எதைநோக்கிப் போகிறது சுதந்திரம்?
-ஆர். எஸ். கலா
நெஞ்சி பொறுக்கலயே
பஞ்சமா பாதகர்கள் செயல்
கண்டு!
உள்ளம் ஊனம் ஆன
கள்வர்களோ இல்லை
கடமையைக் கண்ணும்
கருத்துமாகப் பார்க்கும்
காவலர்களோ…
பாதம் பதித்து நடக்க
வழியில்லா வாலிபனைத்
தன் பாதத்தாலே
கொட்டுகிறான்
சட்டமோ போடுகிறது
பல விதத்தில் ஆட்டம்
இது என்ன புதுக் கூட்டம்?
மட்டம் தட்டுகிறது
காவலர்களை ப்பல
மாவட்டம்!
நல்ல சில அதிகாரி
தன்னுள்ளே குமுறுகிறான்
இது என்ன பிழைப்பு என்று!
இதில் எங்கே சுதந்திரம் ?
மதுவுக்குத் தடை விபசாரத்துக்குத் தடை
மழலைக் கொலைத் தடை கற்பழிப்புத் தடை
லஞ்சம் தடை இத்தனையும் தடைஇன்றிப்
போடுகிறது நடை!
அங்கே அதிகாரம் நுழையத்தான் தடை!
உடலால் வருந்தி உள்ளத்தால் துடிக்கும்
ஒருவனுக்கு ஒத்தடம் கொடுக்கிறதா?
சட்டம் உபத்திரவம் கொடுக்கிறதா?
அரசாங்கத்தின் அராஜகம்
அரங்கேறுகின்றது நடு வீதியிலே
எங்கு இல்லை எதில் இல்லை
சுதந்திரம் என்னும் வார்த்தை?
அவை சோர்ந்து போகின்றது
அரச தந்திரங்களால்
ரத்தத்தின் ரத்தமென மேடைக்கு
மேடைப் பேச்சு
மொத்தத்தில் மொழியால் பிரித்துத்
தமிழனுக்கு எதிலும் வழி
இல்லாது போச்சு!
முன்னேற்றுவேன் முன்னேற்றுவேன் நாட்டை
என்பது அரசியலின் தாரக மந்திரம்
விலை ஏற்றி விலை ஏற்றியே
வீணாகப் போகிறது கூலிகளின்
அன்றாட வாழ்வு மாத்திரம்!
சுதந்திரம் இல்லை அதை நாடி
ஓடுவோருக்குச் சோறும் இல்லை
எதை நாடிப் போகின்றதோ இந்தச்
சுதந்திரம் என்னும் சொல்?
எங்கும் ஊழல் அரச காரியாலயத்தில்
நுழைந்ததுமே தேடல் உருப்படியாக
ஒரு காரியம் துட்டு இன்றிச் செய்ய
வழி உண்டா?
பக்கத்துக்குப் பக்கம் பொதுச் சேவை
என்று அறிவிப்புப் பலகை
அங்கே பொத்திய வண்ணம் அபகரிக்கான்
ஏழையின் கை இருப்பை!
இதில் மனிதனுக்கு எங்கே சுதந்திரம்?
பாதைக்குப் பாதை மதுக்கடை நடை பாதையிலே
நடக்கவே மாதுக்குத் தடை!
போதையில் தள்ளாடும் கயவன்
தாவணி தொட்டு இழுப்பான் என
அச்சம் இதில் பெண்ணுக்கு எங்கே
சுதந்திரம்?
நினைத்த நேரத்தில் பாதையில் நடக்கத் தடை
நினைத்தபடி வாழச் சமுதாயத்தில் தடை
சுதந்திரம் என்னும் வார்த்தை சொல் அளவுதான்
அது பறந்து விட்டது பல விதத்திலும்
சில மதத்திலும்!