நேயத்தைக் கொண்டாட வைக்கும் நூல் வாசிப்பு
புத்தகமும் மனிதநேயமும்
எஸ் வி வேணுகோபாலன்
வாசிப்பு என்பதே நேயத்தின் ஒரு வெளிப்பாடுதான். மகாகவி பாரதியின் கவிதை வரிகளில், “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று வருகிறது. என்ன கருவி அது? காசியில் இருப்பவர் பேசும் மொழி காஞ்சியில் இருப்பவர்க்கு எப்படி விளங்கும்…ஒன்று இவர் அந்த மொழியைக் கற்றிருக்கவேண்டும். அல்லது அவர் தமிழில் பேச வேண்டும். அல்லது பொதுவான மொழியொன்றில் பரஸ்பரம் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சொல்வதை இவர் கேட்பதற்கோர் இதயம் வேண்டும். அந்த உள்ளம் – அந்த மனம்தான் பாரதி சொல்லும் கருவி.
கதையோ, கவிதையோ, சிறுகதையோ, நாவலோ – ஒரு புத்தகம் நமக்குள் எத்தனையோ வித சிந்தனையைத் தூண்டிவிடுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் குறித்து யோசிக்க வைக்கிறது. சிந்தி மொழி கவிஞர் மோதிலால் ஜத்வானி எழுதி இருக்கும் செலவழித்த புன்னகைகள் என்ற கவிதை, “மளிகைக் கடைக்காரனிடம் சிறிது புன்னகை செய்கிறேன்/ பொருள்களைத் தராசில் வைத்து நிறுத்தும்போது/ என் பக்கம் சிறிய சாய்வு செய்யக் கூடாதா என்று! எனது அன்றாடத் தேவைகளின் விலை/ கூடிக் கொண்டே செல்கிறது, காய்கறிக்கடைக்காரனிடமும் புன்னகை செய்கிறேன்/ என்னுடையதைப் போன்ற குறைந்த தேவைக்கு/ அவன் அதிகவிலை வைத்துவிடக் கூடாதே என்று/ இப்படி கடைத் தெரு முழுக்க செலவாகிறது என் புன்னகை/ வீடு திரும்புகிறேன்/ மனைவி பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்க/ புன்னகை கைவசம் இல்லை” என்று முடிகிறது.
டாக்டர் பி எம் ஹெக்டே அவர்களின் “உள்ளங்கையில் உடல் நலம்” (விகடன் பிரசுரம்)நூலின் முதல் கட்டுரை சிரிப்பு மருத்துவம் பற்றிப் பேசுகிறது. சிரிப்பைப் பற்றிய கலைவாணரின் பாடலில், ‘வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு’ என்று வருகிறது. ஹெக்டே அவர்கள், நாய் போன்ற சில விலங்குகள் சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றின் முகம் நீண்டிருப்பதால் நமக்கு அது தென்படுவதில்லை என்று சொல்கிறார். நாமோ சிரிக்கத் தெரிந்தும் சிரிக்க மறுக்கிறோம். ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று நமது மோவாயைத் தொட்டுப் புகைப்படக் கலைஞர் என்ன கெஞ்சினாலும் நாம் இறுக்கமாகவே நிற்பதை புகைப்பட ஆல்பங்கள் நிரூபிக்கும். இலேசாகும் மனத்தால் வஞ்சனையின்றி சிரிக்க முடியும். அதற்கும் புத்தகம் மிகப் பெரிய வாசல் திறந்து கொடுக்கிறது. வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த வாசிப்பு. நாம் ஏன் அதை மறுத்துக் கொள்ள வேண்டும்?
அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தொண்ணூறுகளுக்குப் பின் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. உலகமயம் நமது போக்கில் எத்தனையோ மாற்றங்களைத் திணித்துவிட்டது. கூடி வாழ்ந்த ஜனத் திரளை ஒற்றை ஒற்றை மனிதர்களாகப் பிரிக்கும் வேலையில் உலகமயம் வெற்றி பெற்று வருகிறது என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார் பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக். நேயத்திற்கு எதிரான கோட்பாடு இந்த உலகமயம்.
