— கார்த்தி ராஜூ.

கரியமேகம் கண்ணீர் விடத் தொடங்கிய போது கார்த்திக் அந்தப் பேருந்தில் ஏறி இருந்தான். கூட்டம் என்றும் சொல்ல முடியாது … அதே சமயம் காலி என்றும் சொல்ல முடியாது. ஒரு மிதமான கூட்டம். ஜன்னலோர இருக்கையாய் தேடி அமர்ந்தான் கார்த்திக். வண்டி கிளம்பத் தொடங்கியதும் மேகம் கண்ணீர் விடத்தொடங்கிய நேரமும் சரியாய் இருந்தது. அந்த சாரல்களிடம் ஒவ்வொன்றாய் நலம் விசாரித்து பேசி கொண்டிருந்தான். அந்த சாரல்களுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்புப்பிணைப்பு வண்டியின் மேல் கூரையில் இருந்து ஒழுகிய துளிகளுக்கு இடம் கொடுத்துத் தள்ளி உட்காரச் செய்தது. இம்முறை அவன் நினைவுகள் ஒவ்வொரு மைல்களாய் அவனோடு பயணிக்கத் தொடங்கின.

சிறு வயதுக் குறும்புகள்…..வாத்தியாரிடம் செய்த சில்மிஷங்கள்…. நண்பனுக்காக வாங்கிய தண்டைனைகள்…. சொல்லாத காதல்கள்…..மறைக்கப் பட்ட உணர்வுகள்…..காயம் பட்ட இதயம் …என தன் கட்டுபாட்டை இழந்து அது பயணிக்கத் தொடங்கியபோது நடத்துனர் பயணச்சீட்டிற்காக அவனருகே வந்து நின்றார்.

“சார் … குருவம்பட்டிக்கு ஒரு டிக்கெட் குடுங்க …” சில்லறை வாங்கிவிட்டு மனதிற்குள் எதோ ஒன்றை நினைத்து பெருமூச்சு விட்டு சாய்ந்து படுத்தான். அலுவல் விஷயமாக அந்த கிராமத்திற்கு அவன் சென்றாலும் மனது மட்டும் அவன் விட்டுச் சென்ற சொந்தங்களை எண்ணிக் கொண்டிருந்தது. சிறு வயதில் கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்து, சென்னைக்கடற்கரையில் தஞ்சம் புகுந்தவன், பால்ய ஞாபகங்களை தவழ விட்டான்.

தினமும் காலை டீக்கடையிலும் மாலை சுண்டல் விற்பதற்கும் சென்று விடுவான் கார்த்திக். அவனுக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் அந்த கடற்கரைக்கு வரும் முதியவர்களும் பகுதி நேர காதலர்களும் தான்.

“சுண்டல்………. சுண்டல்……… சுவையான சுண்டல்!“

“சார் சுண்டல் சார்”….”மேடம் சுண்டல் மேடம் !“

“பத்து ரூபாய்க்கு குடுப்பா …!”

“இந்தாங்க சார்…… அம்மா நீங்களும் வாங்கிகங்க…”

“இந்தா சார்…இன்னொன்னு ….சும்மா ஜமாய்ங்க..!”

இப்படித்தான் வருடத்தில் 365 நாட்களும் கழியும் கார்த்திக்குக்கு. அந்த கடற்கரைக்கு குழந்தைகளோடு வரும் பெற்றோரையும், அவர்கள் அந்த குழந்தையை கொஞ்சும்போது அவனுக்கு ஏக்கமாய் வருகிற கண்ணீர்த் துளிகள் கடலில் சேர்ந்ததால்தான் என்னவோ கடல்நீரும் உப்பு கரிக்குது போலும்.

அன்றும் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு ஒரு படகின் ஓரமாய் உட்கார்ந்தான் கார்த்திக்.

“வளையல், பொம்மை வாங்கிறிங்களா சார்?” என சென்னைக்கே உரித்தான பாணியில் ஒரு பெண் குரல்.

திரும்பிப் பார்த்தால் கருமையும் மாநிறமும் சேர்ந்த கலைவையாய் எண்ணெய் வைக்காத தலையோடு, கையில் வளையல்களோடும் கூடையில் பொம்மைகளோடும் பதினாறு பதினைந்து வயது சிறுமி.

“இல்லைமா…வேணாம் … நானே சுண்டல் விக்கிறவன்…எனக்கு எதுக்கு வளையல் பொம்மை எல்லாம்?”

இதை கேட்ட அந்தப் பெண் முகம் வாடி அழ தொடங்கி விட்டாள்.

“ஏ புள்ள …இந்தா புள்ள ….ஏன் அழுவுற?”

“சாயங்காலம் ஆகிப் போச்சு, இன்னும் நான் எதுவுமே விக்கல….எங்க அம்மா என்னைக் கொன்னுடுவாங்க !”….என்றாள் விக்கலுடன்.

அவள் அழகில்லை என்றாலும் அந்த வெகுளித்தனம் அவனுக்கு பிடித்திருந்தது,

“இந்தா இருபது ரூபா …கொண்டு போய் உங்க ஆத்தா கிட்ட குடு”

சற்று தயங்கி அந்தக் காசை வாங்கியவள் சின்னதாக சிரித்துவிட்டு ஓடினாள்.

“நாளைக்கு இதே இடத்துக்கு வாங்க…காச கொடுத்துடறேன்.”…..புன்னகையோடு அவள் சந்தோஷப்பட்டதை எண்ணி தானும் சந்தோஷப்பட்டான்.

மறுநாள் அதே இடத்தில், அதே சந்திப்பு …ஆனால் இந்த முறை சற்று நெருக்கத்துடன். அவள் பெயர் பாத்திம்மா. மற்றபடி அவர்களுக்குள் எல்லா விஷயங்களும் ஒத்துப் போயின. வாழ்கையை புதிதாக பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக். தனக்கு ஒரு புது சொந்தம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடின…ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் பேசிகொண்டு இருக்கையில் அவள் அம்மா அவளை அடித்து இழுத்துச் சென்றவள்தான்…பின்பு அந்த கடற்கரையில் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை அவள் தென்படவில்லை. இருந்த ஒரு சொந்தமும் விட்டுப் போனதை எண்ணிக் கடலிடம் அழுது முறையிடுவான் கார்த்திக். பின்னாளில் முட்டி மோதி பத்திரிகையில் எதோ எடுபிடி வேலை பார்த்து இப்போது ஒரு ஒரு சின்ன ரிபோர்டர் ஆக இருக்கிறான்.

அருகம்பட்டிதான் கார்த்திக்கின் சொந்த ஊர். குருவம்பட்டியிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர். இயற்கை வளம் செழிக்கும் இடம். விவசாயத்திற்கு ஏற்ற இடம். பயணிகள் நிழற்குடையாய் நின்ற பனைமரங்களும் வெயிலில் கருகி போன துணை மரங்களும், அங்கே ஓடி விளையாடி திரிந்த தும்பிகளும், கலெக்டரிடம் மனு கொடுத்து ஏற்படுத்திய மின் கம்பிகளும், சில்மிஷமாய் சிரித்து பறக்கும் சிட்டுக்குருவிகளும், சின்னதாய் காக்கைகள் குளியல்கள் போடும் அருவிகளும், புழுதி படிந்து வெறிச்சோடிய சாலைகளும் அமைதியாய் விடியும் காலைகளும் என அங்கே ஒரு ஒட்டு வீட்டில்தான் கார்த்திக் வசித்து வந்தான். இப்போதும் அவனுக்கு தன் பெற்றோரை பார்க்க மனம் வர வில்லை… வண்டி தேநீர் இடைவேளையில் நின்று கிளம்பியது. வருடங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மட்டும் தூறலாய் கார்த்திக்கின் இதயத்தில் சொட்டிக் கொண்டிருந்தது…..முற்று பெறாமல். ஜன்னலின் ஓரம் தலை சாய்த்து கண்ணாடியிடம் காதோரமாய் அது சொல்லும் ரகசிய நினைவுகளை கொண்டு தன் பயணத்தை மீண்டும் ஓட விட்டான்… பின்னால் யாரோ கத்தும் சத்தம் கேட்டது …திரும்பி பார்த்தான்.

“அஞ்சலி ….அழுவாதம்மா… அம்மா உனக்கு எல்லாம் வாங்கி தரேன் …” என்று ஒரு தாய் எட்டு வயது பெண் குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மரத்துப்போன மனம் வலிக்கத் தொடங்கியது. தலையை திருப்பி நன்றாகச் சாய்ந்து பெருமூச்சு விட்டுக் கண்களை இறுக மூடி ஐந்து வருடம் பின்னோக்கிச் சென்றான்.

“அஞ்சலி “……ஆயுளுக்கும் மறக்க முடியாத பெயர்….. அவன் ஊரை விட்டு செல்லும் சமயம் அவனின் கை பிடித்து “என்னால முடியல கார்த்தி….எனக்கு வாழவே புடிக்கல …. என்ன எங்கயாவது கூட்டிட்டுப் போய்டு …” என்று அவள் கதறிய வார்த்தைகளும் கண்ணீரும் அவன் காதோரம் ஒலித்தும் இதயத்தில் இன்றும் வலித்துக் கொண்டு இருக்கின்றன. காதலிக்க ஜாதி வேண்டாம் என்று அவள் சொன்னாள். அவள் குடும்பமோ கல்யாணத்திற்கு ஜாதி வேண்டும் என்று அவனை பிரித்து அவளை வேறு ஊரில் கட்டிக் கொடுத்தனர். அவளை அவள் கணவன் துன்புறுத்திக் கொன்ற விஷயம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். ஊருக்கு அதன் பெயர் “காரணமில்லாத் தற்கொலை“.

கார்த்திக்கின் கண்களோடு சறுக்கி விளையாடும் கண்ணீர் துளிகள் இன்று முட்டாளாய் அவனை பார்த்தது. அவன் உடலோடு ஒட்டிய அவள் உயிர் பிரியப் போகிறேன் எனக் கதறுகிறது. வார்த்தைகள் மௌனமொழி பேசுகின்றன. அவள் தந்த நினைவு பரிசுகளை பொக்கிஷமாய் இதயத்தினுள் பூட்டி வைத்திருந்தான் கார்த்திக். அவன் மனங்கள் அவள் ரணங்களால் அலங்கரிக்க பட்ட போதும், அதன் உயிர் அவளுடன் வாழ்ந்த நொடிகளை கொண்டு தத்தளிக்கிறது! வலிகளில் லயித்துத் துவண்டு போன அவன் இதயம் அவள் சென்ற பாதையை தேடி அலைகிறது. ஒவ்வொரு நிமிடமும் அவன் மூச்சு உள்ளேறும் பொழுதெல்லாம் அவள் கூந்தல் வாசத்தையும் அவள் மூச்சுக் காற்றும் சுவாசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பொழுது அது இல்லை என அவன் மூளை உணர்ந்தாலும்….. இதயம் மறுக்கின்றது.

இந்த நொடி உடனே முடிய வேண்டும். சதைகள் பிசைந்து நரம்புகள் முறுக்கி உடல் ஊனமாய் பேச முடியாமல் கண்ணீரை மட்டுமே மொழியாகக் கொண்டு இனிமேலும் கார்த்திக்கால் பேச முடியாது, மரணம் என்ற சொல்லின் அர்த்தம் அவள் பிரிவில் உணர்ந்தான் கார்த்திக். எதிர்பார்ப்பில்லா அன்பு அவள் தந்து அரவணைத்த பொழுது இருந்த மகிழ்ச்சி இப்போது அவள் இல்லை எனத் தெரிந்ததும் சுக்கு நூறாய் ஆனான். அவள் பேசிய வார்த்தைகள் மட்டும் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் யுகமாய் ஓடி கொண்டிருந்தது. இமைகள் விலகாமல் ஒரே இடத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்.

மழை நின்று, லேசாக வெட்கம் விட்டு முகில்களுக்குள் முக்காடு போட்டு மறைந்திருந்த சூரியன் எட்டி பார்த்தது. இதமான நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கியவன், கையிலிருந்த பையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டுத் தனக்குத் தானே சிரித்து கொண்டான். குருவம்பட்டி ஐந்து கிலோமீட்டர் என பொறிக்கப்பட்டிருந்த மைல்கல் சிறிதுநேரம் தன்னை சிம்மாசனமாய் கருதி கொள்ளும் படி கேட்டது. அந்த மைல்கல் அவன் காலடி கிடந்தது கெஞ்சியதிற்காக அதன் மேல் உட்கார்ந்து இளைப்பாறினான். கண்ணுக்கெட்டிய தூரம் சேறும் சகதியும் மட்டுமே கம்பளம் விரித்து காத்திருந்தது. நடக்க தொடங்கினான். அப்போது பத்து ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு பெரியவர் அவ்வழி சென்றார்.

“ஐயா … குருவம்பட்டிக்கு இந்த வழியா போக முடியுமா???“

“என்னது …??“

“ஐயாஆஆ….. குருவம்பட்டிக்கு இந்த வழியா போக முடியுமானு கேட்டேன்…” இந்த முறை சத்தமாக ….

“ம்ம்ம்ம் போலாம் …போலாம் …”

“நீங்க எந்த வழியில போறீங்க…??

“நான் அருகம்பட்டிக்கு போகணும் ….இந்த வழியா தான் போறேன் …”

“சரி வாங்க ஐயா … நடந்துகிட்டே பேசுவோம் .சரி…. நீங்க ஏன் இந்த வயசுல இப்பிடி கஷ்டப்படறிங்க… வீட்ல உக்காந்து நல்லா சாப்பிடலாம்ல….”

“எனக்கும் ஆசை தான் … ஒத்த புள்ள … கண்ணே மணியேன்னு வளத்தேன்… …அப்பன் மகன் ஒறவு என்ன தண்ணில எழுதுன மாறியா… ஒடனே சலசலத்து போறத்துக்கு…..அது காத்து மாரி… சில சமயம் உன்னத் தடவி கொடுக்கும் பல சமயம் பொரட்டி எடுக்கும் …. அதே சமயம் காத்து இல்லைனாலும் நாம மூச்சு நின்னு போவும் ….. என்னாத்த சொல்ல … கஷ்டப்பட்டு நெலத்த வித்து அவன படிக்க வச்சா……தீடீர்னு ஒரு நாள் பொண்ண கண்ணாலம் கட்டிகினு வந்தான் .. “

“இனிமே எனக்கு உங்க கூட வாழப் பிடிக்கல…. என் பொண்டாட்டிக்கும் இந்த எடம் புடிக்கல … நாங்க கெளம்புறோம்னு சொல்லிட்டு எங்கள அனாதயா விட்டுட்டு போய்டான்யா ……” என்று முடிக்கும் போதே அவர் கண்களில் கண்ணீர் லேசாக எட்டி பார்க்கத் தொடங்கியது. கார்த்திக்கிற்கு அவன் குடும்பம் பற்றிய நினைவுகள் அவனை தீண்டத் தொடங்கியது. அவரை சமாதானம் செய்து இருவரும் ஒரு வழியாக குருவம்பட்டியை அடைந்தனர்.

“தம்பி நீங்க கேட்ட ஊரு வந்துருச்சு ….”

“ம்ம்ம் ரொம்ப நன்றிங்க அய்யா” இப்போது காற்று மெதுவாக சில்லென வீசத் தொடங்கியது. மீண்டும் பெரியவர் லேசாக அழத் தொடங்கினார்.

“அய்யா… என்னாச்சு?”

“இல்ல தம்பி ….என் பையனுக்கு குளிர் காத்துனா ஒத்துக்காது… இப்போ எங்க கஷ்டப்படுதோ என்னவோ …” என்றார் விசும்பலுடன்.

இதற்கும் மேலும் கார்த்திக்கு மனம் பொறுக்க முடியாமல் மனதிற்குள் அழுதே கொண்டே “கவலைப் படாதிங்க அய்யா … எல்லாம் உங்க பையன் நல்லவே இருப்பார்…. நானும் உங்களோடவே அருகம்பட்டிக்கு வரேன்”

“தம்பி …உங்களுக்கு எதோ ஒரு முக்கியமான வேலை இருக்குனு சொன்னிங்க …”

“பெத்தவங்கள சந்தோஷ படுத்துறத விட வேற என்ன பெரிய வேலை இருக்க முடியும்” என மனதில் சொல்லி கொண்டு அந்த பெரியவரோடு தனது சொந்த ஊரை நோக்கி நகர்ந்தான் கார்த்திக். ஆனால் அவன் தேடல் மட்டும் அங்கயே முடிவுற்றது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““தேடல்“

  1. கதை அங்குமிங்கும் அலைபாய்கிறது. வடிவத்தில் எப்படி பிய்த்துப்பிய்த்து எழுதினாலும் உணர்வில் கதையுடன் ஒன்றவைக்கவேண்டும். அது மிஸ்ஸிங். பீச் பெண் பற்றி சொல்லிவிட்டு பெற்றோர் பற்றி சொல்லி அஞ்சலி பற்றி சொல்லி சுற்றிவளைக்கிறீர்கள். அவன் மனம் மாறுவதற்கான காரணம் ஸ்ட்ராங் ஆக இல்லை. சாரி ட்ரை நெக்ஸ்ட். பட், நீங்கள் பொறுமையாக முயன்றால் நல்ல சிறுகதை எழுதலாம். அந்த ஆற்றல் இருக்கிறது உங்களிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *