வளவன் கனவு-11
சு.கோதண்டராமன்
மணக்கோலம்
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
–சம்பந்தர்
இன்று எப்படியும் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு பசுபதி வீட்டிற்குள் நுழைந்தான். நல்ல வேளை அப்பா கோயிலுக்குச் சென்றுள்ளார். தங்கையும் அடுத்த வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறாள்.
“அம்மா, உன்னை ஒன்று கேட்கவேண்டும்” என்றான்.
“சொல்லுடா” என்றாள் ரோகிணி.
“கோடி வீட்டு முருகையன் மகள் மல்லிகையைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“ஏன், நல்ல பெண். வீட்டு வேலைகள் நன்றாகச் செய்கிறாள். தம்பி தங்கைகளை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். அம்மாவுக்கு உதவியாக இருக்கிறாள்.”
“அவள் உனக்கு மருமகளாக வர ஏற்றவளா என்று சொல்.”
“ஓகோ, அப்படியா விஷயம். நல்ல பெண் எனக்கு மருமகளாக வந்தால் சந்தோஷம்தான்.”
“இது வரை அவளை ஒரு மூன்றாம் மனுஷியாகக் கருதி ஒரு அபிப்ராயம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய். இனி அவளை மருமகளாக வரப் போகிறவள் என்ற கோணத்தில் கவனி. அப்பொழுதுதான் குறைகள் தென்படும். மூன்று மாதம் கழித்தும் உனக்கு இதே அபிப்ராயம் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம்.”
“சரி, அப்பாவிடமும் சொல்கிறேன். அவரும் கவனிக்கட்டும்.”
“வேண்டாம், வேண்டாம். அவருக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு ரகசியமாக ஆராயத் தெரியாது. அவர் போனால் ஒன்று சம்பந்தத்தை முடித்துக் கொண்டு வருவார் அல்லது முறித்துக் கொண்டு வருவார். உன் மனதோடு இருக்கட்டும். இது சரியாக வரவில்லை என்றால் வேறு யோசனையும் வைத்திருக்கிறேன்.”
‘பதினெட்டு வயது ஆகி விட்டது, விவாகம் செய்ய வேண்டிய காலம்தான். நம் தேசமாக இருந்தால் பெண்ணைப் பெற்றவர்கள் வரன் கேட்டு வருவார்கள். இதற்குள் விவாகம் ஆகி இருக்கும். இந்த ஊரில் நாம்தான் பெண் கேட்டுப் போகவேண்டும் போல் இருக்கிறது. அதுவும் தவறில்லை. கேட்போம். இவனுக்குத்தான் இந்த வயதிற்குள் என்ன விவேகம்! என்ன மன முதிர்ச்சி! தீர்க்காயுசாக இருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
மூன்று மாதம் அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகி அவளைப் பற்றித் தெரிந்துகொண்டாள் ரோகிணி. பொருத்தமாக இருக்கும் என்று உறுதி செய்துகொண்டபின் கணவரிடம் தெரிவித்தாள். இருவரும் முறைப்படி பெண் கேட்டனர். திருமணம் உறுதி செய்யப்பட்டது.
அந்த ஊர் மக்களிடையே பல சாதிகள் இருந்தன. ஆனாலும் தன் சாதிக்குள்தான் திருமணம் செய்வது என்ற வழக்கம் இல்லை. தந்தையின் சாதியே குழந்தைகளுக்கும் என்ற முறை இருந்ததால் சாதிகள் அழியாமல் நிலைத்திருந்தன. சமூகத்தில் நல்லிணக்கமும் இருந்தது.
ஹரதத்தரின் மகனுக்கும் முருகையனின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதில் பிரச்சினை எதுவும் இல்லை. எந்த முறைப்படி நடத்துவது என்பது பற்றி இருவரும் ஆலோசித்தனர். வடம முறைப்படி கன்னிகாதானம் செய்வது என்றும் தமிழ் முறைப்படி தாலி கட்டுவது என்றும் முடிவாயிற்று. அக்னியை வழிபட்டு வலம் வந்து அதைச் சாட்சியாகக் கொள்வது இரு சம்பிரதாயங்களுக்கும் பொதுவாக இருந்ததால் அதைக் கடைப்பிடிப்பது என்றும் முடிவாயிற்று.
ஊர் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் திருமண வேலைகளில் ஈடுபட்டனர். எல்லோருக்கும் இரு திறத்துப் பெற்றோர்களும் விருந்தளித்து மகிழ்ந்தனர்.
மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக இல்லறம் தொடங்கியதில் ஹரதத்தரின் மனைவிக்குப் பேரானந்தம். இருவரையும் பார்த்தால் கண் பட்டுவிடும் போல் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு திருஷ்டி கழித்து வாழ்த்தினாள்.
தொடரும்