–கவிஞர் காவிரி மைந்தன்

 

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

 

 

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்சுதந்திரம் என்பது ஒரு மந்திரச் சொல்லாய் முழங்கிய காலம் இந்தியாவில் உண்டு! வந்தே மாதரம் என்றும் மக்கள் தெருவெங்கும் உரக்கக்குரல் கொடுத்த உரிமைக்குரல்கள் கண்ட விடியல்தான் நாம் பெற்ற சுதந்திரம்!

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் கவிஞர் முத்துலிங்கம் கற்பனையில் உருவானது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அது கவிஞரின் உள்ளத்தில், அடிமனதில், குடிகொண்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாய் காணலாம்!

புரட்சிப்பாடலில் இடையே பூத்திருக்கும் கற்பனையைப் பாருங்கள்! கவித்துவச் சிந்தனையின் செழுமை முழுமைபெற்ற கவிஞருக்கு வாய்க்கும் அரிய வரிகளிவை!
தென்பாங்குத் தென்றல் பண்பாடும்நாட்டில்..

அடக்கு முறைக்கு அடங்க மறுத்த புரட்சியாளனாய்.. கதையின் நாயகன் புறப்பட்டு வருகையில்.. கண்ணில்படும் அவலங்கள் அவன் கருத்தில் நிறைகின்றன சொல்லும் பொருளும் ஒன்றையொன்று இங்கே ஆள்கின்றன. அதனால் கவிதை வாழ்கிறது!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் அளித்த தேவகானங்கள் – பல்விதமானவை என்பதற்கு இப்பாடலும் தக்கதோர் சாட்சியாகும்.
டி.எம்.எஸ். குரலில் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களில் இதுவும் ஒன்று!
இதில் புலவர் முத்துலிங்கம் பங்களிப்பு கணிசமானது! அதுவே கவிதையானது!!

http://youtu.be/bMKijer7fZg
காணொளி: -http://youtu.be/bMKijer7fZg

திரைப்படம் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா
இசையமைப்பு – மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி.
பாடலாசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்
பாடல்: தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடைமைச் சமுதாய் மலர்ந்திட வேண்டும்

கண்கவரும் கலைகளெல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் எங்கே
நிமிர்ந்தெழுந்தால் தடைகளெல்லாம் உடைந்திடும் இங்கே

வீரமுண்டு வெற்றியுண்டு.. விளையாடும்களம் இங்கே உண்டு
வா வா என் தோழா..
பூனைகள் இனம்போல பதுங்குதல் இழிவாகும்
புலியினம் நீயெனில் பொருதிட வாராய்.. (வீரமுண்டு)

தென்பாங்குத் தென்றல் பண்பாடும் நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்தேங்கலாமோ வா. வா.. என் தோழா..

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.