தனிமைக்கடத்தியாய்
ஏகாந்தம் கலைத்த தென்றலோ
வனமெங்கும் பூச்சொரிகிறது
ஏக்கம் சுமந்த வேர்களில்..
கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்
வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி
நெகிழ்ந்து சிரிக்கிறது
ஒற்றை மரம்.
படத்திற்கு நன்றி:http://widescreen-landscape-wallpapers.blogspot.in/2008/10/1440-x-900-landscape-wallpapers.html
நல்ல கவிதை..
பறவைகளின் தாலாட்டுக்குரல்
இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.
மரம் இருப்பது எண்ணி மகிழ்ச்சியும் விரைவில் வெட்டப்படுமோ என்ற கவலையும் தருகிற சிந்தனை வெளிப்படுகிறது.
அன்புடன்
பிச்சினிக்காடு
வணக்கம் இளங்கோ,
ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..