பேச்சிலும் நேர்மை வேண்டும்!
-ஆர். எஸ். கலா
கதை கதையாக
அளந்து காலத்தையும்
நேரத்தையும் கழிக்கும்
மனிதர்களே…!
பேசும்போது உம்
பேச்சு மற்றோரைத்
திருத்தும் மருந்தாக
இருக்கின்றதா…இல்லை
விருந்தாகச் சுவைக்கின்றார்களா
என்று உணர்ந்து உரைக்கின்றீரோ…?
தெருவிலும் கூட்டம்
போட்டுப் பேச்சு வீட்டிலும்
அதே நிலமையாச்சு…!
சினிமா பற்றியும்
அதில் வரும் தேவதைகள்
பற்றியும் பேச்சு, இறுதியில்
நாசமாகப் போச்சு
பொன்னான நேரம்!
உருப்படியாக ஒரு
காரியம் பற்றிப்
பேசுவது உண்டா?
அதைச் செய்ய முயன்றது
உண்டா?
கொலை கொள்ளை
பற்றியே எப்போதும் பேச்சு
கஞ்சிக்காவது வழி தேடவே
புத்தி இல்லாது போச்சு…!
அதிர்ஷ்டம் தேடியே நீ
துரதிர்ஷ்டசாலி என்று
பெயர் பெறுகிறாய்
அதையும் பொருட்படுத்தாது
சோம்பேறியாகவே வலம்
வருகிறாய்!
கூடிப் பேசு கூட்டம்
போட்டுப் பேசு
நல்லதில் நாட்டம்
கொள்! நாள் முழுக்கப் பேசு
சமுதாய நிலமையைப் பார்த்துப் பேசு
பிறரைத் திருத்த வழி தேடிப் பேசு!
சலிப்பு இன்றிப் பேசு
துடிப்போடு பேசு
வடிகால் கொண்டு கெட்டதை
வடித்துத் தூக்கிப் போட
இடம் தேடிப் பேசு
தவறை அழித்துத் தலை
நிமிர்ந்து வாழ நல்லநெறி
முறைகளைத்தேடிப்பிடித்துப் பேசு!