வயசு வந்து போச்சு!
-ஆர். எஸ். கலா
எடுப்பான உடை அணிந்தேன்
மிடுக்கான நடை போட்டேன்
கடுகடுப்பாகக் கோபம் காட்டி வந்தேன்
உறவைத் தண்டித்தேன் உரிமைக்குக்
குரல் கொடுத்தேன்!
வியர்வை சிந்தி உழைத்தேன்
வாழ்வில் பல இன்பங்களை
அனுபவித்தேன்!
பல அறுசுவை உணவைச் சுவைத்தேன்
மனைவியை நேசித்தேன் பிள்ளையைச்
சுவாசித்தேன் நல்லதோர் குடும்பம்
பல்கலைக்கழகமாக வாழ்ந்து வந்தேன்!
அது ஒரு காலம் ஓடிப்போனது வெகு தூரம்
வயசு வந்து போச்சு அத்தனை நாடகமும்
முடிஞ்சுபோச்சு!
எத்தனையோ கோபங்கள் நான் காட்ட
அத்தனையும் தாங்கி நின்று என்னை மடி
சாத்தியவள் என்னவள்!
சோகத்தில் பங்கு எடுக்க அன்னை,
தோள்கொடுக்கச் சில நண்பர்கள்
அது அப்போ…இளமைக் காலம்!
இன்று என் உயிர் மட்டுமே தஞ்சம்
விக்கல் எடுக்கின்றது நீர் கொடுக்க
ஒரு கை இல்லை!
என் உயிர் பிரியும் முன் என்னவள் உயிர்
நீத்தாள்; நிராகரிக்கப்பட்டேன் நான்
என் துணையாக ஒரு வெத்தலைப் பையும்
என் இளமை நினைவுமே மிச்சம்!
பழைய வாழ்வையும் வெத்தலையையும்
மனசும் வாயும் அசைபோட வாழ்வின்
இறுதியை நோக்கி இல்லத்தில் நான்!!