தமிழார்வம் திரிகடுகம்: ராஜ தந்திரம்

0

 

இன்னம்பூரான்

தமிழார்வம்

ராஜ தந்திரம்

 

7. ராஜ தந்திரம்

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

காய்வானைக் கை வாங்கிக் கோடலும்,-இம் மூன்றும்

சாவ உறுவான் தொழில். [4]

 

7.1. தன் பகைவர் முன்னே செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும்,  தொகுதியாக நின்ற, மாடுகளின் நடுவே,  கோல் இல்லாமல் செல்லுதலும்,  முன்னே (நின்று), தன்னை வருத்துபவனை, முன் விட்டு நீக்கி, பின் அவனை நட்புக் கொள்ளுதலும், ஆகிய இம் மூன்று செயல்களும் சாகவேண்டியவனுடைய, செய்கைகளாம்.

7.2. அதாவது: பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.

73. இந்த வெண்பா சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் போல பேசுகிறது, ராஜ தந்திர சூத்திரங்களை பகர்ந்து. பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு போன்ற தீய குணங்களுக்கு, பகை தூபம் போடும். தன்னுடைய செல்வத்தை பகைவனுக்கு முன்னால் விரித்துக்காட்டுவது, அந்த தீய குணங்களுக்கு வித்திடுவது. இத்தாலிய சாணக்யராக கருதப்படும் மாக்கியவல்லி ராஜகுமாரனுக்கு அளிக்கும் அறிவுரை; உன் பகைவனின் தந்தையை கொன்றாலும், அவன் மனைவியையும், சொத்தையும் பறிக்காதே. அவன் மன்னிக்க மாட்டான். பழி தீர்க்க வழி தேடுவான்.  அந்த ராஜ தந்திரத்தின் அலை வரிசை வேறு. அதனுடைய நுட்பம் இந்த வெண்பாவின் துவக்கத்தில் உரைக்கப்படுகிறது.

7.4. மந்தையும், மாடும், கோலும் என்ற உவமையும் ஒரு போர் யுக்தியே. அடக்கியாளும் தந்திரம். மாட்டு மந்தைக்குள் கோல் இல்லாமல் புகுவது, அபிமன்யு பத்மவியூகத்தில் புகுந்தது போல. பகை, புகையை போல் மண்டிக்கிடக்கும். உள்ளே கனல். அந்த மாதிரி தான் நேற்றைய விரோதியை இன்றைய நண்பனாக, ஆராயாமல் ஏற்றுக்கொள்வது. நல்லாதனார் ‘…சாவ உறுவான்…’ என்ற கொடுஞ்சொல்லை பயன் படுத்தியதற்குக் காரணம், இந்த மூன்று செயல்களும் நல்வழிக்கு ஒவ்வாதவை என்பதே.

7.5.  மேலே கூறப்பட்டது,உரையையும், விருத்தியுரையும் தழுவி என்னால் எழுதப்பட்டது. அவற்றிலிருந்து சொற்கள் இரவல் வாங்கப்பட்டுள்ளுன. அந்த நூல்களை படிக்க உசாத்துணைக்கு செல்லவும். 

(தொடரும்)

இன்னம்பூரான்

18 11 2012

 

உசாத்துணை:

திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

தமிழ் இணையக் கல்விக்கழகம்

திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

சித்திரத்துக்குநன்றி:http://1.bp.blogspot.com/-QCNpfDqoeHs/Thxav7Ol5sI/AAAAAAAAAEI/BqaOiy6TX5M/s1600/Sathish0312.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.