கிரேசி மோகன்

shivrratri

குமார சம்பவம்
——————————

காப்பு
———————-
சிவபார்வதி
—————-
சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

முருகன்
———-
உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

பிள்ளையார்
—————
உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

சரஸ்வதி
———–
செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு
அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

காளிதாசன்
—————
வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

சு.ரவி
——–
நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010
——————————————————————–
சர்கம்-1
———-
கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
பாரீர் இமயமதன் பேர்….(1)….30-9-2010

கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
வரம்தரும் வெற்பை வணங்கு….(2)….1-10-2010

சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
பொல்லாப் பனியா பொருட்டு….(3)….1-10-2010

விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
பட்டப் பகலிலந்திப் போது….(4)….1-10-2010

கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)….1-10-2010

மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
வேடன் அரிமா வழியை அறிவானாம்
மூடும் பனியில் முனைந்து….(6)….1-10-2010

தேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை
ஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர
ஏட்டில் எழுத எதுகை இமயம்தான்
காட்டிடும் காதல் கொடி….(7)….1-10-2010

விண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்
கண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்
கானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்
ஞானம் மிகுந்தமலை நாடு….(8)….2-10-2010

ஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து
தேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக
தோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை
மேலிருந்தும் வீசும் மலை….(9)….2-10-2010

கூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்
வீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக
மூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி
மாளிகைபோ லாக்கும் மலை….(10)….2-10-2010

பாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்
ஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்
கின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது
அன்ன நடைபயில்வர் அங்கு….(11)….2-10-2010

அல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்
சொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை
சூரியன்கை சிக்காது சேர்த்து குகைக்கரத்தால்
வாரி அணைக்கும் வெற்பு….(12)….2-10-2010

கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
வானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்
ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
ஆக இருத்தல் அழகு….(13)….2-10-2010

கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
ஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க
மேகம் குகைவாசல் போகும் திரையாக
மோகத் துணைபோகும் மஞ்சு….(14)….2-10-2010

தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
மேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்
காற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்
ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)….3-10-2010

ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
வாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்
கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)….3-10-2010

வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
கேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த
நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
வான்முகம் வைத்தான் விழைந்து….(17)….3-10-2010

பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி
மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
வானையவன் வம்சம் வளர்த்து….(18)….3-10-2010

நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
மேனாள் வயிற்று மகன்….(19)….3-10-2010

தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
அன்பு இமவான் அகம்….(20)….3-10-2010

உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)….3-10-2010

தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
பார்வதி தோன்றிய போது….(22)….3-10-2010

அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)….3-10-2010

சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)….4-10-2010

உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
உமையே தவமேன் உரைத்து….(25)….4-10-2010

உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
யார்வதை உற்றுமிமை யான்….(26)….4-10-2010

விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
வற்றா வளமையுடன் வாக்கு….(27)….4-10-2010

ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
நாடகம் ஆடினாள் நன்கு….(or)
வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….4-10-2010

போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….5-10-2010

மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
போதுமது அல்லவே புன்மது -காதலான்
வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….5-10-2010

தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
அவ்வனப்பே ஆரா அழகு…(31)….5-10-2010.

பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)….5-10-2010

அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)….5-10-2010

ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
செய்ய அழகின்றி சோர்வு….(34)….5-10-2010

வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)….5-10-2010

விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….5-10-2010

இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
துல்லிய ரத்தினத் தேசு….(37)….5-10-2010

மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
சாரம் அமைத்திளமை சேர்வு….(38)….5-10-2010

நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)….5-10-2010

செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40)….6-10-2010

நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)….6-10-2010

சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….6-10-201

சிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்
பவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த
அதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க
சிதறும் ஒளிப்புன் சிரிப்பு….(43)….6-10-2010

குயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்
பயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு
வானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்
ஞானத் துடன்நல்கும் நாவு….(44)….6-10-2010

மாருதம் வீச மருள்நீல முண்டகமாய்
வேரதைப்போல் நீண்ட விழிகளின் -பாருதலை
மானுரைக்கக் கற்றாளா? மான்கற்றுத் தந்ததா
நானறியேன் நாராய ணா….(45)….6-10-2010

கையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்
பையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்
காமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்
ஆமாம் அவள்புருவம் அம்….(46)….6-10-2010

விலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்
கலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்
கேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்
ரோஷத்தால் நீங்கும் ரசிப்பு….(47)….6-10-2010

உவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண
அவயவங்கள் தேடி அலைந்து -சிவமய
சக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்
முக்திக்(கு) அவளழகே மெய்….(48)….6-10-2010

சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
பார்விதி என்றார் பலத்து….(49)….7-10-2010

தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….7-10-2010

வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….7-10-2010

அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….7-10-2010

கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….7-10-2010

சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….7-10-2010

ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….7-10-2010

தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….7-10-2010

தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
மூணாம் விழிகொள் முதலையிம -வானே
பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….7-10-2010

சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
பார்வதி வந்து பணிவிடை செய்திட
ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….7-10-2010

கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….7-10-2010

சர்கம் ஒன்று சுபம்
——————————————————————-

சர்கம் -2
————-

அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010

சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010

நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
(OR)
வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010

தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010

தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010
கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010

பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010

ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010

காரணனே பாருக்கு, காரணம் பாராத
பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010

தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010

திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
ஏராள மானஏ கா….(OR)
ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010

ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010

காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010

விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010

யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010

வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010

வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
நான்கு முகத்தினால் நான்கு முகமாக
வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010

வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010

காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010

விருத்திரன் மாய வரைகள் சாய
நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010

மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா
வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010

சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
அபார கதாயுதம் அற்ற -குபேரா
கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010

துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010

வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010

துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010

ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010

பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010

தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010

அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010

இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்

நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010

ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010

விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010

பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019

பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
சேரும் கலைக்கில்லை ஊறு….(93)….13-10-2010

மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)….13-10-2010

ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….13-10-2010

முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)….13-10-2010

வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
பாபமென் செய்தோம் புகல்….(97)….13-10-2010

கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
தந்தருளி ஆனான் தொழும்பு….(98)….13-10-2010

காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
அடியாத மாடு படியாதாம் என்று
முடிவாகச் சொன்னான் முனி….(99)….14-10-2010

இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
நாசத்தால் நாணுது நைந்து….(100)….14-10-2010
மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
சாமரம் வீசி சளைப்பு….(101)….14-10-2010

இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)….14-10-2010

அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)….14-10-2010

அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
காதலுக்கு வந்ததாம் கேடு….(104)….14-10-2010

தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)….14-10-2010

மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)….14-10-2010

கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….15-10-2010

வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
பாதகன் கொண்டான் புனைந்து….(108)….15-10-2010

அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)….15-10-2010

கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
பலமுடைய தாரகன் பாதகம் தீர
தளபதியை தேவர்க்குத் தா….(110)….15-10-2010

பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
வானை வலுப்படுத்து வீர்….(111)….15-10-2010

முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)….15-10-2010

நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
நானல்ல என்றான் நகைத்து….(113)….15-10-2010

நட்ட மரமது நச்சுமர மாயினும்
வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
தீரவழி செய்தல் தவறு….(114)….15-10-2010

மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)….17-10-2010(விட்டுப் போன வெண்பா)

போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
பரமசிவன் மூலம் பிறப்பு….(116)….16-10-2010

அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)….16-10-2010

காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)….16-10-2010

நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….16-10-2010

நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120)….17-10-2010

பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
அபாயம் அகன்றது அன்று….(121)….17-10-2010

சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
வந்திடச் சொன்னான் விரைந்து….(122)….17-10-2010

ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
விண்முதலோன் முன்பு வரவு….(123)….17-10-2010

சர்கம் இரண்டு சுபம்
—————————-
—————————————————————————

சர்கம்- மூன்று
——————

ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப்
பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு
நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை
வானூறும் நட்பை விடுத்து….(124)….18-10-2010

”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து
சமமரி யாதையை செய்ய -அமரர்கோன்,
புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம்
சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….18-10-2010

மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
ஆணை எனக்கு அருள்….(126)….18-10-2010

வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)….18-10-2010

பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
பார்க்க மறப்பான் பரம்….(or)
தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)….18-10-2010

சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)….19-10-2010

புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)….19-10-2010

காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)….19-10-2010

வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)….19-10-2010

பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….19-10-2010

மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த
அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென
ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி
பேசினான் மாறனைப் பார்த்து….(134)….19-10-2010

உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே
அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை
ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும்
தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135)….19-10-2010

பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே
நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய
வில்லாளி நண்பா விறலில் எனையொத்த
வல்லான் உனக்கோர் வழக்கு….(OR)
வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136)….19-10-2010

காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச்
சோலையை சாய்ப்பதாய் சொன்னதற்கு -வேளைபார்
வந்தது மன்மதா நொந்திருக்கும் எங்களின்
அந்தரங்க ஆசி அதற்கு….(137)….20-10-2010

