கவிஜி.

எதற்காக என்றால், எதற்காகவும் அல்ல இக்கடிதம். கடிதங்கள் படிப்பதற்காக அன்றி வேறு எதற்காக என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. காரணமின்றி எழுதும் படிக்கும் கடிதங்கள். ஆனால் எதற்கும் காரணம் உண்டு. காரணம் இல்லை என்பதும் காரணம் தானே.

படிக்கும் மனநிலையில் நீங்கள் இல்லாமல் இருக்கலாம். இல்லை, வெறுமனே ஒரு செய்தி தாளின் பார்வையோடு படிக்கலாம் அல்லது பிரிக்காமல் கூட உங்கள் மேஜைக்குள் அடைபடலாம். ஆனால், என்றாவது ஒரு முணுமுணுப்புக்குள் வார்த்தைகளாய் வெளிப்பட்டே ஆக வேண்டும். அது தான் கடிதங்களின் வெளிப்பாடு அல்லது பொருள். அவசர உலகம், அத்தியாவசப்பணம், ஓட்டம், தொடர் ஓட்டம், சராசரி அறுபது வயது வாழ்க்கை ஏதோ ஒரு யுகத்திற்கான தேவையை சேகரிக்கச் சொல்கிறதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது. நின்று நிதானமாய் முகம் பார்க்க முடியவில்லை. முகம் பார்க்கும் கண்ணாடிகள் தேவைப் படாத உலகில் கண் கண்ணாடிகள் கடை விரிக்கத்தானே செய்யும். நடந்து, கடந்து தேய்ந்த பாதங்களில் ஊற்றும் ஒரு பாலைவன குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவிய பின் கிடைக்கும் புன்னகை என என் கடிதம் எழுதுகிறேன். நான்கு பக்கம் விவரிக்கும் காதல் கடிதங்கள் கூட குறுஞ்செய்தியில் சுருங்கி போனது. எல்லாம் மாறிப் போனது. எண்ணங்கள் முதல் எல்லைகள் தாண்டி, எல்லாம் மாறிப் போனது. எனக்கென்னவோ, எழுதுபவன் மனநிலைக்கும் படிப்பவர் மனநிலைக்கும் உள்ள தூரமும், இடைவெளியும் மட்டும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அது மாறாத கணம் ஒன்றில் நின்ற படி தான் இதை எழுதுகிறேன்

ஒற்றைத் தத்துவத்தில் அடைபடாத ஒன்றாய் இந்தப் பூமி சுழல்கிறது. இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. தத்துவங்கள் பசி போக்காத வயிற்றில் பற்றி எரிகிறது நிதர்சனம். கேள்விகள் இல்லாத நாளில் பதில்களின் குவியல்கள், குப்பை பொறுக்கும் சிறுவர்களின் பாதங்களில் அடிபடும் உலக பந்துகள். நான் இப்படிதான், எப்போதுமே சொல்லவரும் விசயங்களை விட்டுவிட்டு ஒரு அனிச்சை செயலைத் தொடர்வண்டியின் விரல் பிடித்து ஒரு தும்பியாய் எதிர்த் திசையில் பயணித்து விடுவேன்.

நினைக்கும் எண்ணங்கள் அனாதைகளாய் கடிதத்திற்குள் வரமுடியாமல், பேனாவின் முனையோரம் தங்கித் தவிக்கும். கம்பி வேலிக்கு அப்பால் மிரட்சியோடு பார்க்கும் பசி கொண்ட புலிகளின் கண் கொண்ட பார்வையில் மாறிக்கொண்டே இருக்கும். மனநிலையில் எந்த நிலையில் நான் மற்றும் நீங்கள் மற்றும் நமது தோழமை இருக்கிறது? எத்தனை முறை பிரிந்தாலும் அத்தனை முறையும் சேர்ந்துவிடும் இலகுவான மனங்களை நாம் கொண்டுள்ளதாகவே ஒரு பெயரில்லாத பறவை சொல்லிப் போனது. நானும் அதையே நம்புகிறேன்.

நம்பிக்கையில் சுழலுவதுதானே எல்லாமே. வெறும் இறந்த காலத்தின் குவியலாய் என் கடிதம் இருந்து விடக்கூடாது என்பதில் நான் முனைப்போடு இருக்கிறேன். குவியல்களில் தேடி ஓரிரு பொருள்களை கண்டுபிடித்து அசை போட்டால் நிகழக் கால சூட்டிற்குக் கிடைத்த சிறு மழையென
இருக்கும் என்றே அந்தப் பெயரில்லாத பறவை இந்தப்பக்கம் பறக்கும் போது சொல்லிப் போனது.

பறவைகள் சொல்லும் கதைகள்
பெரும்பாலும்
பயணமாகவே இருக்கிறது…

எத்தனைச் சந்திப்புகள்! எத்தனைப் பிரிவுகள்! எல்லாமே என் எங்கிலும் இருக்கிறது. ஆனால், அனைத்தும் பெர்முடா ட்ரை ஆங்கிலுக்குள் செல்லும் எதுவும் மறைந்து விடும் போல ஒரு மறதிக்குள் மறைந்து கிடைக்கிறது. காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஒற்றை ரயிலாய். அந்தந்த வயது மட்டும் ஒற்றைப் பனைமரமாய் வழியெங்கும் தங்கி விடுகிறது. நாமும் வேண்டும் என்றே விட்டு விட்டுக் கடந்து விடுகிறோம் அல்லது குளிரான அல்லது பனிகொண்ட காற்றில் அசைகிறது சில நினைவுகளோடு. தேடல் இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது உள்ளம் கொண்ட உண்மைகள் ஒன்றில் தொலைந்து போவதை உணராமல் இருக்க முடியுமா? எனது வெளிப்பாடுகள் சில போது எனக்கான பிம்பங்களை உடைத்தெறியலாம். உடையாத குமிழிகள் உண்டா? உடைவது அழகுதானே! தனியாகச் சாதனைகள் தேவை, தேவையில்லை என்ற கோட்பாட்டுக்குள் சிக்காத ஓட்டங்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. பல சமயம் ஓடுகிறோம், சில சமயம் வேடிக்கை பார்க்கிறோம். இங்கு நடக்கும் எதுவுமே ஒரு காரணத்திற்காகத்தான். காரணங்கள் உண்டு உறங்கும் அதற்காகவே இருக்கிறது. இந்தக் கடிதத்தை எப்படி முடிக்கலாம் யோசித்துக் கொண்டே போகலாம்.

அது இது என எல்லாமே மாறிப் போனதை, யோசனைக்குள் சிக்காமல் சுண்டெலியாய் ஓடித்திரியும் ஏதோ நினைவுகள் மட்டும் யாரோ ஒரு பெயரில்லாதவன் வரைந்த ஓவியமாய் படிந்து விட்டதை, மாற்றங்கள் விரும்பாத தூரிகை ஒன்று தலை நரைக்க நரைக்கச் சொல்கிறது. சிலது ஓவியமாய் மாறுகிறது, சில ஓவியம் மாறுவதே இல்லை.

இப்படியும் முடிக்கலாம், முடிவென்று ஒன்று உண்டோ எதற்கும் எவர்க்கும் ?

கவிஜி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *