தி. சுபாஷிணி

குளமாய்ப் பொங்குது
சந்தோஷம்!
உறவிற்குப பாலம்
பூத்ததும் ஈன்றதும்
ஆயாச உறக்கம் !

வெண்மை ஆடையில்
தூங்குது தூளியில்
பூவாய்!
சிணுங்கலும் சிரித்தலும்
கூடுதல் அழகு !

ஆடி ஆடி
அள்ளித் தூவுகிறது
அறை எங்கும் !

கிடத்திடில் சிணுங்கும்
எடுத்திடில் சிரிக்கும்
தூங்கும் எனில் தூங்காது
தூங்காது எனத் தூக்கிடில்
தூங்கி வழியும்

ஆவலாய்க் குடிக்கும்
அஞ்சே அஞ்சு நிமிஷம்தான்
அந்த மயக்கமும் மந்த ஹாசமும் !

திடிக்கிட்டு அழும் திடீரென்று !
விழித்து விளையாடும் !

அலைகழிக்கின்றான்
அனுதினமும்
அரும்பிய அழகன் துருவன் !

மெல்ல விழி திறப்பன்
புருவம் நெறிப்பன்
நிலைத்து நோக்குவன்
மெல்லிய இதழ்
சற்றே சரித்து சிரிப்பன்

மென்நீள் விரல்கள் மடக்கி
கைகள் தூக்கி
உடல் முறிப்பன்
அத்தனை வேலைகளையும்
தானே செய்ததது போல் !

அழுவன் எதிர்பாராத போது
கையில் தங்கான்
தூளியிலும் தரியான்
வயிற்று வலியோ எனக்
கலங்க அடிப்பன்

வானுறைத் தெய்வங்கள்
அத்தனையையும்
அழைக்கச் செய்வான்!
நொந்து நூலாகி
நொடிக்கும்போது
‘நானா’ எனச் சிரிப்பன்
நொடியில் மறக்கடிப்பன் !

அம்மாடி ! ஆத்தாடி! தாங்கலையே!
அத்தனையும் அனுபவம்!
அள்ளித்தரும் ஆனந்தம்!

காதொலி கேட்டு
கண்ணொளி நகர்த்த
கால்கள் உந்த
உடல் மேலெழும்ப
கொடி அசைய
அதனுடன் பேச
அதுவும் அரை நிமிடம்தான்
அப்புறம்
ஆயசந்தான்

உஷ்…….
அழகன் துருவன்
தூங்கத் தொடங்கி விட்டான்!
பூவாய்!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "வலி உமிழ்ந்த பூ!"

  1. அந்த அற்புத அனுபவத்தை அருமையான வார்த்தைகளில் அழகாக வடித்திருக்கின்றீர். பாராட்டுக்கள்.

  2. அந்தத் ‘தாய்’மொழி,
    அனுபவ வாய்மொழி
    அருமை…!
           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.