தமிழ் ஈழம் மலருமா? தமிழரின் நிலை உயருமா?

1

பவள சங்கரி

ராஜபட்சே 45 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி கண்டிருக்கிறார். தம் பதவிக்காலம் முடிய இரண்டாண்டுகள் இருக்கும்போதே தேர்தலில் நின்று தம் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியவர், தோல்வி கண்டிருக்கிறார். இதற்காக சட்டத் திருத்தங்களெல்லாம் செய்தார். அந்நாட்டு சட்டப்படி அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதைக்கூட திருத்தியமைத்து தேர்தலைச் சந்தித்தார். அவருடைய அரசவையில் பணியாற்றிய மைத்ரிபாலா சிறீசேனா அவர்கள், இவரைவிட 6 சதவிகிதம் அதிகமாக வாக்குகள் பெற்று ஏழாவது அதிபராக பதவியேற்றுள்ளார். சிறீசேனா அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆதரவு அளித்தார்கள் என்று கூற முடியாவிட்டாலும், பெரும்பாலான தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடைய விக்கிரம சிங்கே அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இருவரின் நிலைப்பாடும் தமிழர்களுக்கு மேன்மையான வாழ்வைத் தரவல்லது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைந்தால் அது இந்தியாவிற்கும் பெரும் உதவியாக இருக்கும். வாழ்வொழிந்த தமிழர்களின் வாழ்வு பெருமளவில் மேம்படும் என்ற நம்பிக்கையில் தமிழ் கூட்டமைப்பினர் சிறீசேனா அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளனர். மலையகத்து மக்களும், கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம், வவுனியா பகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் பெருமக்களுக்கும் சிறந்த நலமான வாழ்வை அளிப்பார் என்று ஈழ மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இந்திய மண்ணில் அகதிகளாக உள்ள தமிழர்கள் தங்கள் தாயகம் சென்றடையும் வகையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். இந்தியாவில் உள்ள மீனவர்கள் பிரச்சனையும் தீரும் என்று இரு நாடுகளில் உள்ள மீனவ மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். அதிபர் சிறீசேனா அவர்கள் வளமான வாழ்க்கையைத் தருவார் என்று எதிர்பார்த்து வாக்களித்த ஈழத் தமிழர்களுக்கும், அதிபர் பதவியேற்றுள்ள சிறீசேனா அவர்களுக்கும், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள விக்கிரமசிங்கே அவர்களையும் வாழ்த்துவோம். புத்தாண்டு, புதிய அரசு, எழுச்சியான வாழ்க்கை ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு. மைத்ரிபாலா சிறீசேனா தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மிக முக்கியமான செய்தி, தாம் பதவிக்கு வந்த நூறு நாட்களில் ராஜபட்சவால் கொண்டு வரப்பட்ட அதிபரின் சர்வாதிகார ஆட்சி முறையை அகற்றுவதோடு, காவல் துறை, நீதித் துறை, நிர்வாகம் போன்ற அனைத்தும் சுதந்திரமாகச் செயல்படும் நாடாளுமன்ற ஜனநாயக முறையை நிறுவுவது என்பதுதான். மைத்ரிபாலா சிறீசேனா உள்நாட்டுப் போரின்போது கடைசி இரண்டு வாரங்கள் ராணுவ அமைச்சராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "தமிழ் ஈழம் மலருமா? தமிழரின் நிலை உயருமா?"

  1. ஒரு நீண்ட நெடிய வரலாறு ..  ஒரு இனத்தின் வாழ்வாதாரம்…
    மொழியின் அடிப்படையில் நம் இனம்…   இலங்கைத் தமிழர்கள் என்றாலே..
    போராட்டம்…  யுத்த களம்…  இன்னல்களின் இடையே வாழும் 
    எம்மவர் என்னும் நிலை..  பல்வேறு சூழல்களைக் கடந்து…
    இனியாவது விடிவெள்ளி தோன்றுமா.. தமிழர்தம் வாழ்நிலை தழைக்குமா?
    என்னும் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் முளைத்திடும் கேள்விக்கு..
    அண்மையில் ஏற்பட்டுள்ள மாறுதல் சற்று ஆறுதலானதுதான்!
    பதவிக்கு வருபவர்கள்..  தம் நாட்டு மக்களை அன்புடன் பரிபாலனம் செய்து 
    எதிர்காலம் அவர்களுக்கும் உண்டு என்கிற நிலையை உருவாக்க வேண்டும்..
    பவளசங்கரியின் பதிவிது ..  எல்லோரின் எண்ணங்களின் தொகுப்பாக…

    அன்புடன்..
    காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.