குருவாய் வருவாய்
சு.கோதண்டராமன்
குருவாய் வந்தருள குகனை நான் வேண்டி நின்றேன்
குழந்தையாய் வந்தெனக்குக் கூறிட்டான் உண்மையினை
சென்றதைக் குறித்துக் குமையாதே, அது வேண்டாம்.
இன்றெது உன் கண் முன் உள்ளதோ அதைக் கவனி
வருவது பற்றியொரு கவலை ஏன்? கற்பனை ஏன்?
இருப்பது இக்கணத்தில் இதனில் வாழ் என்றுரைத்தான்.
வாயால் உரைக்கவில்லை வார்த்தையிலாச் செய்தியது.
சேயாம் இவன் முகத்தில் தெரிந்திட்ட காட்சியது.
நேற்று வலித்ததை நினைவில் வைத்திருந்து
தேற்றுவார் தேடி தினமும் அழமாட்டான்
பசி வரும் கணத்துக்கு முந்தியதோர் கணம் வரையில்
வசீகரப் புன்னகை மாறாமல் படுத்திருப்பான்
சிறுவா உன் முன்னர் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
ஒரு வார்த்தை உரையாமல் உபதேசம் தந்ததனால்
படத்திற்கு நன்றி:
http://krishnan-rajagopalan.blogspot.in/2011/10/beautiful-subramanya-swamy-lord-muruga.html
குருவாய் வந்த குகன்,
ஒருவார்தை கூறாமல்
உபதேசம் செய்தது சிறப்புத்தான்..
நன்று..
வல்லமையாளருக்கு வாழ்ததுக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
திரு.கோதண்டராமன் அய்யா அவர்களே
20 பக்க கட்டுரையில் சொல்லுமளவிற்கான கருத்துக்களை இருபதே வரிக் கவிதையில் சொல்லி விட்டீர். வாழ்த்துக்கள்
பாராட்டுகளுக்கு நன்றி.
கோதண்டராமன்