சங்கர் ராமன்

தேநீர்த் திருவிழா

“யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க…

இந்த ட்ரெஸ் அவனுக்குப் பிடிக்குமானு தெரியலே… நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே” இன்றைய அவசர உலகில் நாம் ரசித்த நிமிடங்களை விட ரசிக்கத் தவறிய நிமிடங்களே அதிகம்.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்த நிமிடம் வரை உங்களில் ஒருவராவது தன்னுடைய வாழ்க்கையை தனக்காக வாழ்ந்திருக்கிறீர்களா? பரபரப்பான உலகில் யாராவது பட்டாம்பூச்சியை ரசித்ததுண்டா?. அவசர உலகில் அவசியமான விருப்பங்களைக்கூட ரசனை இல்லாமல் இழந்து தவிக்கிறோம். போலியான முகங்களை வைத்துக் கொண்டு அவற்றையே உண்மை என நம்புகிறோம்.

நிமிடங்களில் வாழ்வது எப்படி என்பதை நமக்கு எளிமையாகச் சொல்லிக் கொடுப்பது ஜைனமதம் தான். அந்த ஜைன மதக் குருக்களிடம் ஒரு திருவிழா மிகப் பிரபலமாகும். அதுதான் தேநீர்த் திருவிழா . வருடம் தோறும் கொண்டாடி மகிழும் இந்தத் திருவிழாவின் மையமான ஒரு செய்தி உண்டு. ஆளுக்கு ஒரு குவளை தேநீர் எடுத்துக் கொண்டு அதனை சுமார் 2 மணி நேரம் வரை ரசித்துக் குடிப்பார்களாம். காரணம் என்னவென்றால் அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடிக்கிறார்கள்.

நாமும் இதனைச் செய்ததுண்டு எப்போது? நாம் குழந்தையாக இருக்கும்போது சில்வர் டம்ளரில் ஸ்டிரா போன்ற அமைப்பில் நாம் உறிஞ்சி உறிஞ்சி குடித்ததுண்டு. மிக மகிழ்ச்சியாக. கோப்பையில் இருக்கும் தேநீர் முடிந்திருக்கும். ஆனாலும் மனம் தளராமல் குவளையில் ஒட்டியிருக்கும் சர்க்கரையை நம் நாக்கால் தடவியே காலி செய்திருப்போம்? ஞாபகமிருக்கிறதா? ஏன்? அப்போது நாம் குழந்தை. மிக மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போது வளர்ந்து விட்டோம். வாழத் தெரியாமல் நிற்கிறோம்.

சாதாரண உதாரணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன். ஆடித்தள்ளுபடிக்கு ஆடை எடுக்க கடைக்குச் செல்கிறோம். ஓர் அழகான சட்டையைப் பார்க்கிறோம். இல்லை ஒரு சுடிதாரைப் பார்க்கிறோம். ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு தேர்வு செய்து எடுத்த அந்த ஆடை நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடனே அதைத் தேர்வு செய்து விடுவோமா? கூடவே ஒரு இராகு காலத்தைக் கூட்டிக் கொண்டு போயிருப்போம்.

நம் நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருப்பார்கள். அவர்களிடம் அந்த ஆடையைக் காட்டி கருத்துக் கேட்போம். அவர் அரை விநாடியில் முகம் சுளிப்பார். நமக்குப்பிடித்து ஒரு மணிநேரம் செலவு செய்து தேர்வு செய்த ஆடை அவர்களின் அரை விநாடி முகஞ்சுளிப்பிற்கு தியாகம் செய்துவிடுவோம். இதுதான் இன்றுவரை நாம் வாழும் வாழ்க்கை. நமக்குப் பிடித்த பல விஷயங்களை அடுத்தவருக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.

நான் சுயநலமாகஇருக்கச் சொல்லவில்லை. ரசனையோடு இருக்கச் சொல்கிறேன். உலகத்திலேயே மிக ரசனை மிக்கவர்கள் இந்தியர்கள். எல்லாவற்றிலும் ரசனையோடு இருப்பவர்கள். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியினை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆம் அந்த திருமணத்தில் 523 வகையான உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்பட்டனவாம். இதிலிருந்தே நம் ரசனையை உலகம் அறிந்து கொள்ளும்.

