கண்ணீரும் புன்னகையும் – நூலறிமுகம்

0

கீதா மதிவாணன்

 index

தலைப்பே நூலின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களிடமிருந்து கண்ணீர் வெளிப்பட்ட தருணங்களையும் புன்னகை வெளிப்பட்ட தருணங்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் முகில் அவர்கள். ‘பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையைத் தேடித் தொகுப்பது என்பது பாலைவனத்தில் மினரல் வாட்டரைத் தேடி அலைவதற்கு சமம்’ என்ற வரிகளின் மூலம் இந்நூலாக்கத்துக்கான தன் சிரமங்களைத் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

முன்னுரையே நமக்கு சந்திரபாபுவைப் பற்றிய முன்னறிமுகத்தைத் தந்துவிடுகிறது. சந்திரபாபு பற்றிய இந்நூலைத் தொகுக்கும்போது தனக்கேற்பட்ட உணர்வுகளை இவ்வாறு விவரிக்கிறார் ஆசிரியர். “திங்கள்கிழமை கிடைக்கிற தகவல்களின்படி சந்திரபாபு ‘செம ஜாலி ஆளுப்பா’ என எண்ணத் தோன்றும். செவ்வாய்க்கிழமை ‘மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி’ என்று நினைப்பேன். புதன்கிழமை, யாரிடமாவது பேசிவிட்டு வரும்போது ‘அய்யோ பாவம் சந்திரபாபு’ எனப் பரிதாபப்படுவேன். வியாழக்கிழமை, வேறொரு நபருடன் பேசும்போது ‘ச்சே, சந்திரபாபு கெட்ட பையன்’ என்று மனம் நினைக்கும். வெள்ளிக்கிழமை, ‘அட, இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக்காரே’ என்று வியப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிகைகள் எதையாவது புரட்டினால், ‘என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படிச் சொல்லுவாரு’ என்று தோன்றும். ஞாயிற்றுக்கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்துவைத்து யோசிக்கும்போது, நாயகன் ஸ்டைலில் ‘சந்திரபாபு நல்லவரா? கெட்டவரா? என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.”

நூலாசிரியருக்கு ஏற்பட்ட அத்தனை உணர்வுகளும் வாசிக்கும் நமக்கும் உண்டாகும் வகையில் வெகு சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூலில். ஆசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். “சந்திரபாபு போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் வாழ்க்கை அடுத்த தலைமுறைகளுக்கும் பாடமாக இருக்கும் தகுதி பெற்றது”. வழிமொழியும் பதிப்பாசிரியரும் “இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் இவர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்தான், ஆகவே படியுங்கள்’ என்று பரிந்துரைக்கிறார்.

உண்மைதான். சந்திரபாபுவின் வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் ஒரு பாடம்தான். எப்படி வாழவேண்டும் என்பது ஒருவகை பாடம் எனில் எப்படி வாழக்கூடாது என்பது இன்னொருவகையான பாடம்தானே.

பிறப்பு வளர்ப்பு திருமணம் இறப்பு என்ற வரிசைக்கிரமப்படி அல்லாமல் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது என்பதே புத்தகத்தின் சுவாரசியம் கூட்டும் ஒரு விஷயம். முதல் அத்தியாயமே அவரது தற்கொலை முயற்சியில்தான் துவங்குகிறது. இவ்வுலக வாழ்வின் முடிவை நோக்கிய அவரது பயணமே அவரது கலையுலகப் பயணத்தின் ஆரம்பமாக அமைந்திருக்கிறது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மகனாய்ப் பிறந்து திரைத்துறையில் கால்பதிக்கத் துடித்த அந்தக் கலைஞனின் வாழ்க்கையில்தான் எவ்வளவு மேடுபள்ளங்கள்… திருப்பங்கள்… உப்பு சத்தியாக்கிரகம் செய்ததற்காக அவரது தந்தை சிறை சென்ற வேளையில் தீரர் சத்தியமூர்த்தியின் இல்லத்தில் விடப்பட்ட பதினொரு வயது பாபுவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யாரிடம் விடப்பட்டது தெரியுமா? பெருந்தலைவர் காமராஜ் அவர்களிடம்தாம்.

நாற்பத்தாறு வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்ட மகத்தான கலைஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை புத்தகத்திலிருந்து இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

நடிப்பின் மீதான மோகமும், கலையார்வமும், தொழில்பக்தியும், எதையும் தனித்துவத்துடன் செய்யவேண்டுமென்னும் தீராத ஆர்வமும் அவரை உச்ச நிலைக்குக் கொண்டுபோயின என்றால் குடிப்பழக்கமும், பெண்மோகமும், அதீத தற்பெருமையும், மற்றவர்களைப் பற்றி தன் மனத்தில் நினைப்பதை எல்லாம் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் தன்மையும் அவரை படு பாதாளத்தில் வீழ்த்தின. திருமண வாழ்வில் அவருக்கு உண்டான தோல்வியே அவரது தீவிர குடிப்பழக்கத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. அவரது திருமணவாழ்வு குறித்த செய்திகள் இதுவரை நான் கேள்விப்பட்டதிலிருந்து மாறுபட்டவையாக இருப்பதை இப்புத்தகம் வாயிலாகவே அறியமுடிந்தது.

 

பேசும் படம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது…

பெயர் – சந்திரபாபு

செய்யும் தொழில் – நடிப்பது

தெரிந்த வேறு தொழில் – செல்ஃப் ஷேவிங்

என்னைப் பற்றி நான் கொண்டிருக்கும் எண்ணம் – உலகத்திலேயே வாழும் மிகப்பெரிய மனிதன் நான், நானேதான்.

என்னைப் பற்றி எனக்கே உள்ள மாறான கருத்துகள் – நான் அழகின் அடிமை. அழகு என்னை வசியப்படுத்தி விடும். மற்றவர்கள் அழகை ரசிப்பதற்கும் நான் அழகை ரசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கற்பாறையை சிலையாக வடித்தால் பலர் ரசிப்பார்கள். நான் கற்பாறையையே ரசிப்பேன். மறைந்து கிடக்கும் இயற்கையின் அழகை நான் அதில் காண்பவன்.

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்கள் யார்? – என் வாழ்க்கையில் மூன்று பேரை நான் மறக்கமாட்டேன். ஆமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன், எனது மாமனார், ஜெமினி கணேசன் ஆகியோர்.

(அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் விசித்திரம்.)

நீங்கள் ஊரோடு ஒத்து வாழ்ந்தால் என்ன என்ற கேள்விக்கு இப்படி விடைதருகிறார்.

‘ஊரோடு ஒத்து வாழ். கேட்பதற்கு இனிமையாகதான் இருக்கிறது. என்னைவிட, அறிவில் குறைவானவர்களையே அதிக எண்ணிக்கையில் இங்கு நான் சந்திக்கிறேன். என் பார்வைக்கு அவர்கள் பைத்தியக்காரர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் பார்வைக்கு நான் பைத்தியக்காரனாகத் தெரிகிறேன். ஏதோ ஒரு சிலர்தான், அத்திப்பூவைப் போல் அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஓரளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?’

1951 முதல் 1971 வரையிலான இருபது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையின் முன்னும் பின்னும் முரண்களின் மூட்டையாகிப் போனார் சந்திரபாபு. எப்படியெனில்.. விருந்தோம்பும் பண்பால் கலையுலகத்தையே அசரவைத்த அவர்தான் பின்னாளில் ஒரு பிரியாணிக்காக அலையாய் அலைந்திருக்கிறார். ராஜா அண்ணாமலைபுரத்தில் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு காரிலேயே போகும்படியாக ஒரு பங்களா கட்டிக்கொண்டிருந்த சந்திரபாபுதான், வாடகை தரவும் வழியில்லாமல் வீட்டை அமீனா வந்து காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

சிவாஜி கணேசன், எம்ஜியார், ஜெமினி கணேசன், கண்ணதாசன் போன்ற பிரபலங்களுடன் நடிகர் சந்திரபாபு முரண்பட்ட தருணங்களை விவரிக்கும் அதே வேளை, பாலாஜி, தேங்காய் சீனிவாசன், எம் எஸ் விஸ்வநாதன் போன்றோருடன் அவருக்கிருந்த அந்நியோன்னிய நட்புறவையும் ஒருங்கே பதிவு செய்துள்ளது இப்புத்தகம்.

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையிலான நட்பு குறித்தும் பேசுகிறது இப்புத்தகம். ஜெயகாந்தன் சொல்கிறார், “பாபுவுக்கு இயற்கையாகவே நடிப்புத்திறமை, பாட்டுத்திறமை ஆகியவை எல்லோரும் விரும்பும் வகையில் அமைந்திருந்தன. அவற்றையெல்லாம் ஓர் ஊதாரியைப் போல் இந்த சினிமா உலகுக்கு வாரி இறைத்ததன் விளைவாக, அவருக்கு அதீதமான ஏற்றத்தையும், எதிர்பாராத வீழ்ச்சியையும் இந்த சினிமா உலகமே கொண்டுவந்துவிடும் என்று நான் அஞ்சினேன். எனது அச்சத்தை உரிமையோடு பலமுறை அவரிடம் கூறினேன். மிகவும் உருக்கமான நேரங்களில் அவர் திடீரென்று சிரிப்பார். அதேபோல சில நேரங்களில் அழுவார். இப்படிக் கண்களில் கண்ணீர் வருகிற அதே மனிதன், சில சமயங்களில் சட்டைக் காலரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு “I am Babu” என்று வல்லமை பேசுகிற காட்சி இன்னும் ரசமாக இருக்கும்.”

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சகோதரி என்ற திரைப்படத்தைப்போட்டுப் பார்த்த ஏவிஎம் செட்டியாருக்கு திருப்தி ஏற்படவில்லையாம். படம் எடுபடாது என்று நினைத்த அவர் படத்தை ஓடவைக்க சந்திரபாபுவை அழைத்துப் பேசியிருக்கிறார். நல்ல காமெடியை பத்து நாட்களில் படமாக்கிப் படத்துடன் சேர்த்து ஒரு கோர்வையாக்கிக் கொடு என்றாராம் செட்டியார். சந்திரபாபு ஒருநாள் யோசித்து முடிவைச் சொன்னாராம். அவரது முடிவைக் கேட்ட செட்டியார் அசந்துபோய்விட்டாராம். அப்படி என்ன சொன்னார்?

“ஏழு நாட்களில் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கித் தருகிறேன். எனக்கு லட்ச ரூபாய் தாருங்கள்” என்றாராம். முதலில் மறுத்த செட்டியார் சந்திரபாபு மீது கொண்ட நம்பிக்கையால் பிறகு ஒத்துக்கொண்டாராம். அன்றைய நாட்களில் ஒரு முழுப்படத்துக்கே முன்னணி நடிகர்கள் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபு நகைச்சுவைக் காட்சிக்காக ஒரு லட்ச ரூபாய் வாங்கியது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதாம்.

தமிழ் சினிமா உலகில் நடிப்பாகட்டும், பாடலாகட்டும், நடனமாகட்டும், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற பலரும் அறிந்திராத உச்சத்தருணங்களையும் வீழ்ச்சித் தருணங்களையும் அற்புதமாய்ப் படம்பிடித்துக்காட்டும் புத்தகம் இது.

நூலின் பெயர் – கண்ணீரும் புன்னகையும்

நூலாசிரியர் – முகில் அவர்கள்

பக்கங்கள் – 200

விலை – ரூ. 125

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

முதல் பதிப்பு டிசம்பர் 2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *