திருமால் திருப்புகழ் (71)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
———————————————————-
’’கண்ணனை நெஞ்சே கருது’’
—————————————————

பீலி மயில்கொண்டை, பீதாம் பரஆடை
காலிகள் மேய்க்கும் கழியுற்றான் -போலிருந்தும்
எண்ணுதலுக்(கு) எட்டானை, கண்ணுதலான் மைத்துனனை
கண்ணனை நெஞ்சே கருது….
சொர்ணமாய் வீசிடும் சூரிய னால்காலம்
நிர்ணயம் ஆகிடும், நீகும்ப -கர்ணனாய்
திண்ணமாய்த் தூங்காமல் தூங்கி சுகம்காண
கண்ணனை நெஞ்சே கருது….
படுத்த(து) அரவணைமேல், பாண்டவர்க்காய் அன்று
தொடுத்தது பாரதத் தொல்போர் -கொடுத்தது
எண்ணிலா செல்வத்தை ஏழை குசேலனுக்கு
கண்ணனை நெஞ்சே கருது….
ஓதநீர் வண்ணத்தை ,யாதவ சின்னத்தை
ஓதுமறை நான்குமுரை உன்னதத்தை -பேதமற
என்னவென்று சொல்ல எழுத்துக்(கு) அகப்படாத
கண்ணனை நெஞ்சே கருது….
எண்திசையை ஏழ்கடலை விண்முகடை விஸ்வத்தை
கண்ணசைவில் பக்தரைக் காத்திட -முன்னசையும்
அன்னத்தன் வீற்ற அரவிந்த நாபியோன்
கண்ணனை நெஞ்சே கருது!!
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html