இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …….. (2)

0

 

சக்திசக்திதாசன்

சனிக்கிழமை (07.04.2012) காலை எழுந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ” இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு என்ன வித்தியாசமாகப் பண்ணலாம்?” என என் மனைவி வினவ இருவருமே மண்டையைப் போட்டுத் துருவினோம்.

விளைவு ……

காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அண்மித்த ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் சென்று காரை நிறுத்தி விட்டு பேருந்துப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.

பேருந்துப் பயணத்தில் நாங்களிருவருமே சிறு குழந்தைகள் போன்றே மகிழ்வுடன் இரட்டை தட்டுப் பேருந்தில் மேல்தட்டில் அமர்ந்து கொண்டே வெளிக் காட்சிகளை ரசித்த வண்ணம் சென்றோம்.

பணிகளின் காரணமாகவும், எமது உடம்பின் வயது முதிர்ச்சியின் தளர்வினாலும் நாங்களிருவருமே மோட்டார் கார்களில் தான் பயணம் செய்வது வழக்கம். இப்பேருந்துப் பயணம் எமது வாலிப வயது லண்டன் பயணங்களை ஞாபகமூட்ட மனதில் கொஞ்சம் இளமை தலை காட்ட ……. மகிழுலாவை ஆரம்பித்தோம்.

பேருந்தில் ஏறித்தான் உட்கார்ந்து விட்டோம், ஆனால் எங்கே போவது ? ……… அக்கேள்வி எமக்கு சஞ்சலத்தைத் தரவில்லை. ஏன் என்கிறீர்களா? ஒரு நேர அட்டவணையின் படி வாழ்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள், வெளியே செல்லும் போது ஒரு இலக்கை வைத்து அதற்குரிய நேரத்திற்குள் சென்று வரவேண்டும் எனும் நேர அழுத்தத்தினுள் அலைக்கழிபவர்கள்….. திடீரென கண்ணாடி கூட்டுக்குள் இருந்த மீன்களை ஆழிக்குள் வீசியெறிந்தால் எத்தகைய கட்டுப்பாடற்ற மகிழ்ச்சியைக் கொள்ளுமோ அத்தகைய மகிழ்ச்சியுடன் …….

எங்காவது போவோம் என்னும் முடிவுடன் பிரயாணத்தை ஆரம்பித்தோம்.அப்போது எமது முன்னால் இருந்த ஆங்கிலேயர் தனது தினசரிப் பேப்பரைப் பிரிக்க அதன் முதல் பக்கத்தில் , “ஆக்ஸ்பிரிட்ஜ் கைவலிப்புப் படகுப் போட்டி” என்னும் தலையங்கம் கொட்டையெழுத்தில் கண்முன்னே தலைவிரித்தாடியது.

என் கண்கள் வினாவுடன் என் மனைவியின் கண்களைத் தழுவ அதே செய்தியைக் கண்ணுற்ற அவளது விழிகளும் புன்னகையுடன் பதிலிறுத்தது.

என்ன லண்டன் வாழ்க்கையான இந்த முப்பத்தியேழு வருடங்களில் ஒருமுறையாவது உலகப்பிரசித்தி பெற்ற “ஆக்ஸ்பிரிட்ஜ் படகுப் போட்டியை” ஒருமுறையாவது நேரில் பார்க்கவில்லையே எனும் ஆச்சரியம் எம் இருவரின் மனதிலும் ஒரேவேளையில் ஓடியது போலும்.

சரி போகும் இடம் தெரிந்து விட்டது , ஆனால் “பாவாய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்” என்று இசையுடன் அழைக்குமளவிற்கு அப்படகுப் போட்டி நடக்குமிடம் அருகாமையில் இல்லையே அதற்குக் குறிப்பாக பேருந்தில் பயணித்துச் செல்வதென்றால் ……….

இங்கிலாந்திலே எப்போதுமே எனக்கு பெருமையளிக்கும் விடயங்களில் ஒன்று, தெரியாத ஒரு இடத்திற்குச் செல்வதென்றால் அதற்குரிய பிரயாண வழிகளைக் கண்டறியும் முறையில் உள்ள இலகுத்தன்மையே அது.

சரி பேருந்து சாரதியிடமே அந்த படகுப் போட்டி நடக்கும் இடத்திற்குப் போவதற்கு எந்தெந்த இலக்க பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று கேட்டோம்.

புன்னகைத்தபடியே அழகான விளக்கத்தை அள்ளித் தெளித்தார் அந்த பேருந்துச் சாரதி……

ஒவ்வொன்றாக நான்கு பேருந்துகளில் ஏறி ஏறி மாறினோம் மொத்தமாக ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பின்னால் “பட்னி பிரிட்ஜ்” (Putney Bridge) எனும் படகுப் போட்டி ஆரம்பமாகும் இடத்திற்கு வந்தோம்.

தெருவெல்லாம் ஒரே பரபரப்பு. விளக்குக் கம்பங்களில் வண்ண வண்ண பலூன்கள் கட்டப்பட்டு வீசு தென்றலோடு ஆசைந்தாடிக் கொண்டிருந்தன. ஊரிலே திருவிழாக் காலங்களில் தெருவிலே காணப்படும் மகிழ்ச்சி கலந்த முகங்கள் போன்ற மகிழ்ச்சிகரமான முகங்களுடன் பலர் அப்படகுப் போட்டி ஆரம்பமாகவிருக்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.

நாமிருவரும் தேம்ஸ் நதியின் மேல் கம்பீரமாக நின்ற அந்த பாலத்தின் மீது ந்டந்தோம். சலசலவென்று, சுற்றுச்சூழலை மதிக்கத்தவறியவர்களால் தன்மீது வீசியெறியப்பட்ட பிளாச்டிக் போத்தல்கள் மற்றும் அழுக்கு கடதாசிகளை எந்த வித அலுப்புமில்லாமல் சுமந்து கொண்டு ஓடியது தேம்ஸ் நதி.

அந்த நதிக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் …………
சுயநலம் கொண்ட எம்மனித இனத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்திருக்காதா? ……

பாலத்தைக் கடந்து அந்நதிக்கரையோரமாய் கும்பலோடு கோவிந்தா என நடக்க ஆரம்பித்தோம் நடந்து கொண்டிருந்த மனிதர்கள் பின்னால் சும்மா நடந்து கொண்டிருந்தால் எப்படி என்று என் மனைவி வினவுவதற்கும் இரண்டு போலிஸ் அதிகாரிகளை நாங்கள் நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

வலுவாக வரவழைத்த ஒரு புன்னகையின் உதவியோடு அப்போலிஸ் அதிகாரிகளைப் பார்த்து,

“படகுப் போட்டி ஆரம்பிக்கும் இடம்…” என ஆங்கிலத்தில் வினவுவதற்கும், இயற்கையாக சிரித்தபடியே, “இதோ இங்கே இருந்துதான் ஆரம்பிக்கப் போகிறது” என்ற போலிஸ்காரர் சும்மா விடவில்லை ” இந்த இடத்தில் நின்று பார்த்தீர்களானால் புழுதியைக் (நீரைக் கிழித்துக் கொண்டு) கிளப்பிக் கொண்டு படகுகள் போனதும் அவர்களின் முதுகைத்தான் உங்களால் பார்க்க முடியும் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து போனீர்களால் போட்டி ஆரம்பித்தப் பின்னால் அவர்கள் உங்களைப் படகுகளில் கடந்து செல்லும் போது இன்னும் நன்றாகப் பார்க்கலாம்” என்று அறிவுறுத்தினார்.

இதுதான் இவர்களின் உயர்ந்த நாகரீகம் ! கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலிறுத்து விட்டு நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்காமல் அந்தப் போட்டியை எப்படி முறையாக ரசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஒருவாறு இன்னும் கொஞ்சதூரம் நாம் நடக்கத் தொடங்கியதும் எம்மீது ஏனோ சூரியபகவானுக்குக் கோபம் வந்து விட்டது போலும். முகில்களுக்குள் சென்று பதுங்கிக் கொண்டார் …..

வசந்தகால மிதமான சூடு மறைந்து உடம்பு கொஞ்சம் குளிரில் சடுகுடு ஆடியது ………

ஒருவாறு அந்நதிக்கரையோரத்தில் எமது சிற்றறிவுக்கு எட்டியவாறு எங்கே இருந்தால் நன்றாக பார்க்க முடியும் என்பதை அனுமானித்து ஓரிடத்தில் எம்மை நிறுத்தி வைத்துக் கொண்டோம்.

சரி இவ்வளவு சொல்லி விட்டேனே ! இப்போட்டியின் விளக்கத்தைக் கொஞ்சம் தர வேண்டாமோ ?

இங்கிலாந்திலே உலகப்பிரசித்தி பெற்ற இரு பல்கலைக்கழகங்கள் ஆக்ஸ்போர்டு (Oxford), கேம்பிரிட்ஜ் (Cambridge) என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இவையிரண்டையும் இணைத்துக் கூறுவதானால் “ஆக்ஸ்பிரிட்ஜ்” (Oxbridge) என்பார்கள்.

இப்படகுப் போட்டி இவ்விரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நடப்பதாகும்.

இது ஆரம்பித்ததின் பின்னனியைப் பார்ப்போமா ?

இந்தப் படகுப் போட்டி ஆரம்பித்து இவ்வருடம் 158 வது போட்டியாகும். 1829 சார்ள்ஸ் மேரிவேல்ஸ் (Charles Merivale) எனும் கேம்பிரிட்ஜ் , சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தனது பள்ளி நண்பரான சார்ல்ஸ் வேர்ட்ஸ்வேர்த் (Charles Wordsworth ) என்பவருடன் விடுத்த சவாலின் விளைவாக ஆரம்பிக்கப்பட்டது என்கிறார்கள்.

இரண்டு பல்கலைகழகங்களுக்கும் இரண்டு படகுகள். ஓக்ஸ்வேர்ட் பல்கலைகழகம் நீல வர்ணத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் மஞ்சள் வர்ணத்தையும் கொண்ட படகுகளில் தலா 7 படகு வலிக்கும் வீரர்களையும் ஒரு வழி காட்டியையும் கொண்ட அமைப்புடன் இந்தப் படகுப் போட்டி நடத்தப்படுகிறது.

நடுநிலையாளராக இரண்டு பல்கலைக்கழகங்களாலும் இணக்கம் காணப்பட்ட ஒருவர் பணியாற்றுகிறார்.

158 வருடங்களாக இப்போட்டி நடத்தப்படுகிறது. 37 வருடங்கள் நானும், 34 வருடங்கள் என் மனைவியும் இந்த நாட்டில் வசித்து வருகிறோம். இதுவரை உலகப்பிரசித்தி பெற்ற இந்தப்போட்டியைச் சிலதடவைகள் தொலைக்காட்ச்சியில் பார்த்திருந்தாலும் இதுதான் முதற்தடவையாக நேரடியாகச் சென்று பார்த்தும் அதன் முழுஅள்விலான விபரங்களை உன்னிப்பாக அறிந்தும் இருக்கிறோம் என எண்ணும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

158வது முறையாக, இம்முறை நடத்தப்பட்ட இப்போட்டி எப்போதும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையோ அன்றி ஏப்ரல் மாதத்தில் முதல் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. அந்த வழமையில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் சனிக்கிழமை நடைபெற்றது.

நாம் சென்ற காரணத்தினாலேயோ என்னவோ இம்முறை சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன. என்ன என்கிறீர்களா ?

இந்த படகு ஓட்டப்போட்டி நடைபெறும் தூரம் 4 மைல்களாகும். ஓட்டப்போட்டி ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்தது இரண்டு படகுகளும் ஒன்று மாறி ஒன்று முந்திக் கொண்டு சென்றது முடிவு இடத்திலிருந்து ஒரு 600 மீட்டர் தூரத்தில் இரண்டு படகுகளின் துடுப்புகளுக்கும் மத்தியில் அத்துடுப்பு வீரர்கள் கண்டது………….

நம்ப மாட்டீர்கள் மனிதத்தலை …….. என்ன ஏதோ பிணத்தின் தலை என்று எண்ணிப்பயந்து விடாதீர்கள் அது இத்தலிய பிரபல்யம் வாய்ந்த புராதான பல்கலைக்கழகங்கள் போன்ற அந்தஸ்தில் உயர்ந்த மைப்புக்களை எதிர்க்கும் ஒரு அவுஸ்திரேலிய ஆட்சேபணையாளரின் தலை……

என்ன புரியாமல் விழிக்கிறீர்களா …….

இந்த படகுப் பந்தயத்தைக் குழப்புவதன் மூலம் தொலைக்காட்சிகளில் தனது ஆட்சேபனைக்கு ஒரு விளம்பரம் கொடுப்பதற்காக அந்தக் குளிர்ந்து நடுங்கும் தேம்ஸ் நதியினுள் பாய்ந்து தண்ணீருக்கடியில் நீந்தி [படகுகளின் துடுப்புகளுக்கு ம்த்தியில் தோன்றியதன் மூலம். அப்படகுப் பந்தயத்தை நிறுத்தி விட்டார்.

அப்புறம் என்ன ஒரே பரபரப்பு. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆத்ரவாளர்களுக்கு ஒரே ஆத்திரம் ஏனெனில் ஓட்டப்போட்டி நிறுத்தப் பட்டபோது ஆக்வேர்டு படகுதான் முன்னனியில் நின்றது. போலீசார் நீல விளக்குகளின் வெளிச்சம் பீறிட படகுகளில் வந்து அவ்வெதிர்ப்பாளரைக் கைதுசெய்தார்கள்.

ஒரு ஆங்கிலப்படம் செலவில்லாமல் பார்த்து விட்டோம் போங்கள் …………………..

நிறுத்தப்பட்ட ஓட்டப்போட அந்த 600 மீட்டர் தொலைவிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. மூச்சிறைக்க இரு பல்கலைகழக வீரர்களும் துடுப்புகளை வலிக்க, வழிகாட்டும் இருவரும் அடித்தொண்டையில் கத்த மிகவும் தீவிரமான போட்டியில் இருந்த இரு படகுகளின் துடுப்புகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் படகு கொஞ்சம் வழிமாற…. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் படகின் துடுப்புகளில் சிக்க …..

ஜயகோ ….. பரிதாபம் ஆக்ஸ்போர்டு….. ஆமாம் அவர்களின் துடுப்புகளில் ஒன்று முறிந்துவிட பிறகென்ன கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வீரர்கள் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிக் கொண்டார்கள்.

போட்டியின் முடிவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வீரர் ஒருவர் களைத்து மயங்கி விழ அனைவருமே பதறி விட்டார்கள். அவர் ஆம்புலன்ஸ் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டார்.

நாகரீகமான விளையாட்டின் அடையாளமாய் கேம்பிரிட்ஜ் வீரர்கள் மயங்கி விழுந்த அக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வீரரின் உடல்நிலை அறியாததினால் தமது வெற்றிக்களிப்புகளில் ஈடுபடவில்லை என்று அறிவித்தார்கள்.

இதுவரை நடந்த 158 போட்டிகளில் கேம்பிரிட்ஜ் 81 தடவைகளும், ஆக்ஸ்போர்டு 76 தடவைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு தடவை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருக்கிறது. அது நடந்தது 1877ம் ஆண்டு .

சம்பிரதாயப்படி தோல்வியடைந்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழக வீரர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வீரர்களிடம் அடுத்த வருட போட்டிக்கு சவால் விடுத்துள்ளார்கள்.

ஒரே களேபரமாக நாம் கலந்து கொண்ட முதலாவது “ஆக்ஸ்பிரிட்ஜ் படகுப் போட்டி” முடிவுற்றது.

எந்தவித செலவுமில்லாமல் ஆற்றிலே ஓடிய வேகப்போலிஸ் படகினையும், ஆற்றிலே வந்த ஆம்புலன்ஸ் படகினையும், அந்தஸ்திலே உயர்ந்த அமைப்புகளின் சம்பிரதாய களிப்புக்களை எதிர்க்கும் புரட்சியாளரையும் கண்டு களித்த மகிழ்வோடு, ஒரு உணவுவிடுதியில் எமது இரவு உணவை முடித்துக் கொண்டு இரவுநேரப் பேருந்து உலாவின் மூலம் எமது வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி வைத்திருந்த எமது மோட்டார் வண்டியில் ஏறி சனிக்கிழமைப் படலத்தை முடித்துக் கொண்டோம்.

மீண்டும் ஒரு மடலுடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

படங்களுக்கு நன்றி

http://www.corfu-pictures.com/travel/europe/england/london/thames-river.htm

http://www.theboatrace.org/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.