ஆவலாய் தேவர்கள் அவ்வீசன் சேய்சேனைக்
காவலாய் வாய்த்திடக் காத்துள்ளார் -ஏவுவாய்
ஓரம்பால் வேதங்கள் ஆரம்பம் ஆகிடும்
வேரின்பால் ஆசை விதைத்து….(138)….20-10-2010

காரியன் நான்முகன் காரணன் ஈசனின்
வீரியம் தாங்கும் வலுவுடையாள் -கூறினன்
பார்வதி என்றே புலனடக்கம் பெற்றவளால்
பார்அவதி உந்தன் பணிக்கு….(139)….20-10-2010

வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால்
சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய்
உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு
எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140)….20-10-2010

முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு
அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா
பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால்
நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141)….21-10-2010

சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத
அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம்
அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின்
உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142)….21-10-2010

கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம்
கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் -நல்விதமாய்
யாசிக்கும் எங்களுக்காய் யோசிக் காதுசெய்வாய்
பூசிக்கும் பார்மூன்றும் பார்….(143)….21-10-2010

நாடாது போயினும் நண்பன் வசந்தனுன்
னோடேதான் நிற்பனென நம்புகிறேன் -ஆடாத
மொட்டனைய அக்கினியை மூண்டு வளர்த்திட
கட்டளைக்காய் காக்குமோ காற்று….(144)….22-10-2010

அனங்கன் அதைக்கேட்(டு) இணங்கி சுரர்கள்
இனங்கோனின் ஆணையை ஏற்று -வணங்க
அயிரா வதமடக்கும் ஆஜானு கையை
தயவோடு வைத்தான் தலை….(145)….23-10-2010

பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)….23-10-2010

சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
வசந்த ருதுவாய் வனத்து….(147)….23-10-2010

மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
விண்முகம் பானு வடக்கேக தென்திசை
தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)….23-10-2010

தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)….24-10-2010

கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)….24-10-2010

கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….24-10-2010

வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த
கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த
கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக
காண்பது காளிதாசன் கண்….(152)….24-10-2010

மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும்
அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம்
மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால்
காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153)….24-10-2010

பருவருது கண்டு முரளமர பூக்கள்
விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும்
இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும்
கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154)….25-10-2010

தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல்
மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர்
பூரிப்பும் கர்வமும் பெற்றவளை மாற்றிட
கோரிக்கை காமன் குரல்….(155)….25-10-2010

குளிர்பனி சென்றதால் கிம்புருடப் பெண்கள்
தளிரிதழ் தூயவெண் தேகம் -ஒளிர
நுதற்பொட்டில் கன்னக் கதுப்பு வரியில்
வெதுவெதுப்பாய் வெய்யிலின் வேர்வு….(156)….26-10-2010

அகால வசந்தத்தால் அவ்வனம் உற்ற
தகாத வனப்பால் திகைத்து -எகாலமும்
உண்மையில் வாழ்வோர் உறுதி குலைந்திடும்
தன்மையை மாற்றத் தவிப்பு….(157)….26-10-2010

நாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்
தானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி
நாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்
கூடினர் இன்பம் கொழித்து….(158)….26-10-2010

ஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து
தேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று
தீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை
சீண்டியதாம் கொம்பால் சொரிந்து….(159)….26-10-2010

துதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை
மதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்
சாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை
பாதியாக்கி பத்தினிக்கு பங்கு….(160)….26-10-2010

காட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட
வீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய
பூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே
கூர்ச்செறிந்து முத்தமிட்டான் காத்து….(161)….26-10-2010

கொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்
முத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்
கரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு
அறமாய் அணைப்பு அளிப்பு….(162)….26-10-2010

அங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்
சங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது
தாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்
ஏவும் கணைகள்தான் ஏது….(163)….26-10-2010

கொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்
விடையன் விரலைவாய் வைத்து -அடையாள
முத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்
நித்திரையை நீக்கும் நினைப்பு….(164)….26-10-2010

அசையா மரங்கள் அசலனமாய் வண்டு
பசையிட்ட வாயாய் பறவை -விசையுறா
ஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்
ஓர்வரைவாய் நின்றது ஓய்ந்து….(165)….26-10-2010

சுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்
விக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்
புன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்
கண்ணை அனங்கன் கடந்து….(OR)
கண்ணுக்(கு) அனங்கன் குனிந்து….(166)….26-10-2010

காலனைக் காணாது காமன் வரிப்புலித்
தோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்
வென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை
சென்று நெருங்கினன் சாவு….(167)….27-10-2010

வேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து
நேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா
சனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்
பிணைக்கமடி அல்லிப் பிறப்பு….(168)….27-10-2010

நாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட
தாகத்தால் காரொத்த தொண்டையால் (OR)
தாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்
தோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ
மாலையை காதில் முடிந்து….(169)….27-10-2010

நெறியா புருவம் நகரா இமைகள்
புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக
தேசொளி மூவிழியால் நாசி நுனியினை
ஈசனார் நோக்கு இருப்பு….(170)….27-10-2010

மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை
இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென
காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள்
காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171)….27-10-2010

முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும்
கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின்
உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான்
சச்சிதா னந்த சிவன்….(172)….27-10-2010

ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால்
தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் -கண்புதைத்து
ஆன்றோர் உணர்ந்த அழிவற்ற ஆன்மனில்
தாந்தோன்றி தன்னுள் திளைப்பு….(173)….27-10-2010

எண்ணத்தால் கூட எதிர்க்க இயலாமுக்
கண்ணத்தன் கோலத்தால் காமனஞ்சி -என்னத்தை
செய்வதென்று சோர்வுற, சொல்லாமல் வில்லம்பு
மெய்வசத்தை நீங்கி மணல்….(174)….27-10-2010

உற்சாகம் குன்றி உருக்குலைந்த காமனுக்கு
நற்சேதி கூறலாய் நேர்ந்தது -தற்செயலாய்
பொற்சிலை பார்வதி பாங்கியிரு பெண்தொடர
சிற்சபையில் வைத்தாள் சிலம்பு….(175)….28-10-2010

ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
போதணிந்தாள் பார்வதிஅப் போது….(OR)
போதணிதல் பார்வதியின் போது….(176)….28-10-2010

மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
கொங்கையாள் ஆனாள் கொடி….(177)….28-10-2010

மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ
நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178)….28-10-2010

வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும்
வாசம் முகர்ந்திட வண்டுவந்து -மூச
இதழ்கனியைச் சுற்றி, இளங்கமல மொட்டால்
அதைவிரட்டும் பார்வதி அங்கு….(179)….28-10-2010

மாசிலா அங்கங்கள் மன்மதன் பத்தினியே
கூசுவாள் வெட்கி குனிந்துதலை -ஈசன்
தவதனுசை வெல்ல இவள்மனசே வாளி
சவமணலில் காமன் செருப்பு….(180)….28-10-2010

பதியாகப் போகின்ற பாதியின் வாசல்
சதியாய்ப் பிரிந்தவள் சேர்ந்து -மிதித்தாள் (OR) விதியால்
உவப்புடன் தன்னுள் சிவபிரான் ஆன்ம
தவப்பலன் கண்ட தினம்….(182)….29-10-2010

வாசி அடக்கிய ஈசனார் பாரத்தால்
காசினியை ஆயிரம் கைத்தலையால் -தூசென
தாங்கிடும் சேடன் தவித்திட அன்புசிவம்
ஓங்கு தவம்கலைத்தார் ஓம்….(183)….29-10-2010

பணிவிடை செய்துவந்த பார்வதியைப் பற்றி
பனிவிடை ஈசரிடம் போற்ற -கனிவாய்
புருவத்தைத் தூக்க புரிந்துகொண்ட நந்தி
வரவேற்றான் கன்றாய் வளைந்து….(OR)
வரவேற்றான் வாசல் விரித்து….(184)….29-10-2010

ஆர்வமுடன் அங்குற்ற பார்வதியின் தோழிகள்
தேர்வுசெய்த பூக்கள் தொகுதியை -நீர்விளங்கும்
வார்சடையோன் பாதத்தில் வைத்து வணங்கியபின்
கார்சிதைவாய் தூவிக் களிப்பு….(185)….29-10-2010

கூந்தலில் சூடிய கோங்குமலர் காதணி
மாந்தளிர் மண்ணில் மயங்கிவிழ -பாந்தமாய்
உச்சந் தலைதரையில் உற்றிட பார்வதி
அச்சிவன் பாதம் அடைவு (OR) அணைப்பு….(186)….29-10-2010

உன்னையன்றி வேறோர் பெண்ணை மனைவியாய்
எண்ணாத கேள்வனை ஏற்றிடுவாய் -திண்ணமாய்
மெய்யதைச் சொன்னான் மகாதேவன், மூத்தோர்கள்
பொய்யுரைப் பாரோ புகல்….(187)….30-10-2010

