“மே தினம்”
நெற்றி வியர்வைக்கு மகுடம்  சூட்டும்
வெற்றித் திருநாள்!

உழைக்கும் கைகளுக்கு உலகே மரியாதை செய்யும்
உன்னதப் பொன்னாள்!

கதிரெழும் முன் களம் புகுந்து
கதிரறுக்கும் குடியானவன்
களைப்பு முகத்துக்கு  களிப்புப் பூசும்
கண்ணியத் திருநாள்!

தனியுடைமைத் தத்துவங்களைத்
தகனம் செய்து விட்டு
பொதுவுடைமைக் கோட்பாட்டைப்
புரவியேற்றும் பொன்னாள்..நன்னாள்!

இன்னாளில்

சீரிய நெறியாளார் மார்க்ஸை மதித்து
சிந்தனை வீரர் பெரியாரைத் துதித்து
வாழ்வியல் வகுத்த வள்ளுவனைப் பாடி

முற்போக்குப் பாதைகள்
நாற்திசையும் விரிந்தோட

பிற்போக்குக் கும்பல்கள்
எரிதழலில் கருகிச் சாய

இல்லாரெல்லாம் உள்ளோராய்
இனம் மாறி மனம் மகிழ

எல்லோருக்கும்
எல்லாமென்ற
ஏற்ற நிலை
எதிர் வந்திட

சூளுரைப்போம்  மே தினத்தில்
மேதினியில் நம் நாடே
மேன்மை நாடென்றாகிட…!

முகில் தினகரன்
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *