நாட்டு நடப்பு (3)
வையவன்
ஆலயம் அழைக்கிறது
விண்ணைக் கொஞ்ச எழும்பிய கோபுரம் . கண்ணிற்கு விருந்தளித்து கருத்திலே தெய்வச் சிந்தனையை எழுப்ப செதுக்கப்பட்ட சிலைகள். நுகரும் நாசியில் மேன்மையான உணர்வுகளை மீட்டி விடுவது போல் ஊதுவர்த்தியும் சாம்பிராணியும் கற்பூரமும் மலர்களும் கலந்த ஒரு கலவையான நறுமணம் . நடப்பதற்கோ விரிந்த பெரிய நடை , மனமும் அதன் நினைவுகளும் தம்மை மறந்த உலாவர அகன்ற பிராகாரங்கள். காதுகளிலே வேத மந்திரம் ஓதும் கம்பீர நல்லோசை. முரசமும் மணியோசையும் நாதஸ்வர இசையும் மெதுவாக உலக நினைவுகளில் இருந்து நம்மை மீட்டு மேலெழுப்பும் சங்கீத சஞ்சாரம்.
எல்லாம் சரி. அதோ அங்கே அர்ச்சகர்கள் ஏதோ காரணத்திற்காக உரத்த குரலில் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருக்கிறார்கள். தரிசனத்திற்கு காத்து நிற்கும் பக்தர்களோ சந்தைக் கடையில் நின்று உரத்த குரலில் குசலம் விசாரித்துக்கொண்டு , யாரையோ கூவி அழைத்துக்கொண்டு பெரிய இரைச்சல். என்ன குறையோ அதை இறைவனிடம் சமர்ப்பிக்க பல சிரமங்களுக்கு இடையே வந்து நிற்கிற ஒருவர் மனசை ஒன்றுகூட்ட முடியாமல் ஏதோ கடமைக்கு, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு பிரசாதங்களுக்கும் தட்சணைகளுக்கும் நடக்கிற போராட்டத்தை வேடிக்கையோடும் வேதனையோடும் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிற தெய்வத்தையும் பார்த்து பெருமூச்சு விட்டு வெளியேறுகிறார். சில ஆலயங்கள் பின்னால் தெய்வ மூர்த்தம் இருக்க பிரசாதம் வழங்கும் அர்ச்சகர் எதிரிலே பரிச்சயம் உள்ளவர் இருந்தால் என்ன சௌக்ர்யமா? அவர் எங்கே வரல்லையே? இப்படி அவரிடம் தமக்கு உள்ள அன்யோன்னியத்தை வெளிப்படுத்தி அளவளாவுவார். இது பொதுவாக தமிழக ஆலயங்களின் நிலை.
கேரள ஆலயங்களிலோ கன்னட ஆலயங்களிலோ ஒரு தனி அமைதி நிலவும். உள்ளே நுழைகிற பக்தர்களுக்கு ஏதோ ராஜ சந்நிதியில் பிரவேசித்தது போல் ஓர் மரியாதை தானே எழும் . மனம் வந்த வேலை என்னவென்று தானே உணரும். அங்கே மட்டும் ஏன் அப்படி? அது அவர்கள் நாகரிகமா?
இங்கே மட்டும் ஏன் இப்படி? இது நம் நாகரீகமா? கடவுள் கூட நம் தோஸ்து தான். நாம் எப்படி இருந்தாலும் அவர் கண்டுகொள்ளமாட்டார் என்ற சர்வ சகஜ பாவமா? அதை முன்னிட்டா ஆலயம் நம்மை அழைக்கிறது?
நாமே கேரள ஆலயங்களிலோ கன்னட ஆலயங்களிலோ நுழைகிறபோது தானே மௌனமாகிவிடுகிறோமே! அது ஏன்?