ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 1
—சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மனித இதயம்
“மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.” – கலில் கிப்ரான்.
ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
ஓதும் !
பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனிக்கும் போது ?
கடவுளின் படைப்பு
கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.” – கலில் கிப்ரான்.
“கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.” – கிளாடி பிராக்டன் (Claude Bragdon)
“நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது. மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும். ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of Eternity) ஒருபோதும் ஒரு ரகசியத்தை எதிர்காலம் புறக்கணிக்காது !” – கலில் கிப்ரான்
நானொரு வார்த்தை சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது !
ஏனெனில்
நீடிக்கும் வரலாற்று நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிப்ப தில்லை
ஒரு ரகசியத்தை !
“கடவுளின் பிரதிபலிப்பான அன்பின் மகிமையிலும் அழகின் ஒளிச்சுடரிலும் நான் வாழப் பிறந்தேன். இங்கிருக்கிறேன் நான் (அவ்விதம்) வாழ்ந்து கொண்டு ! அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் துரத்த முடியாது. ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் !”- கலில் கிப்ரான்
அன்பின் மகிமை,
அழகின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
அவற்றில் வாழப் பிறந்தேன் !
அவ்விதத்தில்
நானிங்கு வசிக்கிறேன் !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
கலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு
லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.
வட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார்.
சிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை.
கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது..
++++++++++++++++++