குறளின் கதிர்களாய்…(92)
–செண்பக ஜெகதீசன்
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (திருக்குறள்-85: விருந்தோம்பல்)
புதுக் கவிதையில்…
விருந்தினரை உபசரித்து
வயிறார உணவளித்து,
எஞ்சிய உணவை உண்ணும்
ஏற்றமிக்கோர்
விளைநிலத்தில்
விதை விதைக்கவேண்டியதில்லை,
விளையும் தானாய்…!
குறும்பாவில்…
மனதுடன் விருந்தினர்க்கு ஊட்டி,
மிச்சத்தை உண்ணுவோர் நிலம்,
மிகுதியாய் விளையும் விதைக்காமலே…!
மரபுக் கவிதையில்…
வந்த விருந்தை வரவேற்று
-வயிறு குளிர உணவளித்து,
வந்திடும் மீதி உணவினையே
-உண்டு மகிழ்ந்திடும் உயர்ந்தோர்தம்
சொந்த நிலத்தில் பயிரிடவே
-சென்று விதையை ஊன்றவேண்டாம்,
தந்திடும் மகசூல் தானாகவே,
-தெரிந்திடு உயர்ந்தது விருந்தோம்பலே…!
லிமரைக்கூ…
விருந்தை உபசரித்தே உண்டிடுவான் மீதி,
விருந்தோம்பும் அவனது நிலத்தில்
விதைக்காமலே விளைந்திடும் என்பது நீதி…!
கிராமிய பாணியில்…
விருந்துகுடு விருந்துகுடு
விருந்தாளிக்கு விருந்துகுடு,
வீடுவந்த விருந்தாளிக்கு
வயறுநெறய விருந்துகுடு…
விருந்தாளிக்குக் குடுத்துப்புட்டு
மிஞ்சினதத் திங்கிறவன்
நஞ்சயில வெதைக்கவேண்டாம்,
நல்லாவெளயும் தன்னாலத்தான்…
விருந்துகுடு விருந்துகுடு
விருந்தாளிக்கு விருந்துகுடு…!
