மார்கழி மணாளன் 14 அஹோபிலம்
க. பாலசுப்பிரமணியன்
கருவினில் நாரதன் தந்த தாரக மந்திரம்
கருத்தினில் கண்களில் கண்ணனின் சித்திரம் !
தேனூறும் சொல்லெல்லாம் திருமாலின் மந்திரம்
ஊனூறும் வினையெல்லாம் ஒட்டிவிடும் திருப்பதம் !
நானென்று நானென்று நலமிழந்த தந்தை
நாரணனை வெல்லத்துடிக்கும் அகந்தை !
பாலகனைக் கொல்ல முயன்றான் தந்தை
பரந்தாமன் இருக்கையில் ஏது கவலை ?!
உள்ளறிந்த பாலகனின் உணர்வறியாத் தந்தை
ஒருநாமம் நாரணனே என்றுணரா அகந்தை
மரணமில்லா இரணியனே தானென்ற மமதை
மாதவனுக்கு இணையாமோ மன்னனின் சிந்தை ?
தூணிலும் சயனம் துரும்பிலும் சயனம் !
தூணிணைப் பிளந்தது அழகிய சிங்கம் !
ஆணவம் அழிக்க அரிதலை வந்தது
வானமும் வேதமும் வணங்கியே நின்றது !
அஹோ ! பலம் அஹோபிலம் அகிலமே வியந்தது
அன்னையாய் சேயினை அணைத்திட அரங்கமே வந்தது!
ஆயிரம் ஆதவன் அணி அமைத்து ஒளிர்ந்தது !
பாயிரம் பாடிட பக்தியின் வல்லமை வென்றது !!
புண்ணிரண்டாய் கண்ணிரண்டும் மண்ணைதனைப் பார்த்திருக்க
விண்ணிருந்து கண்ணனவன் நெஞ்சினினிலே வந்திறங்க
காட்சியிலே கற்பனையில் அவன் மட்டும் நிறைந்திருக்க
காலமெல்லாம் நன் நெஞ்சே! கண்ணனுக்குத் தலைவணங்கு !
தீராத ஆசைகளைப் பகடைகள் தூண்டிவிடத்
தானிழந்து தாரமிழந்து தலைகுனிந்த பஞ்சமரின்
திரௌபதியும் தஞ்சமெனத் தலைகாத்த தாமோதரா !
தஞ்சமென வந்திட்டேன் வஞ்சமின்று வாழ்த்திடுவாய் !