-சோழகக்கொண்டல்

விசையுற்று விரிந்த சிறகு
அசைவற்று உறைந்த கணத்திலேயே
ஆயிரம் ஆண்டுகளாய் நிற்கிறது
இந்த அன்னம்!

அதன் முதுகின்மேல்
துருத்திய கண்களோடும்
தூக்கிய கால்களைப்
பிளந்து முளைத்த
தும்பிக்கையோடும் விழிக்கிறது
ஒரு யாளி!

இரண்டுக்குமிடையில்
எதிர்த்தூண் மன்மதன்
எய்யும் மலர் அம்புக்காய்க்
காலங்காலமாய்க்
காத்துநிற்கிறாள்
ரதி!

மலர்க்கணை துளைக்கையில்
இவள் மார்பு சுரக்கும்பாலைத்
தனித்துப்பருகவே
தவமிருக்கும் அன்னம்
இதன் உன்மத்த வெப்பம் மேலேறி
ஊறி உறைகிறது மதநீர்
மண்டபத்தைத் தாங்கிநிற்கும்
யாளியின் மண்டைக்குள்!

இந்த நித்தியகாம நெடுந்தவத்தின்
எதிர்ப்புறத்தில் நிற்கிறான்
மூக்குடைபட்ட மன்மதன்!
நீண்டு வளைந்திருக்கும்
அவன் கரும்பு வில்லில்
கணைகள் ஏதும் மீதமில்லை
கண்டீரா?

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “யாளியும் அன்னமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *