அதே கதையாய்…
காத்திருக்கிறானாம் காதலன்-
மலைசொன்ன சேதி
மனதுக்குப் பிடித்துவிட்டது,
மலையில் தவழ்ந்த சிற்றாறுக்கு..
ஆடி அசைந்து
அமைதியாய் வந்த ஆறு,
ஆர்வம் அதிகமாகிக் குதித்தது
அருவியாக..
காயம் ஏதும் படவில்லை-
காதல் என்றாலே
கடுகுதானே மலைகூட…
தரைக்கு வந்ததும்
தானாக வந்தது பாட்டு..
வரப்புக்களின் அணைப்பிலே
வழிநடைப் பயணம்-
சல சல சத்தத்துடன்,
வளம்சேர்க்கும் நதியாக..
துள்ளிக் குதித்தும்,
தள்ளிக்கொடுத்தும் தடுக்கிவிழுந்தும்,
சுழித்தும் சுழன்றும்,
தடைகளைத் தகர்த்தும்
துடிக்கும் இளமையாய்..
கரையோர மரமெல்லாம்
வாழ்த்துச் சொல்ல,
கைமாறாய்த் தாகம் தணித்து
தாவிச் செல்கிறது
இலக்கை எட்டிப்பிடிக்க..
மலையரசன் சொன்னது சரிதான்-
அலைக்கரங்கள் நீட்டிக்
கடற்காதலன் காத்திருக்கிறான்..
கண்டுகொண்டது நதி-
கட்டுப்பாடுகள் கட்டறுந்து
தாவி விழுந்தது
தலைவன் கரங்களில்…!
மீண்டும் தொடங்குகிறது
காதல்கதை,
அதுவே தொடர்கதையாய்-
மலைமேலே…!
படத்துக்கு நன்றி
http://www.zastavki.com/eng/Widescreen/wallpaper-5159.htm
நாங்கள்லாம் ஆத்தில தண்ணி ஓடுதுன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்.
நீங்கள் அதை உவமைகளோடு அழகு நிறைந்த கவிதையாக அல்லவா கொடுத்து விட்டீர்கள்.
தேமொழி அவர்களின் ரசனைக்கும்
கருத்துரைக்கும் நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…