“இந்தத் தெருவில் குரைப்பதற்கு நாய் கூட இல்லை…”என்று தொடங்கும் த.வாசுதேவன் என்பவரின் வீடு என்கிற கவிதை (தீராநதி: மார்ச் 2012),
வீடுகளின் குழந்தைகள்
ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்
பெரியவர்கள்
முதியோர் இல்லங்களில்
இறப்பதற்குக் காத்திருக்கின்றனர்
……………
………..
தங்கத்தை பேங்க் லாக்கரில் வைத்திருப்பதால்
திருடர்களும் வர மாட்டார்கள்
மிச்சமிருக்கும் உணவை
வைப்பதற்கு ஃபிரிட்ஜ் இருப்பதால்
பிச்சைக்காரன் கூட இங்கு வரமாட்டான்
……..
……..
நாங்கள் அனேகமாக அலுவலகத்தில்தான் இருக்கிறோம்
வாடிக்கையாளரும் எஜமானனும்
வெளிநாட்டில் இருக்கிறார்கள்
…….
……
வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது
மனசும்தான்
இந்த வீட்டில்
டிவி மட்டுமே பேசவும் பாடவும் செய்யும்
இந்த வீட்டில் தான்
கதவுகளை நன்கு சாத்தியபடி
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”
என்கிறது. மறைந்த மார்க்சிய தத்துவார்த்த மேதை பி ராமமூர்த்தி அவர்களது ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ (அண்ணா அவர்களது ஆரிய மாயை நூலுக்கு எதிர்வினையாக ஆரிய மாயையா, திராவிட மாயையா என்ற தலைப்பில் பி ஆர் எழுதிய நூல் அது) என்ற புத்தகத்தில், புராதன பொதுவுடைமை காலத்தில் மக்களது கீதங்களாகப் பிறந்த ரிக் வேதத்தில், ‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து’ என்று வரும் பாடலின் பொருள், நாம் கூட்டாக வாழ்வோம், கூட்டாக விளையாடுவோம், கூட்டாக அனைத்து இன்பங்களும் அடைவோம் என்பதாக வருவதை பி ஆர் விளக்கினார்.
‘உன்னைப் பற்றி மட்டுமே யோசி, உனக்குள் ஒடுங்கிக் கொள், உன்னைப் பற்றிமட்டுமே கவலை கொள்’ என்கிறது உலகமயம். சேர்ந்து வாழும் மனிதகுல பண்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது உலகமயம். அதைத் தகர்த்து எறிந்து மனித குல இருப்பிற்கும், மற்றவர்களுக்கு உதவுவதற்கும் சிந்திக்க வைக்கும் வேலையை ஒரு புத்தகம் சிறப்பாகச் செய்யமுடியும்.
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு
என்ற பாவேந்தர் வரிகள் இதைத் தான் செய்கின்றன. ஒரு நல்ல புத்தகம் உள்ளத்தைத் தீண்டி இம்மாதிரியான சிந்தனைகளைத் தூண்ட முடிகிறது. நேயத்தை ஊட்டமுடிகிறது.
எல்லாவற்றையும் பண்டமாக, பணமாக, லாபத்தின் கூறாகப் பார்க்கப் பழக்கும் தாராளமய காலத்தில் நாம் அனைத்து உறவுகளையும் ஈவிரக்கமின்றி மிதித்து நடக்கிறோம். குழந்தைகளை வாட்டி எடுக்கிறோம். வயது மூத்தவர்களைப் புறக்கணிக்கிறோம். முதுமை அடையும் நிராகரிப்பின் கசப்பைப் பேசும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று, “எண்ணைக்கு என் மனைவி/என்னைவிட்டுப் போனாளோ/ அண்ணைக்கே என் படுக்கை/ திண்ணைக்கு வந்திருச்சு/ நாய் தின்னும் சொத்தில் நாலஞ்சு கவளத்த/ எனக்கும் போட்டுவப்பான் இரக்கமுள்ள எம்புள்ள..” என்கிறது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்களையும் சமூகம் மிக மோசமாக நடத்துகிறது. ஒடுக்கப்பட்டோரை மிகவும் கீழ்மைப்படுத்தி வதைக்கிறது. ஆதிக்க உளவியல் இருக்கும் இடத்தில் அன்பு மறுக்கப்பட்டுவிடுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கிராமங்கள் மூன்று சூறையாடப்பட்ட சாதிய தாக்குதல்களை விவாதிக்கும் யாரும், அதற்கு ஒரு மாதமுன்பே தொடர் நிகழ்வுகளின் தாக்கத்தில் இமையம் அவர்கள் எழுதிய ‘பெத்தவன்’ (உயிர்மை:ஜூன் 2012; பின்னர் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருப்பது) கதையைப் பேசாது தவிர்க்க முடியாது.
உரத்த சத்தம் எழுப்புவதாலேயே ஒன்றின் நியாயம் தீர்மானிக்கப்பட்டுவிட முடியாது என்று சொல்லும் குட் பை மிஸ்டர் சிப்ஸ் கதையை, பேரா ச மாடசாமி அவர்களது மொழியில் “போயிட்டு வாங்க சார்” (பாரதி புத்தகாலயம்) நூலகா வாசிக்கிறோம். ஆசிரியர்கள் மாணவர் உறவின் மேன்மையைக் கொண்டாட்டமாகப் பேசும் இந்த நூலை ஆசிரியர்கள் வாங்கிப் படிப்பது அவசியமாகிறது.
இலங்கை எழுத்தாளர் அ முத்துலிங்கம் (கனடா) எழுதியிருக்கும் ‘புவி ஈர்ப்புக் கட்டணம்’ சிறுகதை, இயற்கையின் வரங்களுக்கும் கட்டணம் போட்டுச் சுரண்டும் எதிர்கால அரசியலைப் பகடி செய்து எழுதப்பட்டதாகும். சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதை, குழந்தையின் சிகிச்சைக்காக மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வரும் ஏழைத் தாய் எதுவும் புரியாமல் குழந்தையோடு வெளியேறியபிறகு, அடடா அது ஒரு தீவிர நோய் ஆயிற்றே எங்கே அவர்கள் என்று அலைமோதும் மருத்துவரையும் பேசுகிறது.
வகுப்பறை குறித்துக் கேள்வி எழுப்பும் ஆயிஷாவும், குழந்தை-பெற்றோர் உணர்வுகள் குறித்தப் பேசும் ரோஜாவும் (இரா நடராசன் நூல்கள்:பாரதி புத்தகாலயம்) கல்வி குறித்து நிறைய சிந்தனைகளை எழுப்புகின்றன. வர்த்தகமாகும் கல்வி பற்றியும், மருத்துவம் பற்றியும் பேசும் நூல்கள் சம கால அராஜக வாழ்வுச் சூழலுக்கு எதிரான கலகத்தை விதைக்கின்றன.
காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகளில் நிறையும் இரத்தம், வெட்டப்பட்ட உறுப்புகள், உயிரிழக்கும் மனிதர்களைப் பார்த்தாவது போர்களை நிறுத்துவீர்களா என்று ஒபாமாவை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை ஒன்றை அங்கே பணியாற்றும் மருத்துவர் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து:ஜூலை 25). சம காலத்தில் வேட்டையாடப்படும் உணர்வுகளை, உளவியலை, வாழ்க்கையை மீட்டெடுக்க புத்தகங்கள் ஏராளமான சாத்தியங்களை முன்வைக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குரலை நூல்கள் எழுப்பமுடியும்.
வாசிப்பு பகிர்தலைக் கற்பிக்கிறது; மனித வாழ்வை மேன்மைப் படுத்துகிறது; நேயம் கொண்டாடும் நெஞ்சத்தை வழங்குகிறது.
(ஓசூர் புத்தக் கண்காட்சியில் ஜூலை 25 அன்று நடந்த கூட்டத்தில் பேசியதிலிருந்து)
நன்றி: தீக்கதிர் – இலக்கிய சோலை (ஜூலை 28, 2014)