மாதவன்.

வெளியே மழை சத்தமின்றி பெய்துகொண்டிருந்தது. ஒருமாதிரி ஊதாநிறத்தில் கண்ணாடி ஜன்னல்களில் கோடுகளாக வழிந்துகொண்டிருந்தது.

அமில மழை இப்படித்தான் பலவிதவண்ணங்களில் பெய்கின்றது. மூன்றுநாள் முன்பு இளம்பச்சை நிறத்தில் பெய்தது. பார்வைக்கு மிக அழகாக ஓவியச்சிதறல்போல தெரிந்தாலும் அதன் ஆபத்தை வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது.

இந்த அமில மழையின் ஒரேயொரு துளி கூட இரும்புமாதிரியான கடினமான உலோகங்களையே கரைத்துவிடக்கூடியது. சென்றவாரத்தின் ஒரு மழையில் அப்படித்தான் அந்த முட்டாள் நாய்க்குட்டி வெளியில் சென்று கருகி இறந்துபோனது.

இத்தனைக்கும் இந்த வீடு, வீடென்று இதை சொல்லிவிட முடியாது. இது ஒரு பெரிய ஹால் என்றுகூட சொல்லுவது பொருத்தமில்லை. வேண்டுமென்றால் ஒரு ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

தனித்தனியான அறைகளெல்லாம் கிடையாது. பரந்துவிரிந்த பெரிய கூடம். இதன் மேற்கூரை மேலே செல்லச்செல்ல கூர்மையாக இருக்கும்படி அமைக்கப்படிருக்கிறது.

அமில மழையால் அரித்துப்போய்விடாதபடி ஒருவித கலவையான உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தக்கூரை மட்டும் இல்லையென்றால் இங்கிருக்கும் 88 உயிர்களும்… சாரி… இப்போது 87 தான். எபோதோ அமிலமழையில் கருகிக்கரைந்திருப்போம்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்ற வருடம் கிபி 2065 கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டுநாள் முன்பு என் கணவர் வீட்டிற்கு வந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர் இதுவரை எந்த பண்டிகைதினத்திற்கும் வீட்டில் இருந்ததில்லை.

இஸ்ரோ நாசா என்று அவர் பணிபுரியாத நாடுகளே இல்லை. ஆமாம் அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். மனிதர்கள் ஐநூறு வருடங்கள்வரை உயிர்வாழும் மருந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் என்று சொன்னால் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.

வீட்டிற்கு வந்து சிலநாட்கள் பித்துக்குளிபோலத்தான் சுற்றிக்கொண்டிருந்தார். எப்போதும் எங்கள் வீட்டின் மாடியிலுள்ள லேபில் மணிக்கணக்காய் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.

ஏதோ புதிய விண்கலம் ஒன்று தாயாரித்துக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார். திருமணம் ஆனதிலிருந்தே அவரைப்பற்றியும் அவரது ஆராய்ச்சிகள் மீதான பைத்தியம் பற்றியும் எனக்குத்தெரியுமென்பதால் விட்டுவிட்டேன்.

திடீரென்று ஒருநாள் அவரது இன்னும் சில நண்பர்களும் வந்திறங்கியபோது நான் கொஞ்சம் பயந்துபோனேன். கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்தார். நாட்கள் செல்லச்செல்ல இன்னும் சிலநண்பர்கள் குடும்பசகிதமாக எங்கள் வீட்டிற்கு வந்தபோது நான் நச்சரிக்கத்தொடங்கினேன்.

அவர் அரசாங்கத்திற்கு எதிராக ஏதோ ஆய்வு செய்கின்றாரோ என்னும் எனது சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லிவிட்டேன். அப்போதுதான் தயங்கித்தயங்கி அவர் சொன்னார். அவரை நாசாவிலிருந்து பணிநீக்கம் செய்துவிட்டதாக. அவர் என்னிடம் படிக்கச்சொல்லித் தந்த நாசாவின் கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

ஒரு ஆய்வின் முடிவில் என் கணவர் சமர்ப்பித்த தியரியின்படி, இயற்கை அழிவின் காரணமாகவும் புவிவெப்பமயமாவதன் தொடர்ச்சியின் விளைவாகவும், 2066 மார்ச் மாத வாக்கில், நம் பால்வீதிமுழுக்க ஒரு வித அமில மழை பொழிந்து பூமி அழியப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

அந்த தியரியைப்படித்த நாசா குழுவினர் இவருக்கு மனநலம் சரியில்லை என்று சொல்லி இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறது. அதனால் தான் இந்த கிறிஸ்த்மஸிற்கு மனிதர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அப்புறம் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்தில் பெரிய பெரிய உலோகத்தகடுகள் எல்லாம் வைத்து மிகப்பெரிய தட்டைவடிவில் ஏதோ ஒன்றை இணைத்து உருவாக்கினார்கள்.

வந்திருந்த நண்பர்கள் அனைவருமே பெரியபெரிய அறிவியல் மேதைகள். அவர்கள் எல்லோருமே அதிகம் யோசித்தார்கள், அதிகம் பேசினார்கள். அதிகம் சிகரெட் புகைத்தார்கள்.

பிறகு ஒருநாள் அந்த பறக்கும் தட்டை, ஆமாம் அப்படித்தான் அதை அழைத்தார்கள். அந்த பறக்கும் தட்டை சோதனை ஓட்டம் பார்த்தார்கள். இரண்டு அடிகள் மேலெழும்பி தொப்பென்று விழுந்துவிட்டது. மறுபடி யோசனைகள் பேச்சுக்கள் சிகரெட்டுகள்.

இறுதியாக ஒரு நன்னாளில் அது பறக்கத்தொடங்கியபோது ராணுவ அதிகாரிகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். என் கணவரும் நண்பர்களும் என்ன சொன்னார்களோ அவர்கள் சிரித்துக்கொண்டே திரும்பிச்சென்றுவிட்டார்கள்.

நாங்கள் மொத்தம் 88 பேர்கள் இருந்தோம். அதில் நான்கு நாய் ஒரு முயல் மூன்று பூனைகளும் அடக்கம். அந்த தட்டு அவ்வளவுதான் தாங்குமென்று சொன்னார்கள்.

சூரிய ஒளி சக்தியாலும் பேட்டரிகளாலும் பெட்ரோல் எரிபொருளாலும் அது பயணிக்கும் என்றார்கள். செவ்வாய்க்கு அருகில் ஏதோ ஒரு வாயில் நுழையாத பெயருள்ள புதிய கிரகம் என்றார்கள். என்னென்னவோ ஒளியாண்டுகள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பறக்கும் தட்டில் விண்வெளியில் பயணிக்கும்போது காலம் நின்றுபோய்விடும் எனவே பிரச்சனையில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு இவை எதிலும் ஆர்வமோ புரிதலோ இல்லை. நான் உண்டு என் மகள் ஜெஸ்ஸி உண்டு என்று இருந்தேன்.

அந்த ஆண்டின் பிப்ரவரி கடைசியில் அமிலமழை பொழியத்துவங்கியபோதுதான், அதில் நனைந்து சில பனிக்கரடிகள் கருகிச்சாம்பலாய் கிடந்ததை டிவியில் பார்த்தபோதுதான் என் கணவரை எல்லோருமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

ஆனால் அவர் இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பதுபோல சாதாரணமாக இருந்தார். தட்டிலிருந்த எங்களில் சில சீனர்களும் அரேபியர்களும் யூதர்களும் இந்தியர்களும் என்று ஓரளவு எல்லா தேசத்தவர்களும் இருந்தார்கள்.

எனக்கு என் தாய்மொழி தவிர வேறு எதுவும் தெரியாததால் அமைதியாகவே இருந்தேன். செயற்கைக்கோள்மூலம் அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை வைத்துப்பார்த்ததில் எங்கள் பயணத்தின் இரண்டாம் நாளே பூமி சாம்பல்மேடாக இருந்ததைக்கண்டோம். எல்லோரும் கணத்த மவுனத்தோடு அழுதுகொண்டிருந்தோம். தனியாக தப்பித்து உயிர்வாழ்வது குறித்த குற்றவுணர்வும் பயமும் எல்லோரையும் வாட்டியது.

பயணத்தின் பத்தாம்நாள் பறக்கும்தட்டில் கோளாறு ஏற்பட்டது. பிரபஞ்ச வெளியில் மெல்ல தக்கத்தக்கி ஆடத்தொடங்கியது. என் கணவர் ஏதேதோ கணக்குப்போட்டுப்பார்த்துவிட்டு உதட்டைச்சுழித்தார். பெருத்த ஆயாசம் தெரிந்தது அவர் முகத்தில். சாட்டிலைட் படங்கள் மேப்புகள் எல்லாவற்றையும் விரித்து நண்பர்களோடு ஆலோசித்தார்.

என்னென்னவோ வாக்குவாதமெல்லாம் வந்தது. பளீரென்று ஏதோ யோசனை வந்ததுபோல என் கணவர் ஒரு ஐடியாவைக்கூற சந்தோஷமாக எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக வழியில் அகப்பட்ட ஒரு பிரம்மாண்டமான விண்கல்லில் தட்டை இறக்கி கோளாறையெல்லாம் சரிசெய்துவிட்டுப்பிறகு புறப்படுவதுதான் திட்டம்.

தட்டை விண்கல்லில் இறக்கி சோதனைசெய்ய ஒரு ரோபோவை களமிறக்கியதில் ஆக்ஸிஜனுக்கோ தாவரத்திற்கோ நீருக்கோ எந்த ஒரு உயிருக்கோ வழியில்லாத இடம் அது என்று புரிந்தது. வேறுவழியின்றி ஆக்ஸிஜன் மாஸ்க்குகளோடு இங்குவந்து இறங்கினோம்.

ரெடிமேட் ஆக தயார் செய்து வைத்திருந்த உலோகத்தகடுகள் கொண்டு இணைத்து இந்த ஆய்வுக்கூடத்தையும் உருவாக்கியாயிற்று.

தினமும் தூங்கி எழுந்ததும் என் கணவர் அவர் நண்பர்கள் கூட இன்னும் சிலர் அனைவரும் சென்று பறக்கும்தட்டை சரிசெய்ய முயற்சிப்பதும். பிறகு களைத்ததும் திரும்பிவருவதுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரவுபகல் என்றெல்லாம் எதுவுமின்றி எப்போதும் அரையிருட்டாகவே இருந்தது. ஒரு இருநூறு தப்படி நடந்தால் நாங்கள் இறங்கியிருக்கும் விண்கல்லின் விளிம்பு வந்துவிடும்.

அமிலமழையற்ற நாட்களில் நான் ஜெஸ்ஸியை அழைத்துக்கொண்டு மிதந்து அங்கு சென்று அங்கிருக்கும் ஒரு கூரான பாறையைப் பிடித்துக்கொள்வேன்.

தலைக்குமேலே நட்சத்திரங்களை பார்த்துப்பழகிய ஜெஸ்ஸிக்கும் எனக்கும், எங்கள் கால்களுக்குகீழே ஒளிரும் நட்சத்திரக்கூட்டங்கள் பெரிய பரவசம்.

அவை ஒவ்வொன்றிற்கும் நாங்கள் பெயர்வைத்திருக்கிறோம். ஜெஸ்ஸிக்கு எல்லாப்பெயர்களும் மனப்பாடம். ஏதேனும் நட்சத்திரத்தைக்காட்டி கேட்டால் சரியாக பெயர் சொல்லிவிடுவாள். சுற்றிலும் எடையற்று அங்கங்கு மிதக்கும் சிறுசிறுகற்களை நகர்த்தியபடி விளையாடிக்கொண்டிருப்போம். ஜெஸ்ஸிக்கு அதில் மிகுந்த விருப்பமுண்டு.

இன்று கொட்டும் மழையைப்பார்த்தால் இன்னும் இரண்டுநாட்களுக்கு விடாதுபோலத்தெரிகிறது. வெளியில் செல்லாவிட்டாலும் நாய்க்குட்டியுடனாவது ஜெஸ்ஸி பொழுதை போக்கிக்கொண்டிருந்தாள். இப்போது அதுவும் இல்லை.

கையிருப்பில் இருக்கும் உணவும் நீரும் சிக்கனமாக உபயோகித்தால் இன்னும் ஒருமாதம் வரை வரும். அதற்குப்பிறகு? கொஞ்சம் மழை ஓய்ந்தபின்பு வெளியில் சென்றவர்களெல்லாம் வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் வாய்விட்டு அழுதார்கள்.

பறக்கும் தட்டின் ஏதோ ஒரு சிறிய பகுதி பர்மனென்ட் ஆக சிதைந்துவிட்டதாம். அனேகமாக சரிசெய்ய முடியாதென்றுதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். என் கணவர் வெற்றுமுயற்சியாக எல்லோரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

நான் ஜெஸ்ஸியோடு வெளியேறி அந்த விளிம்பிற்கு மிதந்தேன். ஜெஸ்ஸி என் கழுத்தை இறுகக்கட்டியிருந்தாள். விளிம்பிற்குச்சென்றதும் ஜெஸ்ஸி கேட்டாள் “நாம எப்ப மம்மி நம்ம வீட்டுக்குப்போவோம்”?

நான் பதில் சொல்லாமல் அவளுக்கு நட்சத்திரங்களை வேடிக்கை காண்பித்தேன்.

மெல்ல குளிர்காற்று வீசியது …

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *