ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 31
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஏகாந்த வாழ்க்கை
_____________________
“நேற்றுவரை போலிப் போதகரையும், சூனியக்காரரையும் மதிப்புடன் போற்றினோம். இன்றோ காலம் மாறி விட்டது. நம்மையும் மாற்றி விட்டது. நாம் இப்போது சூரியனை உற்று நோக்கிக் கடலின் கானங்களைக் கேட்கிறோம். சூறாவளியைத் தவிர வேறு எதுவும் நம்மை அசைப்பதில்லை.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
_____________________
ஏகாந்த வாழ்க்கை
_____________________
ஏகாந்தக் கடலிலே
வாழ்வெனப் படுவது
ஓர் தீவு !
நம்பிக்கை தான் தீவின்
பாறைகள் !
கனவுகள் தான் தீவின்
மரங்கள் !
மலர்கள் தான் தீவின்
தனிமை சுகம் !
நீரோடைகள் தான் தீவின்
தாக எழுச்சி !
_____________________
எனது சகத் தோழனே !
உனது வாழ்வும்
ஒரு தீவுதான்
மற்ற எல்லாத் தீவுகளும்
மாநிலங் களும்
பிரிந்து போய் உள்ளன
உன் தீவை விட்டு !
உன் கடற்கரை யை விட்டு
அடுத்த தீவுக்கு
எத்தனை கப்பல் ஏகினாலும்
உன் துறைமுகத்தை
எத்தனை கப்பற்படைக் குழுவினர்
தொட்டுச் சென்றாலும்
நீ ஏகாந்தத் தீவில் தான்
நிலைத்தி ருப்பாய்
நிம்மதி யின்றித்
தலை நோவுடன்
இனிய வாழ்வுக்கு ஏங்கி !
உன் சகத் தோழர்
உன்னை அடையாளம் காணார் !
புரிந்து கொள்ளார் !
அனுதாபப் படார் !
_____________________