கிரேசி மோகன்
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

ஓவியம்: கேஷவ்
ஓவியம்: கேஷவ்

வெண்பாவாக்கம் தமிழில்
————————————————

’’வீரியன் வீரன் வியாபகன் சைதன்ய
சூரியன் சூக்கும காரியன் -கூறிய
சிங்கன் எதிரிக்கு சொப்பனம் காலகாலன்
மங்களம் சேர்த்திடும் மால்’’….(1)
’’எமக்கே எமக்கென்று இவ்வுடம்பைப் பேணி
எமர்க்கே அளிப்பீர் எரித்து -நமக்கே
நமக்குண்டு நாரண நாமமதை நெஞ்சில்
சுமப்பீர் அதுதான் சுகம்’’….(2)

’’மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
உய்யும் ஒரேஆன்மன் ஒளியாக -அய்யநின்
ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
சீரான வாழ்வில் செலுத்து’’….(3)

’’பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்
சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
எங்கும் திகழ்வோனை ஏத்து’’….(4)

’’சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்”….(5)

’’திருப்பாற்க் கடலில் திருவனந்தப் பாய்மேல்
விருப்பாய்க் கிடப்பாய் வெகுண்டால் -உரத்தால்
இரணியனைக் கொல்ல இரும்பைப் பிளந்து
நரசிங்கம் ஆவோய் நம:’’….(6)

’’காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு’’….(7)

’’எங்கரி என்றே இரணியன் கேளும்முன்
அங்கொரு தூணில் அதிர்ந்தவன் -சங்கரி
அண்ணனை ஆகாய வண்ணனை ஆனந்தக்
கண்ணனை நெஞ்சே கருது….(8)

’’தந்தைசொல் மந்திரம் தப்பென்ற பிள்ளைக்காய்
அந்தவோர் தூணில் அலமலங்க -வந்திருந்து
மன்னன் இரணியன் மார்பைப் பிளந்தவனைக்
கண்ணனை நெஞ்சே கருது’’….(9)

’’எந்தையே எவ்வுயிர்க்கும் முந்தையே ஏகாந்த
சிந்தையே சிக்காத விந்தையே -கந்தையே
ஆனாலு(ம்) என்நெஞ்சைக் கட்டிக் கசக்கிடு
தூணாளும் சிங்கா தயவு’’….(10)

’’தூணுண்டு வீட்டில் துரும்புமுண்டு, வாஞ்சையாய்
நானுண்டு வாராய் நரசிம்மா -பூநின்ற
சாந்த இலக்குமியை ஏந்திக் களிக்கின்ற
காந்த வடிவில் கனிந்து….(11)

’’முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
இல்லை இறையென்று சொல்லி இரையாக
மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து’’….(12)
நரசிம்மாவதாரம்….
———————————-

பாகவதம் ஸ்ரீமத் நாராயணீயம் வாசித்து வெண்பாக்களாக்கிக் கொண்டிருக்கிறேன்….நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு
நரசிம்மாவதாரத்தை பகிர்ந்து கொள்கிறேன்….
இரணியன் பெற்ற வரம்
——————————————-
’’அல்லில், பகலில், அகத்துள், அதன்வெளியில்,
புல்புழு, பூச்சி, பறவையால், -கொல்லும்
மனிதனால், காட்டு மிருகத்தால், சாகா
தனதுயிர் கேட்டுத் தவம்….(1)
பிரகலாதன் ஜனனம்
————————————-
இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
தோன்றினன் நாரணத் தொண்டு….(2)

”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
நற்கதியை நாரதன் நன்கு….(3)
*கயாது-பிரகலாதன் தாயார்
பிரகலாதனை தன் வழிக்கு கொண்டு வர இரணியன் வழிகள்
——————————————————————————————————–
அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
மறையென நின்றான் மகன்….(4)

முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….(5)

பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….(6)

விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
பேரலை போலெழுந்தான் பிஞ்சு….(7)

கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
நாவின்தன் மென்மை நலிந்தது, -சாவிந்த
பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
நொள்ளையான ஆட்கள் நமுத்து….(8)
இரணியன் -பிரகலாத சம்வாதம்
—————————————————————————
ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
நாரண சக்திக்கு பூரண பக்தியே
காரணம் என்றான் கொழுந்து….(9)

காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை….(10)
நரசிம்மர் தூணில்
——————————-
பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
வேகமாய் வைகுண்டம் விட்டு….(11)
இரணிய வதம்
—————————–
கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு….(12)
சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு….(13)….
பிரகலாதன் நரசிம்மர் உக்ரம் தணித்தல்
————————————————————————
ஆவேச மான அரியை அடக்கிட
பூவாசத் தாயே பயந்திட -சாவாச
மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
தேகம் தழுவத் தணிவு….(14)

கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்….(15)
லக்‌ஷ்மியுடன் சாந்த நரசிம்மர்
———————————————————
ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து….(16)
—————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.