ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 29
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னை மயக்கியவள்
_______________
“நேற்று நாம் உருவக வழிபாட்டுக்கு ஊதுபத்திகளைக் கொளுத்தி உயிர்களைக் கோபப்படும் தெய்வங்களுக்குப் பலியிட்டோம். ஆனால் இன்று நாமே நமக்கு ஊதிபத்தி கொளுத்தி நமக்காகப் பலி கொடுக்கிறோம். ஏனெனில் தெய்வங்கள் எல்லாவற்றிலும் பராக்கிரமும் எழிலும் பெற்றது தனது ஆலயத்தை நமது இதயத்திலே எழுப்பியுள்ளது.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
_______________
ஓடிப் போன என் காதலி
_______________
என் காதல் கண்மணி
எப்படி இருப்பாள் ? உங்கள்
எல்லோரது இதயத்தையும்
ஈர்த்துவிடும் மாது போன்றவள்தான் !
தெய்வம் செதுக்கி யுள்ள
விநோத அழகி அவள் !
வெண்புறா போல் பணிவு
கொண்டவள் !
பாம்பு போல் உத்தி உள்ளவள் !
மயில் போல்
பீடு நடை உடையவள் !
ஓநாய் போல் கொடூரம்
உள்ளவள் !
வெள்ளை அன்னத்தைப் போல்
கவர்ச்சி கொண்டவள் !
கருமை இரவினைப் போல்
அச்சம் ஊட்டுபவள் !
கை மண்ணளவு பூமியும்
அகப்பை அளவு
கடல் நுரையும் கலக்கப் பட்ட
மடந்தை அவள் !
_______________
சிறுமியாய் இருக்கும் போதே
அறிமுகம் ஆனவள்
இந்த மாது எனக்கு !
வயல் நெடுவே நான் அவளைப்
பின் தொடர்வ துண்டு !
நகரத்தின் தெரு வழியே அவள்
நடக்கும் போது
பறக்கும் முந்தானியை நான்
பற்றிய துண்டு !
என்னிளம் பருவத்தி லேயே
இந்த மாதைத் தெரியும் !
படித்த நூல்களின் பக்க மெல்லாம்
பாவை முக நிழலைப்
பார்ப்பேன் !
நீரோடையின் சலசலப்பில்
அந்தப் பெண்ணின்
தெய்வீகக் குரலைக் கேட்டேன் !
என் ஆத்மாவின்
இரகசியங் களையும்
என்னிதய அதிருப்தி களையும்
வெளிப்படையாய் அவளிடம்
எடுத்துரைத்தேன் !
_______________