மூளும்தீ வாயில் முழுகப்போம் விட்டிலாய்
வேளவன் பார்வதி வந்ததால் -தோளின்வில்
நாணை வருடி நமச்சிவாயர் நெஞ்சென்ற
தூணை இலக்காய்த் துணிபு….(188)….30-10-2010

ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால்
வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர்
சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென்
நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189)….30-10-2010

நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும்
அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம்
சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு)
அம்மால் அனங்கன் அளிப்பு….(190)….30-10-2010

சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று
வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம்
கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை
நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191)….30-10-2010

கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள்
ஆசையுடன் கூர்ச்செரிந்து ஆர்ப்பரிக்க -நேசமுடன்
ஓர விழியால், ஒருபக்கம் சாய்ந்தவண்ணம்
பூரணனைப் பார்வதி பார்ப்பு….(192)….30-10-2010

புலனடக்கம் செய்வதில் பேர்போன ஈசன்
நிலநடுக்க மாய்தன் நிலைக்குள் -தலையெடுத்த
போக்கைத் தகர்த்தெறிந்து தாக்கம் தனையறிய
நோக்கினார் நாற்திசையும் நன்கு….(193)….31-10-2010

வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
காமன் வளைத்துவில்லை கண்வரை -ஆமளவு
நான்றிட தோளிரண்டும் நாணிழுத்துக் கால்வலதை
ஊன்றிடப் பார்த்தனன் உற்று….(or)

வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
காமன் வளைத்துவில்லை, கண்வரை -ஆமளவு
நாணிழுத்துக் கால்வலதை ஊனிட தாருக
கானழித்தோன் கண்ணில் கனல்….(194)….31-10-2010

அகத்துற்ற உக்கிரம் அச்சமுறும் வண்ணம்
முகத்தில் புருவ முறிப்பாய் -விதிர்த்திட
நெற்றி விழிதன்னில் நீண்ட ஒளிபிறப்(பு)
உற்று வளர்ந்ததாம் ஊழ் (OR) ஓம்….(195)….31-10-2010

அய்யனே கோபம் அடக்குங்கள் என்றமரர்
குய்யோ முறையோ குரலொலி -உய்யும்முன்
சீறும் சிவன்கண் சுடரொளி சூழ்ந்திட
மாறன் பிடிசாம்பல் மண்….(196)….31-10-2010

என்ன நடந்ததோ என்றறியா விட்டாலும்
இன்னலென்றே நெஞ்சு இறைந்திட -தன்னவன்
சாவை அறியா சதிரதி மூர்ச்சையால்
பூவெனச் சாய்ந்தாள் புறத்து (OR) புவி….(197)….31-10-2010

இடிவிழ இற்று ஒடியும் மரமாய்
இடபர் தவத்திற்க்(கு) இடராய் -விடிந்த
அனங்கனை சாய்த்து அணங்கினை நீங்கி
கணங்களுடன் சென்றார் கலைந்து….(198)….31-10-2010

தந்தை விருப்பமும் தான்சிவன் மேல்கொண்ட
விந்தையாம் காதலும் வீணாக -நொந்தவள்
துக்கிரித் தோழியர்முன் தோற்றதால் பார்வதி
வெக்கமுடன் ஏகினாள் வீடு….(199)….31-10-2010

சர்கம் மூன்று சுபம்
——————————————————————————————–

சர்கம் நான்கு
——————–

ஆங்கு மயக்கத்தில் ஆழ்ந்த அமைதிக்குத்
தாங்கொணாத் துன்பம் தெளித்திட -தீங்காம்
விதியெழுப்பிப் ‘பெண்ணே விதவைநீ’ என்று
ரதியறியச் செய்வு ரசித்து….(200)….1-11-2010

மயக்கம் தெளிந்து மருண்ட விழியால்
தயக்கமாய்க் காமனைத் தேடி -இயற்கையை
எய்து வசந்தமாய் செய்தோன் இறந்தியற்கை
எய்தியது காணாள் எழுந்து….(201)….1-11-2010

சாதலால் போனாயா ? சாதா ரணமாயா ?
காதலா ஆனதேன் காணாமல் -நாதனைத்
தேம்பி அழுதபடித் தேடியவள் கண்டனள்
சாம்பலுரு விலோர் ஜடம்….(202)….2-11-2010

அழுது தரையில் விழுந்து புரண்டு
புழுதி உடலில் படிய -விழுதாய்
குவித்தயிருள் கூந்தல் கலைந்திடக் கானும்
தவித்ததாம் தானும் துணைக்கு….(203)….2-11-2010

அழகுக்(கு) உவமையாம் அன்பரும் மேனி
கழுகுக்கும் ஊணாகா கோலப் -புழுதியைக்
கண்டும்நான் துண்டாகா பிண்டமாய்ப் போனேனே
பெண்டிர்மனம் பாறை போல்….(204)….2-11-2010

அணையுற்ற வெள்ளம் அதுவுடைய தன்னில்
பிணையுற்ற பூவைப் பிரியும் -எனைவிட்டு
எங்குநீர் போனீர் எதனால் உடைந்தின்று
முங்கியது காதல் மதகு….(205)….2-11-2010

என்மனம் கோணா எதையும்நீ செய்ததில்லை
நின்மனப் போக்கில் நடந்தவள்நான் -மன்மதா
வ்யாஜ்ஜியம் அற்றுரதி வாடிப் புலம்பநீ
பூஜ்ஜியம் ஆனதெங்கு போய்….(206)….2-11-2010

முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற
கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை
மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது
ஆகலையால் அற்றதோ அன்பு….(207)….2-11-2010

ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று
பதிநீ புகன்றது பொய்யே -அதுவே
நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ
எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208)….2-11-2010

மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன்
அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு
ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால்
காதலுன் கைரேகைக் கோடு….(209)….2-11-2010

போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை
மோதிடும் மேக முழக்கத்தால் -காதலன்
காத்துக் கிடக்குமிடம் கூட்டிக் கலங்காது
சேர்த்துவிட யாரினி சொல்….(210)….2-11-2010

கெண்டை விழிசிவந்து வண்டாய் சுழன்றிட
விண்டுரைக்கும் பேச்சில் விரகமுற -பெண்டிர்க்கு
கள்ளால் வரும்மதம் காமன்நீ இன்றி
கொள்ளாது போகும் களிப்பு….(OR)
பொல்லா குடிகாரன் பேச்சு….(211)….2-11-2010

அங்கம் எரித்ததனால் ஆனாய் சரித்திரமாய்
தங்கும் மதிவிண் தரித்திரனாய்த் -தொங்குகிறான்
துக்கம் அனுஷ்டித்த தேய்பிறைதன் தன்மையை
தக்கவைத்துக் கொண்டான் தவித்து….(OR)
வெக்கமுடன் விட்டான் வளர்ந்து….(212)….2-11-2010

இச்சையுடன் உண்ண இனிதாக ஆண்குயிலை
உச்ச சுரத்தில் உருகவைக்கும் -பச்சை
சிவப்புநிற மாம்பூவை சாகஸ அம்பாய்
உவப்பரினி யாரிங்(கு) உரை….(213)….2-11-2010

அனங்கனுன்வில் நாணில் அமர்ந்திடும் வண்டு
இனங்களின் ரீங்காரம் இன்று -சிணுங்கலாய்
மாறித், துயரத்தில் ஊறிய என்னையும்
மீறிப் புலம்புதென் முன்….(214)….3-11-2010

பயிலா மலேயே ஒயிலாகக் கூவும்
குயிலாளைக் காதல் கலவி -செயலாளாய்
பட்டமளிப் பாய்நீ பழையசுகு மாறனாய்
தொட்டணைத்துத் தீர்ப்பாய் துயர்….(215)….3-11-2010

போலியாக வெகுண்டயென் காலைநீ கவ்வியது
ஆலிங்க னித்ததுபின் ஆவிநடுங்க -காளிங்க
நர்த்தனமாய் கண்ணாநீ நாகமென்மேல் ஆடியது
அர்த்தமற்று போச்சே அனைத்து….(216)….3-11-2010ம்

வசந்தருது தந்த உசந்தமலர் கொண்டு
அசந்திடச் செய்த அழகு -கசந்ததே
பெண்ணாளும் வித்தையில் பேராண்மை கொண்டவனே
கண்ணாளா நீயின்றி காண்….(217)….3-11-2010

பஞ்சான கைகளால் பாதத்தில் நீயெனக்கு
விண்சார்ந்த தேவர்க்காய் விட்டகன்று -செஞ்சாந்து
இட்டபோது சென்றாயே ஈவிரக்கம் அற்றோர்க்காய்
தொட்டகுறை தீரவந்து தீட்டு….(218)….6-11-2010

ஊர்வசிகள் உன்னழகால் உன்மத்தம் கொண்டுன்னை
பார்வசியம் செய்வர் பதுங்கியிரு -பார்மிசையில்
அக்கினிக்(கு) ஆட்பட்(டு) அனங்கனுன் தோள்சாய
புக்கிடுவேன் சொர்க புரிக்கு….(219)….6-11-2010

பாரிந்த பாவிரதி பஞ்சணையான் போனபின்பும்
பாரிருந்தாள் என்ற பரிகாசம் -வேரூன்ற
கூசுதே அங்கங்கள், கூடநான் வந்திடுவேன்
தீசிதை தானிதற்கு தீர்வு….(220)….9-11-2010

அங்கம் இருக்குமே ஆவி பிரிந்தாலும்
இங்கிரெண்டும் இல்லையே, இவ்வுலகில் -எங்கனம்
செய்வேன் இறுதியணி செத்த உடலுக்கு
உய்வேன் உடன்கட்டை உற்று….(221)….9-11-2010

நாணிழந்த வில்மடியில் நாணிக் கிடந்திருக்க
கூனடைந்த அம்பின் குறைநிமிர்த்தி -நீநினது
நண்பன் வசந்தனுடன் வம்படிக்கும் போதென்னை
என்புறுகப் பார்ப்பாய் எழு….(222)….9-11-2010

மனதுக்(கு) இனியோன், மலர்வில்லை செய்து
நினது கரமளிக்கும் நண்பன் -சினந்த
விழியால் எரிந்து, வசந்தனும் சாம்பல்
அழிவை அடைந்தானோ அன்று….(OR) ஆள்….(223)….9-11-2010

கொஞ்சு மொழிரதியாள் கேவல் புலம்பலது
நஞ்சு கணையை நிகர்த்தெழுந்து -நெஞ்சை
துளைக்க வசந்தன் துயருற்றோள் முன்னே
முளைத்தனன் ஆறுதல் மொண்டு….(224)….9-11-2010

மதகுடைந்த வெள்ளமாய் மங்கையவள் நெஞ்சக்
கதவுடைந்து கொட்டியது கண்ணீர் -இதுவசந்தன்
பக்கம் இருக்கையில் உக்கிரம் ஆனது
துக்கதிற்(கு) ஏதடைக்கும் தாழ்….(225)….10-11-2010

சுராரிழுத்துச் சென்ற சகாபார் வசந்தா
புறாகழுத்துச் சாம்பல் பொடியாய் -தராதலத்தில்
சிந்திக் கிடப்பதை சீறும் வளியெடுத்து
எண்திசையில் அஸ்தி இறைப்பு….(226)….10-11-2010

ஆவலுடன் உன்னருமை சேவகன் காத்துள்ளான்
தாவசந்தன் காண தரிசனம் -பூவுலகில்
அன்புக்(கு) அணங்கினும் ஆதரவு ஆருயிர்
நண்பன்தான் நன்கறிவாய் நீ….(227)….10-11-2010

தாமரைநூல் நாணிழுத்து பூமருவும் அம்பேற்றி
நீமரமாய் வில்லேந்தி நிற்கையில் -சாமரமாய்
வீசும் வசந்தனன்றோ வெற்றிக்(கு) உறுதுணை
நேசன் அவன்பொருட்டு நில்….(OR)
நீசாம்பல் விட்டு நிமிர்….(228)….10-11-2010

வாயு அணைத்த விளக்கிருந்த தீபத்தின்
தேயுவாய் தோழன் தொலைந்தனனே -காயும்
திரியாய்த் திகழ்ந்து தகிக்கின்ற என்னை
பரிவாய் வசந்தனே பார்….(229)….10-11-2010

ஆதிவிதி அன்று அனங்கனைக் கொன்றது
பாதிதான் சோதரா மீதிநான் -மோதிடும்
ஆனை முறித்து அடிமரமே சாயஅது
பூணும் கொடிபடரும் புல்….(OR)
பூணும் கொடிக்கேது போக்கு….(230)….10-11-2010

உடனே எனக்கு உறவினர்கள் செய்யும்
கடனாமிக் காரியம்கை கூட -சுடலை
நெருப்பை அளித்து பொறுப்பாய் கணவன்
இருப்பில் இவளை இடு….(231)….10-11-2010

விண்ணில் நிலவு விரையுமே சந்திரன்பின்
மின்னல் மறையுமே மேகத்துடன் -எண்ணும்
அறிவற்ற பெண்பால்தன் ஆண்பாலை நாட
நெறியற்று நின்றேனே நான்….(232)….11-11-2010

சதாசிவன் கண்ணால் உதாசீனம் ஆன
கதாபுருஷன் சாம்பல் குளித்து -இதோநான்
உதாரமாய்த் தீயில் நிதானமாய் சாய்வேன்
அதானென் தளிர்பாய் அணைப்பு….(233)….11-11-2010

நெஞ்சனும் நானும் நோகா(து) உறங்கிட
பஞ்செனப் பூக்களால் பாய்விரித்து -மஞ்சத்தை
வண்ணமாய் செய்த வசந்தனே இன்றெனக்கு
திண்ணமாய்த் தீப்படுக்கை தா….(234)….11-11-2010

நானின்றி ஓர்கணமும் வீணென்பார் வில்லாளி
நீநன்(கு) அறிந்ததே நாணமேன்(நல்லதுகேள்)-நானின்று
தீநின்ற போதுடனே தென்றலால் தூர்த்ததனை
வான்நின்ற வாறு வளர்….(235)….11-11-2010

வெற்பனைய நட்பே வசந்தா இருவர்க்கும்
தர்பணமாய் தண்ணீர் தருவதற்கு -முற்படுவாய்
மாறனதை ஏந்தி மறுவுலகில் நான்வந்து
சேரவுண்பான் பங்கிடாது சேர்ந்து….(236)….11-11-2010

காமரு மாம்பூவின் கொத்தினைக் கட்டாயம்
காமனின் ஆன்மா களிப்புற -ஈமச்
சடங்கில் மறவாது சேர்ப்பாய் வசந்தா
மடந்தை ரதியாள் மனு….(237)….11-11-2010

காய்ந்த குளத்துமீன் கண்ணீர் துடைத்தது
மாய்ந்திடாது காக்கும் முதல்மழையாய் -ஓய்ந்துரதி
காயம் உகுத்திடக் காத்திருந்த போதுஆ
காயம் பொழிந்ததோர் கூற்று….(238)….11-11-2010

விதவையென்(று) எண்ணி சிதையில் புகாதே
மதனன் மலர்ந்தெழுவான் மீண்டும் -இதுவுறுதி
அன்பே சிவத்தால் அவனழிந்த காரணத்தை
உன்பால் உரைப்பேன்கேள் உற்று….(OR)
நின்பால் உரைத்திடுவேன் நான்….(239)….12-10-2010

நின்படுக்கை நாயகன் தன்துடுக்கால் நான்முகன்
கண்துடைப்பாய் அம்பெய்து கோதிழைக்க -தன்படைப்பில்
தாபமுற்ற கோபத்தால், தீக்கண்ணால் சாம்பலாக
சாபமுற்று ஆனான் சகி (0R) சவம்….(240)….12-10-2010

தருமவேள் வேண்ட திசைமுகன் பெய்தான்
வரமழையாய் சாப விமோசனம் (OR) மாற்று வழியை-பருவத
புத்திரி ஈசனுக்கு பத்தினியாய் ஆகையில்
புத்துயிராய் காமன் பிறப்பு….(241)….12-10-2010

கோடையில் அம்மணத்தை கொண்டநதி மாரிவர
ஜாடையில் மாறும் சமுத்திரமாய் -பாடொழிந்து
மாறனுடல் கொண்டுன்னை சேரும் வரைசாம்பல்
நீறிதனைக் காப்பாய் நிதம்….(or)
நீறுன் மசக்கை நினைப்பு….(242)….13-10-2010

தேவதையின் வாக்கால் தணிந்து அனுமரண
தேவைதனை கைவிட்டாள் தேவிரதி -பூவதையோன்
நண்பன் வசந்தனும் நம்பிஅச ரீரியை
தென்பளித்தான் தேறுதல் தந்து….(243)….12-10-2010

சாபம் முடிக்கும் சிவபார் வதிமணமாம்
தீபவொளிக்(கு) ஏங்கினாள் தேவிரதி -சோபை
அறவே இழந்து வரவாம் பகலில்
இரவெதிர் பார்க்குமாம் இந்து….(OR)
இரவை எதிர்பார்க்கும் இந்து….(244)….12-10-2010

சர்கம் நான்கு சுபம்
————————–
——————————————————————————————-

சர்கம் ஐந்து
—————–

தன்முன்னெ காமன் தவிடுபொடி சாம்பலாய்
கண்மூன்று கொண்டோரால் காட்சியுற -தன்பெண்மை
தோற்றதாய் பார்வதிக்கு தோன்றமகா தேவனவன்
தோற்றதால் பார்வதி தூற்றினாள் ஈசனவன்
போற்றாத அழகை பழித்து….(OR)
போற்றாத அழகை பழிப்பு….(245)….12-10-2010
அன்புச்சிவன் பாலில் அழகுப் பழம்நழுவி
பெண்பிறப்பு பேறாய் பயனுற -முன்பெவரும்
காணாத் தவம்புரிந்து காண்போன் கரம்பிடிக்க
மேனாள் குமாரி முடிவு….(246)….13-10-2010

பவச்சுவை நீங்க பெரியோர் புரியும்
தவச்சுமை தாங்காய் தளிரே -அவத்தையேன்
தானாய் வருவான் தகப்பன் சுவாமியவன்
மேனாள் உரைத்தாள் மகட்கு….(247)….13-11-2010

பலனளிக்க வீட்டில் பலதெய்வம் கொண்டும்
தலையெழுத்தாய் ஏற்கும் தவமேன் -மலைமகளே
வாகை மலர்தாங்கும் வண்டதன் மேலமர்ந்தால்
தோகை மயிலமர்ந்தால் தத்து….(248)….13-11-2010

பள்ளத்தில் பாய்ந்திடும் வெள்ளமும், நிச்சயித்த
உள்ளத்(து) உறுதியும் ஓயுமோ -மெள்ளத்தன்
பெண்மனதை மாற்ற பெருமுயற்சி செய்தஅன்னை
தன்மனதில் ஏற்றனள் தோற்பு….(OR)
பின்முடிவில் தோற்றாள் பணிந்து….(249)….14-11-2020

விசுவாச தோழியின் வாயிலாய், அந்த
பசுவீசர் பாகம் பெறக்கான் -மிசைவாசம்
ஆண்டுபல ஆயினும் ஆரா தவம்செய்ய
வேண்டினள் தந்தையின் வாழ்த்து….(250)….14-11-2010

குன்றெனக் கொள்கையில் நின்றிடும் பார்வதியை
வென்றிட வெற்பரசன் வாழ்த்திட -சென்றடைந்தாள்
பின்னால் அவள்பெயரைப் பூண்ட சிகரத்தை
வண்ண மயில்சூழ்ந்த வாறு….(251)….14-11-2010

இட்டிழைத்த சந்தனத்தைப் பட்டழித்து பொன்னாய்கண்
கொட்டுமணி முத்தைக் களைந்தெறிந்தாள் -கட்டுடலில்
கோலயெழில் பாரத்தால் நூலிழைகள் நீங்கிய
சேலை மரவுரி சேர்ப்பு….(252)….14-11-2010

மூசுசில் வண்டு முளரிக்(கு) அழகென்றால்
பாசியின் சேர்க்கையும் பேரழகே -தேசுடையாள்
காரணமாய்க் கூந்தல் களைந்துசடை கொண்டாலும்
பூரணத்திற்க்(கு) ஏது பழுது….(OR)
பூரணமாய் நின்றாள் பொலிந்து….(OR)
பூரணத்தின் பின்னமும் பொற்பு….(253)….14-11-2010

ஒப்புயர்வாய் ஏற்ற ஒழுக்கத் தவத்திற்காய்
முப்புரி முஞ்சப்புல் மேகலையை -சொப்பிடை
வேதனையில் ஆழ்ந்து வலித்துச் சிவந்தாலும்
சோதனையைக் கொண்டாள் சகித்து….(254)….15-11-2010

தந்தனத்து சந்தனத்தை வந்தெடுத்து செல்கின்ற
பந்துவிளை ஆடல், பவழவாய் -மென்னதர
வண்ணமிடல் விட்டுதர்ப்பை விள்ளுகையில் கீறிய
சன்ன கரத்தால் ஜபம்….(255)….15-11-2010

பட்டுப் படுக்கையும் பார்வதியை நோகடிக்கும்
கட்டுக் குழலுதிர்க்கும் மொட்டுறுத்த -கட்டாந்
தரைவிரித்துக் கையைத் தலையணையாய்க் கொண்டு
இறைவணக்கம் பாடுகிறாள் இன்று….(256)….16-11-2010

மடமானின் கண்ணில் மருட்சியைக், காட்டு
கொடிமா லதிக்கு குதிப்பை-(OR)
கொடிமேல் அழகுக் குலுங்கல் -அடமானம்
வைத்தாள் கொடையாய் விரத இறுதிவரை
மெய்த்தாள் சரணடைந்த மாது….(257)….16-11-2010

பின்நாள் பிறந்தவிழிப் பிள்ளையைக் காத்ததுபோல்
முன்நாள் வளர்ந்த மரங்களுக்கும் -தண்ணீரால்
கொங்கை நிகர்த்தக் குடமேந்தி ஊட்டினாள்
அங்கையால் தாயாய் அவள்….(258)….16-11-2010

மானினப் போட்டியாய் மேனைப்பெண் கண்ணுற்றும்
தானினிக் கானினத் தோழியென -பேணிட
நாணிஅம் மான்களவள் நீட்டிய கையிலுற்ற
தானியத்திற்(கு) அச்சமின்றி தாம்….(259)….16-11-2010

மூடு பனியிலும் முக்கால தீர்த்தமாடி
ஆடை மரவுரியில் அக்கினி -மேடை
வடித்தோமம் செய்தாள், வயதேதும் பாரா
படித்தோர்கண் உற்றார் பனிப்பு….(260)….16-11-2010

முந்தை பகைமறந்து மேஷம் புலியோடு
விந்தையாய் ஆட, விருட்சங்கள் -வந்தவர்க்கு
வாரிப் பழம்வழங்க ,வானெழு அக்கினியால்
பூரித்த(து) ஆசிரமப் பொற்பு….(261)….16-11-2010

வேண்டும் பலன்வராத வேதனையால் பார்வதி
மீண்டும் தவம்புரிந்தாள் மும்முரமாய் -தூண்டும்
தளிர்மேனித் தன்மை தனைமறந்து செய்தாள்
களிறாடை பூண்டோன் குறித்து….(262)….17-11-2010

தன்தேகம் வாட்டும் தவத்தோர் விரதத்தை
பந்தாட சோர்வுறும் பார்வதி -முந்தினாள்
மென்மையும் திண்மையும் பெண்மையாய் வந்ததோ
பொன்மயத் தாமரை போல்….(263)….17-11-2010

கோடையில் நாற்புறமும் கூடிய அக்கினி
மேடையின் மத்தியில் மூரலுடன் -ஆடாது
அஞ்சா விழிகளை ஆதித்தன் பால்வைத்து
பஞ்சாக் கினித்தவப் பேறு….(264)….17-11-2010

சூரியன் சுட்டெரித்தும் சூமந் திரக்காளி
நேரிசைவாய் சோபையுடன் நின்றனள் -வாரிசமாய்
மையிட் டதுபோல மங்கை கடைக்கண்ணில்
கையெழுத் திட்டான் கதிர்….(265)….17-11-2010

அமுதமதை ஊட்ட அழகுநிலா, மேகம்
சுமுகமழை ஊணாய் சொரிய -சமதையாய்
காட்டு மரங்கட்கு போட்டியாய் நின்றனள்
ஆட்டுவிக்கும் ஈசர்க்காய் அங்கு….(266)….17-11-2010

தேகான்ம பாவம் தொலைத்தும் தகித்தனள்
ஆகாயம் மற்றும் அவள்வளர்த்த -தீகாய்வால்
மாரி முதல்மழையில் மன்னிக் கிடந்தவெப்பம்
பீறிட்டதாம் கோரி பலன்….(OR)
பீறிட்டுக் கோரும் பலன்….(267)….17-11-2010

அசையாள் இமையை, அதன்பின் உதடை
இசைவாய் தனங்கள் இணைப்பை -விசையாய்
மடிப்பு வயிற்றை மழைநீர் கடந்து
குடித்ததாம் உந்திக் கனல்….(268)….18-11-2010

கொட்டும் மழையில் குளிர்காற்றில் பார்வதி
வெட்டவெளிப் பாறையில் வீழ்ந்துறங்க -பட்டுடல்
கொண்ட தவத்திற்கு கங்குலே சாட்சியாய்
கண்டதாம் மின்னற்கண் கொண்டு….(269)….18-11-2010

சீதளக் காற்றடித்தும் சில்லென்ற வெள்ளத்தில்
போதிரவில் நீராடும் பார்வதி -சாதகப்புள்
கூவி நடுயிரவில் கூப்பிடப் பேடையை
ஈவிரக்கம் கொள்வாள் இணைத்து….(270)….18-11-2010

வாசத்தால் வாரிசம், வாயதரம் பங்கயம்
ஆசில்லா தேகம் அரவிந்தம் -வீசும்
உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தின்
குறைதணிக்கக் கொண்டாள் குளிப்பு….(OR)
உறைபனிக் காற்றால் உலர்ந்த குளத்தை
நிறைவுசெய்ய தாமரையாய் நிற்பு….(271)….18-11-2010

முதிர்ந்த தவத்தோர் மரத்தி இருந்து
உதிர்ந்த சருகுகளை உண்பர் -புதிரிவளோ
உண்ணா மலையாய் உறுதியுடன் நின்றடைந்தாள்
பின்நாள் அபர்ணா பெயர்….(272)….18-11-2010

முளரிக் குருத்தன்ன மென்மையாம் மேனி
தளர வருத்தித் தவத்தால் -ஒளிர
முனியினத்தோர் செய்த மகத்துவம் எல்லாம்
இனியிதற்கு முன்னால் இழிவு….(OR)
இனியிதற்கு ஈடில்லை இவ்வுலகில் என்று
முனியினத்தோர் கொண்டார் முடிவு….(273)….18-11-2010