நேற்று நடந்த நிகழ்வுகளை மட்டுமே மனதில் வைத்து வாழ்பவர்கள் இறந்தவர்களாக கருதப்படுவர். இப்படிப்பலர் நம்மிடையே உள்ளனர். இல்லையேல் எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என்ற கற்பனை வாழ்க்கையிலே கலந்து போய்விடுகிறோம். நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் மிகச் சிலரே. ஆனால் அவர்கள்தான் இந்த உலகின் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள்… ஒவ்வொரு நிமிடமும் வாழ்வது எப்படி?.

குழந்தைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிறு கிலுகிலுப்பையை குழந்தையின் முன்னால் சென்று ஆட்டினோம் என்றால் அந்தக் குழந்தை எவ்வளவு அழகாகச் சிரிக்கிறது. அந்த மழலையின் சிரிப்பிற்கு ஈடு இணை ஏதுமுண்டா? இல்லை. அதே நேரம் அந்த கிலுகிலுப்பையை நேரே வீட்டிற்குள் சென்று நம் அப்பாவிடமோ கட்டிலில் படுத்திருக்கும் நம் தாத்தாவிடமோ ஆட்டினால்…? என்ன ஆகும். அவர்கள் நவீன ஹம்சர்களாக மாறிவிடுகின்றனர்.

சிறுவயது குழந்தைகளாக இருக்கும் போது அவர்களும் சிரித்தவர்கள்தானே. இப்போது ஏன் சிரிக்கவில்லை? ஆம்! நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழவில்லை. கடந்த காலக் குப்பைகளை மனதிலே தேக்கி வைத்திருக்கிறோம். விளைவு பலவற்றை ரசிக்கத் தவறிவிடுகிறோம்.

பறக்கும் பட்டாம்பூச்சி பூக்கும் ரோஜா, அழகாய்ப் பொழியும் நிலவின் ஒளி, லேசான தென்றல் இவை எல்லாம் நம்மை எதுவும் செய்வதில்லை. இவற்றை யாராவது ரசித்தால் அவர்களை பிழைக்கத் தெரியாதவர் என்ற பட்டமிட்டு ரசிக்கிறோம். ரசனையுள்ளவர்களே இந்த உலகில் சாதனை படைத்தவர்களாக இருந்து வருகின்றனர்.

சிட்டுக்குருவி சிறகசைத்துப் பறப்பதை கொண்டாடியவன் பாரதி. இயற்கையைக் கொண்டாடி அழகின் சிரிப்பைப் பாடியவன் பாரதிதாசன். பயணம்தான் உலகின் மிகப் பெரிய ரசனை மையம். பல்வேறு அறிஞர்களின் பயண அனுபவங்களை இன்று உலகமே கொண்டாடி வருகிறது. நாமோ ரசனை என்ன விலை என்று கேட்கிறோம்.

ஒரு அழகான ஜென்கதை ஒன்றைக் கூறுகிறேன். மதத் தலைவர் ஒருவர் வயதாகி படுத்த படுக்கையாகக் கிடந்தார். சுற்றிலும் சீடர்கள் ஆர்வமுடன் நின்று கொண்டிருந்தனர். அவர் சாவதற்காக அல்ல. கடைசி நேரத்தில் ஏதாவது முக்கியமான செய்தி சொல்லமாட்டாரா என்று?. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உயிர் பிரியவில்லை.

வெளியூர் சென்றிருந்த ஒரு பிரியமான மாணவன் தன் குருவின் உயிர் பிரிந்து கொண்டிருந்ததை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு உடனே அவருக்கு மிகவும் பிடித்தமான திராட்சைப் பழங்களை வாங்கிக் கொண்டு ஆசிரமம் நோக்கி விரைந்து வந்தான். வந்து தன் குருவை வணங்கிவிட்டு அவருக்கு தான் வாங்கிவந்த பழங்களில் ஒன்றைக் கொடுத்தானாம்.

குரு அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு; அதை வாங்கிச் சுவைத்து சாப்பிட ஆரம்பித்தாராம். குழுமியிருந்த சிஷ்யர்களுக்கு பொறுமையில்லை. அவர்களுக்கும் பழம் வேண்டும் என்பதல்ல. குரு கடைசியாக ஏதும் சொல்லாமல் போய்விடுவாரோ என்றுதான். ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டே விட்டானாம்.

இனி நீங்களும் முடிந்து போனதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.யாரையும் பின்பற்றி வாழ முயற்சி செய்யாதீர்கள். வாழ வேண்டும் எனில் நாமும் நம்மைத்தான் பின்பற்றி வாழ வேண்டும். யாரும் யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. ஏனெனில் யாரும் யாரையும் விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஒரு திறமை உள்ளது. அதைக் கண்டுபிடித்து பயன்படுத்தக் கற்றுக் கொண்டாலே நம் வெற்றி எளிதாகும்.

எப்போதுமே இயல்பாக இருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். தோல்விகள் வருவதனால்தான் நாம் தோற்கிறோம் என்பது உண்மையல்ல… மாறாக தோல்வி என்று கருதப்படுகின்ற ஒன்றை நம்மை வந்து சேரும் போது அதை நாம் தோல்வியாக ஏற்றுக்கொண்டு விடுவதால்தான் நாம் தோற்றுப் போகிறோம். ஒரு தோல்வியையே வெற்றியாக எடுத்துக் கொள்வதா என்று கேட்கக் கூடாது.

ஒரு தோல்வி வரும்போது அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி அமைகிறது. அதாவது வெற்றிக்கு முன் வரும் தற்காலிகத் ‘தோல்வி’களை நாம் வரவில் வைக்கவே கூடாது.

வெற்றி என்பது உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு பொருளல்ல. அது உங்களுக்கு வெகு அருகாமையில் உள்ளதே. இன்னும் சொல்லப் போனால் அது உங்களுக்கு உள்ளேயே உள்ளது. அதனாலேயே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் போகலாம். ஏனெனில் ஒரு விஷயத்தைப் பார்க்க தூரம் கொஞ்சமாவது தேவைப்படுகிறது. கடலைத் தேடிய மீன்களைப் போல்தான் நாமும். ஆம் நம்மை நாம் உணா;ந்து கொண்டாலே போதும்.

நிறைவாக ஒரு கதை. ஒரு கிராமத்திற்குத் துறவி ஒருவர் வந்திருந்தார். அவரைச் சுற்றி அருள்வாக்கு கேட்க ஒரே கூட்டம் பக்தி பரவசத்துடன்… அதில் ஒரு சிறுவன். துறவியை முட்டாளாக்க வேண்டும் என்ற ஆசையுடன் நின்றிருந்தான். வேகமாக ஓடிப்போய் ஒரு தட்டாம் பூச்சியைப் பிடித்து வந்தான். அவன் கையில் தட்டாம் பூச்சியை வைத்து இருகைகளையும் பின்னால் கட்டிக் கொண்டான். தட்டாம் பூச்சியின் கழுத்தில் விரலைத் தயாராக வைத்திருந்தான். நேராக துறவியிடம் சென்று “ஐயா! உங்களுக்கும் எல்லாம் தெரியுமா?” என்றான். துறவியும் “முடிந்தவரை முயற்சிக்கிறேன்” என்றார். அவரிடம் ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது… “ஐயா! என் கையில் ஒரு தட்டான் உள்ளது. அது உயிரோடு இருக்கிறதா? இல்லையா?” என்றான் சிறுவன்.

போதி தர்மர்

உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் சிறுவனின் விரல் தட்டானின் கதையை முடித்துவிடும். உயிரோடு இல்லை என்று சொன்னல் சிறுவன் தட்டானை பறக்க விட்டுவிடுவான். தர்ம சங்கடமான நிலை துறவிக்கு… என்ன சொல்வது. சிறிது நேரம் யோசித்து ஒருபதில் சொன்னார் துறவி. ஆகவே நம் வாழ்க்கைக்கான பதில். ஆம். “தட்டான் உயிரோடு இருப்பதும் சாகிறதும் உன் கையில்தான் இருக்கிறது” என்றார் துறவி.

நம் வாழ்வும் நம் கையில்தான். நாம் மகிழ்வாக இருக்கும்போது வாழ்க்கை மகிழ்வாக செல்கிறது. துயரக் கடலில் இருக்கையில் வாழ்க்கையும் துயரமாகவே இருந்துவிடுகிறது. எனவே வாழ்க்கையை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் மகிழ்ச்சி தான் வெற்றியின் அடையாளம்…

வாழ்க்கை கண்ணாடி போன்றது.

நாம் நினைப்பதையே அதுவும் பிரதிபலிக்கிறது.

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *