ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 12
–சி. ஜெயபாரதன்.
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஓ இரவே !
ஓ இரவே
__________________________
காதலர் துணைவன் நீதான் !
சோர்வு அடைவோர்க் கெல்லாம்
ஆறுதல் தருவது நீ !
புறக்கணிக்கப் பட்டோர்க்கு
இருப்பிடம் நீ !
ஏகாந்த மாந்தர்க்கு
இடம் அளிப்பது நீ !
உனது நிழலில் கவிஞன் உள்ளம்
ஓய்வெடுக்கும் !
தீர்க்க தரிசிகளின் நெஞ்சம்
விழித்துக் கொள்ளும்
உந்தன் நிழலில் !
சிந்தனை யாளர் மூளை
செவ்விய நிலை அடையும் !
கவிஞர்க்கு
உள்ளீர்ப்பு அளிப்பாய் !
தூதர்க்கு
ஒளிக்காட்சி ஊட்டுவாய் !
வேதாந்த முனிவர்க்குப்
போதனை வழங்குவாய் !
___________
மனித இனத்துடன்
எனது ஆத்மா களைப்புறும் போது,
பகற் பொழுதின் முகம் தாக்கி
எனது விழிகள் கடுத்துச்
சலிப்படையும் போது,
அலைந்து திரிவேன் நான்
மலைத்துப் போய்
பழைய பேய் உருக்கள் கண்மூடி
ஒளியும் இடங்களில்,
ஆயிரங் காலுடன் அவனிமேல்
அடி யெடுத்து வைத்து
நடுங்கிடும்
மங்கலான பீடத்தின் முன்பு
தங்கி நிற்பேன் !
நிழலின் விழிக்குள் காண்பேன்
தெரியா இறக்கைகள்,
அசையும் சலசலப்பு கேட்டேன் !
மௌனத்தின் மாய
ஆடைக்குள்
மென்மைத் தொடுதல் உணர்ந்தேன் !
கரிய இருட்டின்
கடுமை தாங்குவேன் !
____________
இரவே ! அந்த அமைதியில்,
உன்னைக் கண்டேன்
எழிலாய்,
அலங் கோலமாய்,
வானுக்கும் பூமிக்கும் இடையே
மோன நிலையில் மூழ்கி,
மூடு பனியில்
முகத்திரை யிட்டு,
முகில் அங்கி போர்த்தி,
பரிதியை நகையாடிய வாறு
பகலையும் கேலி செய்து,
உறங்காது
வடிவ வழிபாடு செய்யும்
அடிமை மாந்தரைக்
கோபித்துக் கொண்டு !
____________
“தமது மதத் தலைவரின் தகாத செயல்களைத் தவறெனத் தாக்கி எதிர்க்கும் இனப் புரட்சியாளர் மனித நேயமுள்ள, மூடப் பழக்கம் இல்லாத வேறொரு மதத்துக்கு மாறப் போவதாய்ப் பயமுறுத்துவார். ஆனால் அடுத்து நம் காதில் விழுவதென்ன ? சமூக மயக்க மருந்தளிப்பு மூலம் தேசத்தின் மதவாதிகள் இடையனையும் ஆட்டு மந்தை ஆடுகளையும் சமாதானப் படுத்தினர் என்பதுதான்.”
கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
____________