பலாசதண்டம் ஏந்தி கலைமான்தோல் பூண்டு
விலாசத்தில் வேதாந்தம் வீச -இலாசமமாய்
யாரோ ஒருபிரமச் சாரி சடையோடு
நேராய் குடிலுள் நுழைவு….(274)….18-11-2010

நோற்ற தபோகுணத்தால் வேற்றுமை காட்டாதோள்
தோற்றத்தில் கம்பீரம் தோரணையில் -ஏற்றமுமாய்
வந்தவரை வேண்டி விருந்தோம்பல் செய்தனள்
அந்தரங்கத் தானென்(று) அறிந்து….(275)….19-11-2010

விருந்தோபல் ஏற்று வருஞ்சோம்பல் போக்கி
கருந்தாடி கோதிக் கனைத்து -அருஞ்சொற்கள்
நேரெதிராய்ப் பார்வதியை நோக்கிப் பகர்ந்தனன்
நீறுதிரா நெற்றிக்கண் ணன்….(276)….19-11-2010

புனிதப்புல் தர்ப்பை புரசமரக் குச்சி
நினது குளியலுக்கு நன்நீர் -வனிதையே
இங்குண்டோ கேட்டவர் இத்தவத்தால் மேனியுற்ற
பங்கமென்ன கேட்டார் பரிந்து….(277)….21-11-2010

நங்காய்நீ நின்கையால் நீறூற் றியகொடிகள்
நன்காய் துளிர்கிறதா நித்தியமும் -சிங்கார
சுன்னம் இடாமலே செக்கச் சிவந்தயிதழ்
வண்ணம் தளிரின் வனப்பு….(278)….21-11-2010

தர்ப்பயை நட்பாக நிர்பயமாய் மான்கவ்வ
அற்பமாய் கோபம் அடையாது -நிற்பாயா
நீலக் கமலம் நிகர்த்தநின் கண்களைப்
போலசைவை கொள்ளஅவை பார்ப்பு….(279)….21-11-2010

தேசுடையோர் செய்யார் தவறான காரியம்
வாசகம் மெய்ப்பிக்க வந்தவளே -பேசா
உபதேசம் உந்தன் உறுதியும் போக்கும்
தபசால் உயர்ந்தோர் தமக்கு….(280)….22-11-2010

ஆகுதியாய் அவ்வேழ்வர் அர்பணிக்கும் பூவேந்தும்
பாகி ரதியால் பரிசுத்தம் -ஆகிறது
என்பர் அறியார் இமவான் மகளுந்தன்
பண்பால் பெறுமிப் பொருப்பு….(281)….22-11-2010

தர்மார்த்த காமத்தில் தர்மமே மேலென்று
கர்மமாய் ஏற்ற கவினுறு -நிர்மலமே
பொன்னால் புகழால் பயனில்லை என்பதை
நின்னால் உணர்ந்துகொண்டேன் நான்….(282)….22-11-2010

அன்பாய் உபசரித்தாய் அன்னியனாய் எண்ணாதே
பெண்பாவாய் நண்பனாய்ப் பாரென்னை -பண்பாளர்
நேசமேழு வார்த்தைகளால் நேர்ந்திடும் என்றறிவாய்
பேசிடுவாய் நெஞ்சைப் பகிர்ந்து….(283)….22-11-2010

எந்த நிலையையும் ஏற்கும் பொறையுடைத்தோய்
அந்தணர்க்கே உண்டான ஆர்வமுற்ற -இந்தநான்
கேட்பேன் உனையொன்று கூறுவாய் உன்பதிலை
ஆட்ஷேபம் இன்றேல் அதற்கு….(284)….22-11-2010

குன்றிமய மேட்டுக் குடிப்பிறப்பு, மூவுலகு
சென்றாலும் காணா சிலைவடிவு -குன்றாத
கவ்விடும் யவ்வனம் கொண்டும் தவமேற்று
இவ்வனம் கொண்டதேன் ஈர்ப்பு….(OR)
இவ்வனம் ஏனோ இருப்பு….(285)….24-11-2010

ஆற்றொணா துக்கம் அடைந்தசில மங்கையர்
மாற்றாய்க் கடுந்தவம் மேற்கொள்வர் -ஆற்றதன்
நீரோட்டம் போன்ற நினதுயர் வாழ்க்கையில்
போராட்டம் என்னயிப் போது….(286)….24-11-2010

அக்கறையாய்த் தந்தை அருகிருக்க ஆருன்னை
துக்கமுறச் செய்வர் துணிந்திங்கு -உக்கிரமாய்
சீறும் அரவ சிரசிருக்கும் ரத்தினத்தை
ஆரிங்(கு) எடுப்பர் அசைத்து….(287)….24-11-2010

பூப்பிளமைக் காலத்தில் பொன்னணிகள் பூணாமல்
மூப்படைந்தோர் ஏற்கும் மரவுரியேன் -தோப்பிரவில்
தாரகைகள் பூக்க தவழ்மதி காய்த்திட
ஏறுகிழக் கோனங்(கு) எதற்கு….(288)….24-11-2010

விண்ணோர் விரும்பிடும் வாசத் தலமிருந்து
நண்ணுதல் சொர்கம் நகைப்பன்றோ -எண்ணுதல்
கேள்வனெனில் கேலியே, கல்ரத் தினம்போமோ
ஆளெவன் என்று அலைந்து….(289)….25-11-2010

வெப்பப் பெருமூச்சால் வேதனை நானறிந்தேன்
அப்புறமோர் சந்தேகம் அம்மணிநீ -இப்புவியில்
வேண்டத் தகுந்தவரார் வேண்டி வராதவரார்
ஆண்டவ னுக்கே அகல்….(290)….25-11-2010

காதணி நீலக் கமலம் குலாவிடும்
சீதள கன்னத்தில் செஞ்சடை -மோதவைத்த
நெஞ்சென்ன பாறையோ, நீலகண்டன் போலிவனும்
நஞ்சுண்டா னானோ நமுத்து….(291)….26-11-2010

நிராபரண பாணியாய் நிற்க அருக்கன்
சரோருகம் என்றெண்ணி சூழ -இராவரும்
சந்திரன் காலையில் சோபை இழந்தாற்போல்
நின்திரம் காண்போர் நெகிழ்வு….(292)….26-11-2010

குடையாய் இமைகள் குவிந்த விழித்தேர்
படைக்கடிமை ஆக பயந்த -தடைதானா
அன்றியழ கென்றகர்வம் ஆமெனில் அம்மனிதர்க்(கு)
இன்றியமை யாத இழப்பு….(293)….26-11-2010

பங்காய்த் தவப்பலனில் பாதியுனக்(கு) ஈந்திடுவேன்
நங்காய் அடைந்திடுநின் நாயகனை -சங்காய்
இருந்தவுன் நெஞ்சை எடுத்தூதும் ஆளை
அறிந்திடச் செய்வாய் அடுத்து….(294)….27-11-2010

தன்னிதயம் போலறிந்த அன்னிய அந்தணர்தம்
பின்னிய பேச்சால் பதிலிழந்து -உன்னியதைக்
கூறுமாறு மையிடா கண்களால் பார்வதி
ஆருயிர் தோழிக்(கு) அழைப்பு….(295)….27-11-2010

வெய்யில் தடுப்பாக வெண்தா மரைக்குடையை
கையில் எடுத்த கதையாக -தையலிவள்
கொண்டதவக் காரணத்தைக் கூறுகிறேன் வேதியரே
உண்டெனில் ஆர்வம் உமக்கு….(296)….27-11-2010

தேவேந் திராதிகளை திக்பாலர் நால்வரை
போவென்று நெஞ்சால் புறந்தள்ளி -பூவம்பன்
மாள வழியின்றி மாற்றாய்த் தவமேற்றாள்
காளை அமர்ந்தவர்க் காய்….(297)….28-11-2010

ரீங்காரம் செய்த ரதிமாறன் அம்புசிவன்
ஹூங்காரத் தாலஞ்சி ஒத்தயினப் -பூங்கோதை
தையலிவள் நெஞ்சில் திசைமாறித் தைத்திட
மையலாள் வாடுகிறாள் மாது….(298)….29-11-2010

நெற்றிக் களபமும் நீறாய் உதிர்ந்தது
பற்றிய தாபத்தால் பார்வதிக்கு -சுற்றியுள்ள
மூடு பனியிவள் மூச்சுஷ்ணத் தாலுருகி
ஓடுநதி ஆனதே ஓய்….(299)….30-11-2010

சம்புவின் சாகஸ சங்கீதம் பாடுகையில்
தெம்பிழந்து போவாள் தழுதழுத்து -உம்பரின
கின்னரத் தோழிகளிவ் இன்னலைக் கண்டழுவர்
தன்னறமாம் கானம் தவிர்த்து….(300)….30-11-2010

மூன்றாவது ஜாமத்தில் மூடிய கண்திறந்து
தோன்றாத ஈசனிரு தோளணைத்து -சான்றாக
”போகாதீர்” என்று பிதற்றுமிவள் நோய்தன்னில்
வேகாதீர் பெண்காள் வீழ்ந்து….(301)….30-11-2010

