க. பாலசுப்பிரமணியன்

2b6ee445-4a50-4d1e-856e-b2dddafe42df

கருவினில்  நாரதன் தந்த  தாரக மந்திரம்

கருத்தினில் கண்களில்  கண்ணனின் சித்திரம் !

தேனூறும் சொல்லெல்லாம் திருமாலின் மந்திரம்

ஊனூறும் வினையெல்லாம் ஒட்டிவிடும் திருப்பதம் !

 

நானென்று நானென்று  நலமிழந்த தந்தை

நாரணனை  வெல்லத்துடிக்கும்  அகந்தை !

பாலகனைக் கொல்ல முயன்றான் தந்தை

பரந்தாமன் இருக்கையில் ஏது கவலை ?!

 

உள்ளறிந்த பாலகனின்  உணர்வறியாத் தந்தை

ஒருநாமம் நாரணனே என்றுணரா அகந்தை

மரணமில்லா இரணியனே தானென்ற மமதை

மாதவனுக்கு இணையாமோ மன்னனின் சிந்தை ?

 

தூணிலும் சயனம்  துரும்பிலும் சயனம் !

தூணிணைப் பிளந்தது அழகிய சிங்கம் !

ஆணவம் அழிக்க அரிதலை வந்தது

வானமும் வேதமும் வணங்கியே  நின்றது !

 

அஹோ ! பலம் அஹோபிலம் அகிலமே வியந்தது

அன்னையாய் சேயினை அணைத்திட அரங்கமே வந்தது!

ஆயிரம் ஆதவன் அணி அமைத்து ஒளிர்ந்தது !

பாயிரம் பாடிட பக்தியின் வல்லமை வென்றது !!

 

புண்ணிரண்டாய் கண்ணிரண்டும் மண்ணைதனைப் பார்த்திருக்க

விண்ணிருந்து கண்ணனவன் நெஞ்சினினிலே வந்திறங்க

காட்சியிலே கற்பனையில் அவன் மட்டும் நிறைந்திருக்க

காலமெல்லாம் நன் நெஞ்சே! கண்ணனுக்குத் தலைவணங்கு !

 

தீராத ஆசைகளைப் பகடைகள் தூண்டிவிடத்

தானிழந்து தாரமிழந்து தலைகுனிந்த பஞ்சமரின்

திரௌபதியும் தஞ்சமெனத் தலைகாத்த  தாமோதரா !

தஞ்சமென வந்திட்டேன் வஞ்சமின்று வாழ்த்திடுவாய்  !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *