“கடமை வீரர்”– கர்மவீரர் காமராசர்!
– எஸ். நித்யலக்ஷ்மி.
“கர்ம வீரர்” என அன்பாக அழைக்கப்பட்ட காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, இந்நாளில் விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசரின் பிறந்த தினம், “கல்வி வளர்ச்சி தினமாக” கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி தனது சென்ற ஆட்சிக்காலத்தில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட வைத்தார். தமிழகத்தில் ஏழைகளும் கல்விபயில காமராஜர் ஆற்றிய பணிக்கு மிகச்சரியான புகழாரம் அது.
காமராசர் …
1914: ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.
1919: ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்திஜியின் அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.
1920: ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு கொண்டார். திருமண பேச்சை தாயார் தொடங்கிய போது மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
1922: சாத்தூர் தாலுகா, காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புச் செயலாளராக பணியாற்றினார்.
1923: நாகபுரி கொடி போராட்டத்தில் பங்கு கொண்டார். மதுரை கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.
1925: கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1927: சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த காந்திஜியிடம் அனுமதி பெற்றார். (போராட்டம் நடப்பதற்குள் நீல் சிலையை அரசே அகற்றியது)
1928: சைமன் குழுவை எதிர்த்து மதுரையில் காமராஜர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1930: வேதாரண்யத்தில் நடந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டு ஆண்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1932: போலீஸ் ஸ்டேஷன் மீது வெடிகுண்டு வீசியதாகச் சதி வழக்கு, காமராஜர் மீது சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.
1933: பிரிட்டனில் நடந்த வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால், நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார்.
1934 : காமராஜர் உழைப்பால், பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.
1935: டிச.28ம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
1936: காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1937: சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டு வென்றார். நகராட்சித் தலைவராகும்படி பலர் வேண்டியும் மறுத்து விட்டார்.
1940: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.
1941: யுத்த நிதிக்குப் பணம் தரவேண்டாம் என மக்களிடையே பிரசாரம் செய்ததால், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே மே 31ல் விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942: ஆகஸ்ட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
1945: இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றதால், காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்.
1946: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.
1947: ஆக.15: சுதந்திரம் கிடைத்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.
1954: குலக்கல்வி திட்ட எதிர்ப்பு காரணமாக ராஜாஜி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவும், சட்டசபை கட்சி தலைவராக காமராஜர் போட்டியிட்டு வென்றார்.
1954: ஏப்ரல்13 இல் காமராஜர் முதல்வரானார்.
1956: மொழிவாரி மாநில பிரிவினையின்படி தமிழகம் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
1957: பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதல்வரானார்.
1960: ஏழைக் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு ஆணையிட்டார்.
1962: பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.
1963: எல்லோருக்கும் இலவசக்கல்வி திட்டத்தை அமல்படுத்தினார். பின் பதவியை ராஜினாமா செய்தார்.
1964: அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1966: இந்திரா பிரதமர் ஆவதற்கு, காமராஜர் பெரும் முயற்சி செய்தார்.
1967: பொதுத்தேர்தலில் காமராஜர் தோல்வி.
1969: நாகர்கோவில் பார்லிமெண்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் சிவகாமி அம்மையார் மறைவு.
1971: பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. பார்லிமெண்ட் உறுப்பினராக காமராஜர் தேர்வு.
எத்தனை எத்தனைத் திட்டங்கள் !!!!!!
மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வாலையார் அணை, ஆரணியாறு அணை, மங்கலம் அணை, வீடூர் அணை, கிருட்டிணகிரி அணை, மேல்கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய், சாத்தனூர் அணை, கோமுகி அணை, பரம்பிக்குளம் – ஆளியாறு அணை, கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம் இப்படியாய் எத்தனை எத்தனை அணைகள் காமராசர் ஆட்சியில் அமைக்கப்பட்டன. எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. வேளாண்மை செழித்திட காமராசர் ஆற்றிய பணிகள்.
திருச்சி பெல் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி சாலை, மேட்டூர் காகித ஆலை, ஆவடி ராணுவ டாங்கித் தொழிற்சாலை, இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, குன்னூர், கிண்டி இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, இப்படியாய் இன்னும் ஏராளமான சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பல்வேறு தொழிற்சாலைகள் தலைவர் காமராசரின் ஆட்சியின் சாதனைகளாக மலர்ந்தன.
மின்வாரியம் அமைத்து மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு எனச் செயல்படுத்தி மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட வைத்தார். நீர்மின்திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், அணுமின் திட்டங்கள் பலகாமராசர் ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தப் பட்டு கிராமப்புற மக்கள் மின்னொளி பெறக் காரணமான காமராசருக்கு 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி எதிர்பாராமல் உடல் வியர்த்தது, டாக்டர் வருவதற்குள் உயிர் பிரிந்தது, ஒளி மறைந்தது.