”எங்குமே உள்ளவரென்(று) ஏற்றத்தோர் சொல்வதால்
இங்கென் மனத்தும் இருப்பதாவீர் -அங்குறையும்
காதலைக் காணாமுக் கண்ணுற்றீர்” என்றிடுவாள்
பேதை வரைந்தசிவன் பார்த்து….(302)….30-11-2010

ஈசனைக் கைப்பிடிக்க ஏற்றவழி யோகமென்று
யோசனை செய்தெடுத்து இவ்விமய -ராசனாம்
பெற்றவர் ஆதரவைப் பார்வதி பெற்றபின்பே
உற்றோமிக் கானில் உவந்து….(303)….1-12-2010

வனிதையிவள் நட்ட விருட்சங்கள் கூட
புனித தவத்தினைப் போற்றி -கனிதர
ஏங்குமிவள் முந்தோன்ரி ஏற்காது ஆலமரம்
தூங்குமூஞ்சி ஆச்சேயந் தோ….(OR)
தூங்கு முகமான தே….(304)….2-12-2010

தவத்தால் இளைத்தனள் தோழிமார் வாட
அவத்தை அடைந்தனள் அய்யா -சிவத்தினால்
காய்ந்த விளைநிலத்தில் கொட்டும் மழையாக
பேய்ந்திடுமோ ஈசன் பரிவு….(305)….2-12-2010

தோழியின் சொல்கேட்டு ஊழிநாள் ஊர்த்தவர்
ஆழமாய்ப் பார்வதியின் அன்புணர்ந்தும் –
ஆழமான அன்புணர்ந்தும் அப்பார்வதியை -சோழியன்போல்
சும்மா இருந்தபின் சோதித் தறியயெண்ணி
சும்மா இருந்தபின் சோதிக்கச் சீண்டினார்
இம்மா மவுனம் எதற்கு….(or)
இம்மா மவுனமேன் என்று….(306)….2-12-2010

மொக்குவிரல் ஐயிரெண்டும் மூசக் குவித்ததில்
தொக்கி ஜமாலை தொங்கிட -நெக்குருக
நின்றனள் பார்வதி நீண்டபேச் சின்மையால்
மன்றாடும் அந்தணர் முன்….(307)….3-12-2010

உண்மைதான் தோழி உரைத்ததெலாம் வேதியரே
சின்மயத்தை சேரதவம் செய்தனளிப் -பெண்மை
அரும்பொருள் ஏதுமிலை ஆசைதனக்(கு) எட்டா
பரம்பொருள்மேல் பார்வதிக்குப் பற்று….(308)….4-12-2010

அறிவேன் அரனை அரைநிறை ஆக
வெறியாய் அவனை விரும்பாய் -நெறியாக
கூசும் அமங்கலக் காரியத்தைக் கொண்டாடும்
ஈசனவன் மேலுனக்கேன் ஈர்ப்பு….(OR)
ஈசன்மேல் ஈர்ப்பு இழிவு….(309)….4-12-2010

அற்பப் பொருளில் அதிகபற்(று) உற்றவளே
பொற்காப்பு சூடியவுன் பூங்கரம் -சர்பத்தால்
கங்கணக் காப்பணிந்த காபா லியின்கையை
எங்கணம் ஏற்கும் இசைந்து….(310)….4-12-2010

உரித்துப் புதிதாய் உடுத்திய ஆனைக்
கரித்தோல் குருதியைக் கொட்ட -பொருத்தமாய்
அன்னம் வரைந்தவெண் அம்பரப் பட்டெழில்
என்னமாய் ஏற்கும் எதிர்….(311)….4-12-2010

சேவடி செஞ்சாந்து பூவிரித்த மாளிகையில்
தூவிடுமுன் கால்சுவட்டைத் தாவிடுங்கால் -சாவடைந்தோர்
வாழும் தலத்தில் வலதுகால் வைப்பதா
பாழப் பரமசிவன் போக்கு….(312)….4-12-2010

சீதக் களப சுகந்த தனங்களில்
மோதிக் களித்து மருவிடும் -போதவர்
மார்பினில் பூசிய மாண்டோர்தம் சாம்பலுன்
சார்பிலும் வீசுமட சட்….(313)….4-12-2010

உந்து மதகளிற்றில் உட்கார்ந்து புக்ககம்
வந்திடாமல் அந்த வயோதிக -நந்தி
முதுகமர்ந்து சென்றால் முறுவலிப்பர் மக்கள்
இதுமிகுந்த கேலிக்(கு) இடம்….(OR)
இதுவுகந்து போவாயோ இல்….(314)….5-12-2010

சந்திரன் கெட்டானாள் சம்பு தலைக்கேறி
அந்தவழிக்(கு) ஆளாகாய் அம்மணி -இந்தபுவிக்(கு)
இன்பம் தருமிருவர்க்(கு) ஈசான்ய மூலையா
துன்பத் தவத்தைத் துற….(315)….6-12-2010

நேத்திரம் மூன்றுடையோன் நோக்க விகாரமாய்
கோத்திரம் பெற்றோர் கிடையாதோன் -போர்த்திடுவான்
திக்கெட்டால் மூடி, திருமணம் கொண்டால்நீ
திக்கற்றப் பார்வதி தான்….(316)….6-12-2010

பூவனம் நீயெங்கே, தீவனத்தோன் தானெங்கே
ஈவனம் விட்டகல், இட்டியின் -காவணக்
காலேற்கும் பூசையை காட்டுப் பிணஞ்சுடு
கோலேற்க்க லாகுமோ கூறு….(317)….6-12-2010

அந்தணர் கூற்றால் அதரம் துடிக்கயிரு
கண்தணல் கொள்ளக், கொடிப்புருவம் -கொந்தளிக்க
பார்த்தனள் கோபமாய் பார்வதி பின்தொடர்ந்து
வார்த்தைகள் சொன்னாள் வெகுண்டு….(318)….7-12-2010

ஆரணம் போற்றிடும் பூரணப் பெம்மானின்
காரணக் காரியம் நீரறியீர் -சாரணரே
கத்தும் கடலாழம் காணுமோ குச்சிஅற்ப
சித்தத்திற்க்(கு) எட்டார் சிவன்….(319)….7-12-2010

குறையொன்றும் இல்லா குணத்தோன் அரனுக்(கு)
அறம்பொருள் இன்பம் எதற்கு -பகர்கின்ற
மங்களங்கள் எல்லாமே மாண்டு பிறப்போர்க்கே
எங்களவர் ஆசைக்(கு) எமன்….(320)….7-12-2010

பிச்சை புகினும் பணக்கா ரணக்காரர்
இச்சை இடுகாடாய் ஏற்பினும் -முச்சகத்தின்
மூர்த்தியவர் அச்சத்தை மூட்டினும் காந்தமாய்
ஈர்த்திடும் ஈசன் இரும்பு….(321)….7-12-2010

குஞ்சர அம்பரம் கொண்டாலும், ஆபரணம்
நஞ்சுமிழ் பாம்பாய் நெளிந்தாலும் -நெஞ்சில்
கபாலங்கள் கோர்த்துக் கிடந்தாலும் என்ன
சபாபதிக்கு மேனி ஜகம்….(322)….7-12-2010

ஈசனுடல் மேவி இடுகாட்டுச் சாம்பலும்
தோஷம்போய் ஆனது தூய்மையாய் -தூசெனில்
ஆடலின் போது அபிநயத்தால் சிந்துவதை
சூடுவரோ விண்ணோர் சிரம்….(323)….7-12-2010

வாரண வாகனன் வானவகோன் வந்தயெதிர்
ஏறதன் வாகனரை ஏத்துதலாய் -பூரணனின்
பாதம் சிவக்க புனைந்தசென்னி மந்தார
தாதவிழ வீழ்வான் தொழுது….(324)….7-12-2010

குற்றம் உரைப்பதையே கொள்கையாய்க் கொண்டாலும்
அற்றை மறந்துநீர் ஆதரவாய் -சற்றே
சகத்தைப் படைத்த சதுர்முகனை ஈன்றோன்
தகப்பன்தாய் இல்லாதவன் தான்….(325)….7-12-2010

போதும் விவாதம்நீர் மூதரித்த வண்ணமீசன்
தீதாய் இருப்பினும் தித்திக்கும் -மாதெனக்கு
ஆதலால் ஏதுமிப் பேதைபால் ஓதாதீர்
காதலுக்குக்(கு) இங்கில்லை காது….(326)….8-12-2010

தோழியே துடிக்கின்ற தாடையார் மீண்டுமேதோ
கோழிமூட்டக் காத்துள்ளார் காதுகொடாய் -பாழிழுத்து
பேசம் மகான்களைப் பாவமென்றால் அப்பேச்சை
ஆசையுடன் கேட்டல் அழிவு….(327)….8-12-2010

முத்தாய்ப்பாய்ச் சொல்லி மரவுரி மண்நழுவ
கித்தாய்ப்பாய் பார்வதி கூறியோட -சத்தாய்க்க
இன்று புறம்மறைத்தோன், அன்று புரமெரித்தோன்
என்றரனாய் நின்றான் எதிர்….(328)….8-12-2010

அந்தரத்தில் கால்வைத்து மந்திரித்தாற்ப் போல்நின்று
சந்திர சூடனை சந்தித்தாள் -இந்தநிலை
செல்ல முடியாமல் நில்ல மனமின்றி
கல்லணையால் காவிரிகால் கட்டு….(329)….9-12-2010

சவுந்தர்ய லாஹிரியே செய்த தவத்தால்
சிவந்தன்னைச் செய்தாய் சேவகனாய் -உவந்தென்னை
கொள்ளடிமை என்றதும் துள்ளுகையில் குத்திய
முள்ளெடுத்த மானானாள் மாது….(330)….9-12-2010

சர்கம் ஐந்து சுபம்
————————
——————————————————————————————-

சர்கம் ஆறு
————–

என்னை எனக்களித்த என்தந்தை சம்மதித்தால்
என்னை அவர்க்களிப்பேன் என்றுரை -பின்னை
இறையோன்தான் ஆனால் முறைமீறல் தோழி
சரியாகேள் பாம்புச் செவிக்கு….(331)….9-12-2010

தாவிடும் மாங்கொடி மேவும் வசந்தத்தை
கூவும் குயில்மூலம் கொஞ்சுதலாய் -சேவகியை
பாலமாக பேசவிட்டு பார்வதி மோனத்தை
ஆலமர்ந் தோர்க்கே அளிப்பு….(332)….10-12-2010

முந்தித்தன் முக்கண்ணால் மன்மதனை மாய்த்தவன்
சிந்தித்தான் சப்தரிஷி சங்கமத்தை -இந்தப்பெண்
ஆசை மிகுந்தவள் அப்பனிடம் பெண்கேட்க
ஈசனே ஆயினும் ஈர்ப்பு….(333)….10-12-2010

தேசொளி வானில் திகழஆ காசமது
கூசிடும் வண்ணம் கிளர்ந்திட -மாசிலா
அந்தணர்கள் ஏழ்வர் அருந்ததி முன்வர
உந்தெருதோன் முன்பு உதிப்பு….(334)….11-12-2010

அட்டதிக் ஆனைகள் கொட்டும் மதஜலத்தால்
மட்டிலா வாசமுடன், மந்தார -மொட்டதை
தீரம் ஒதுக்கும்மந் தாகினியில் ஏழ்வரும்
ஊறிக் குளித்தங்(கு) உதிப்பு….(335)….11-12-2010

முத்துடை முப்புரியும், பத்தரைப் பொன்னுரியும்
ரத்தின ருத்திராக்ஷ ரக்ஷ்ஷையும் -உத்தரித்த
கேட்டன நல்கிடும் கற்பகச் சோலையாய்
ஊட்டமுடன் ஏழ்வர் உதிப்பு….(336)….11-12-2010

தேரழுந்தூர் மார்கத்தைத் தாழ்த்திக் கொடிக்கம்பன்
வேரழுந்த வைத்து விரைகையில் -சூரியன்
தன்நமஸ் காரத்தை அண்ணாந்து செய்திட
உன்னுதல்கண் டேழ்வர் உதிப்பு….(337)….12-12-2010

ஊழியில் ஏன உருவில் உலகினை
ஆழியுள் போந்தெடுத்த ஆதிநாள் -ஊழியனின்
கோரையில் பூதேவி கூடக் களைப்பாறிய
ஊறைப்பல் ஏழ்வர் உதிப்பு….(338)….12-12-2010

பாதி படைத்து பிரமன் களைப்புற
மீதி முடிக்கும் முனிவர்கள் -வேதம்
தொகுத்த வியாசரே தோத்தரித்து வாழ்த்தை
உகுத்தஅவ் ஏழ்வர் உதிப்பு….(339)….12-12-2010

கற்பனைக்கு எட்டாத அற்புத வேள்விகள்
பற்பல செய்து பலனுற்றும் -அற்பமாய்
தள்ளி எமக்குத் தொழில்தவம் என்றிருக்கும்
உள்ளத்தவர் ஏழ்வர் உதிப்பு….(340)….12-14-2010

வெண்பல் தவத்தர் வசிட்டர் பலன்யாவும்
பெண்கொள் வடிவெடுத்தாற் போலங்கு -கண்கள்
பொருந்திடக் கேள்வர் பதத்தில் குனிந்த
அருந்ததியைப் பார்த்தான் அரன்….(341)….12-14-2010

புறத்துப்பால் பாரா பெரியோர்கள் போற்றல்
அறத்துப்பால் வாழ்வோரே ஆவர் -புரத்தின்பால்
தீவைத்தோன் ஏற்றான் தவத்தேழ்வர்க்(கு) ஒப்பாக
பூவைத்தப் பத்தினிப் பெண்….(342)….12-15-2010

அருந்ததி பார்த்த அரன்மனதில் ஆர்வம்
பிறந்ததாம் இல்லறம் பேண -சிறந்த
தொழிலாம் அறத்தைத் துணையின்றி செய்தல்
விழலுக்(கு) இறைத்த வளம்….(343)….12-17-2010

இல்லறமே நல்லறம் என்றெழில் பார்வதியை
வெள்ளியிறை ஏற்க விருப்பமுற -கள்ளமதை
முன்பிழைத்தக் குற்றத்தால் மண்புதைந்த மன்மதன்….(OR)
முன்பிழைத்து ஓய்ந்து மனம்துவண்ட மன்மதன்
தன்பிழைப்பில் கண்டான் தடம்….(OR)
தன்பிழைப்பில் கொண்டான் தெருள்….(344)….12-17-2010

அங்கம் புளககிக்க ஆரணம் நான்கினை
அங்கங் களோடறிந்த அவ்வேழு -சிங்கங்கள்
ஏசிவா சங்கரா என்றீசர் தாள்பணிந்து
பேசவாய் பொத்தினர் பின்பு….(345)….12-17-2010

வேதவழி போனதால் வேள்விகள் செய்ததால்
மாதவத்தில் முக்குளித்து மூழ்கியதால் -ஆதவனாய்
ஏழ்வரெங்கள் முன்பு எழுந்தருளி நிற்கின்றீர்
வாழ்வெமக்கு வந்ததிவ் வாறு….(346)….12-19-2010

எட்டாத கொம்புத்தேன் ஈசன் தரிசனம்
கிட்டாதா சொட்டேனும் காத்திருந்தோம் -இட்டாயின்(று)
ஏழுமுனி எங்களையுன் ஏகாந்த நெஞ்சில்ஈர்
ஏழவனி நாயகா ஏற்று….(347)….12-19-2010

உம்மை நினைப்போன் உலகிலுயர் பாக்கியவான்
அம்மா மறைகளின் ஆரம்பம் -உம்மால்
நினைக்கப் படுமளவு நாங்களுற்ற பேறை
நினைக்க நயனத்தில் நீர்….(348)….12-19-2010

ஆதித்தன் அம்புலிக்(கு) அப்பாலுள் அந்தரத்தில்
ஆதிக்கம் கொண்டோம் அதைவிடுங்கள் -ஜோதிக்கண்
தென்னவனுன் நெஞ்சில் திளைத்ததால் நாங்களின்று
உன்னதம் உற்றோம் உயர்ந்து….(349)….12-19-2010

வாயால் வசிட்டனின் வாழ்த்தைப் பெறுவதற்கே
நேயன் கவுசிகன் நாட்டமுற்றான் -தூயனே
ஆதரித்(து) எங்களுக்(கு) அந்தஸ்(து) அளித்ததால்
காதலித்தோம் எங்களைநாங் கள்….(350)….25-12-2010

காதலர்க்கு சந்தோஷம் காணக் கிடைத்திடுமே
ஆதலால் அங்கே(து) அளவளாவல் -சேதனர்கள்
யாவிலும் நீரந்தர் யாமியாய் நிற்பதால்
நாவுரைக்கும் நன்றி நனி….(351)….25-12-2010

நேரில் தரிசித்து நாங்கள் அறிந்தது
சோறின் பருக்கைச் சமானமே -வேரில்
பழுத்த பலாவாயெம் புத்திக்(கு) உறைக்க
முழுத்தன்மை கூறேழ் முனிக்கு….
தழைத்தோங்க வேண்டும் தயவு….(352)….26-12-2010

பார்த்துப் பரவசமாய்ப் போற்றிப் பணிந்தயிம்
மூர்த்தியம் முத்தொழிலின் மொத்தமெனில் -வார்த்தலை
காத்தலை, தீர்த்தலைக் கண்மூன்றால் செய்வீரோ
வேத்தியர் ஏழ்வர் வியப்பு….(353)….28-12-2010

விடையவரே எங்கள் வினாக்களுக்குத் தக்க
விடையருள்வீர், நாங்களிங்கு வந்த -கடமையை
செய்து முடித்தபின் ,சொல்வீர் அதற்க்குமுன்
எய்தகணை யாகஅவ் ஏழு….(354)….7-1-2011

எழுவர் வினாக்களுக்(கு) ஏற்ற பதிலை
மழுமான் உடைத்தோன் மலர்ந்த -பொழுது
தரித்த மதியதன் தண்ணொளியைக் கூட்டும்
சிரித்தமுல் லைகள் ஜொலித்து….
சிரித்தவெண் பற்கள் ஜொலித்து….(355)….12-2-2011

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *