— பால நிவேதிதா.

“எதுக்கும் இன்னொரு டாக்டர்கிட்ட கேட்கலாமா…”, கீதாவின் குரல் கம்மி ஒலித்தது.

“ப்ச் ……பார்ப்போம் ….”, நம்பிக்கை இல்லா ரமேஷின் குரல் கீதாவை என்னவோ செய்தது.

“இன்னைக்கு கருணை இல்லத்தில் இருந்து போன் வந்தது கீதூ …”, திரும்பிப் படுத்து தூங்குவதாகப் பாவனை செய்தாள் கீதா.

ரமேஷ், கீதா தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.

ஒரு குழந்தையை தத்து எடுப்போம் என ரமேஷ் கூறிய போதும் ஏனோ கீதாவின் மனம் அதை ஏற்க மறுக்கிறது.

பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் வாசலில் தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்தாள் கீதா. அதற்குள் வந்து விட்டாளா கிருஷ்ணம்மா பாட்டி…

ஜன்னல் வழியே பார்த்த கீதா கதவை திறந்து வெளியே வந்தாள்.

அவள் செல்ல டாமி வாலை ஆட்டியபடி கீதாவிடம் பாய அதை வாஞ்சையுடன் தடவிய படியே,” என்ன பாட்டிமா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? ” என்றாள்.

“எனக்கு என்ன கண்ணு…ஒத்தக்கட்ட விடிஞ்சதும் அப்படியே நடந்துட்டேன்”….கூறிய கிருஷ்ணம்மாவை ஏறெடுத்த கீதா,

“என்ன பாட்டி கைய நல்லா கழுவ மாட்டீங்களா பாருங்க அங்க சுவர்ல உங்க கைத்தடம் அழுக்காய்……போனவாரம் தான் ஒயிட் வாஷ் பண்ணினோம்…..ப்ச். ..” எரிச்சலுடன் உள்ளே போன கீதாவை பரிதாபமாய் பார்த்த படியே மீதி வேலைகளைச் செய்ய நகர்ந்தாள் கிருஷ்ணம்மா.

ரமேஷும் கீதாவும் ஆபிசுக்கு ரெடியாகி ஹாலுக்கு வரும் போது வேலைகள் அனைத்தையும் முடித்து இருந்த கிருஷ்ணம்மா வாசலில் யாரிடமோ பேசிய படி உள்ளே பார்த்து,

“கண்ணு….அந்தியில வாரேன். ..ரேஷன் கடை சோலி இருக்கு…”, கீதாவின் ஒப்புதலை எதிர்பாராதவளாய் நடையைக் கட்டினாள்..

ஆளுக்கு ஒரு புறமாக ரமேஷும் கீதாவும் தங்கள் அலுவலுக்குப் பறந்தனர். ..

மதிய உணவு இடைவேளை.

“அப்ப தத்து எடுக்க விரும்பலைன்னு ரமேஷிடம் சொல்லி விட வேண்டியது தானே “உயிர்த் தோழி சுரேகாவின் குரல் தெளிவாய் தான் விழுந்தது கீதாவிற்கு.

” ஆமாம்டி …என்னையறியாம என்னமோ தடுக்குது என்னை. .. எப்படியும் இன்னிக்கு உறுதியா சொல்லிடுவேன்”.

வழிநெடுக இதை யோசித்தபடியே மாலை வீடு வந்து சேர்ந்தாள். ..

பக்கத்து வீட்டு சுட்டிப் பெண் ஓடி வந்து “ஆன்ட்டி, கிருஷ்ணம்மா பாட்டி வரவே இல்லை, இந்தாங்க ….எனச் சாவியை கொடுத்து ஓடியது.

ஸ்ஸ் எப்ப பார்த்தாலும் சொல்லாம லீவ் போடுவதில் இந்தப் பாட்டிக்கு ஈடு இணை வராது. .. நாளை வரட்டும் ..நல்லா நாலு வார்த்தை போட்டாதான் சரிவரும்…மனசுக்குள் திட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள். ..

அவளுக்குத் தெரியுமா நாளைய விடியலின் பயங்கரம். .

இரவு டாமியின் குரல் கீதாவின் அடிவயிற்றைப் புரட்ட… ஊளளளள….. என்னாச்சு இதுக்கு. .. அபாய மணிக்குரலாக தோண …ரமேஷை எழுப்பினாள்.

அவனுக்கும் முரணாகப் பட, இருவரும் எழுந்து வெளிவராண்டா விளக்கைப் போட்டு வாசலுக்கு வரவும் அது நடந்தது. ஆம். ..கணநேரத்தில். ..நிலநடுக்கம். …பெரிய சத்தத்துடன் தாறுமாறாய் நிலை குலைய கண்ணிமைக்கும் நேரத்தில் பூகம்பம் நடந்தேறி முடிந்தது. .

ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும்,, பெரிய பெரிய பிளவுகளும் கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

ரமேஷும் கீதாவும் டாமியை பார்க்க வெளியே வந்ததால் தடுமாற்றத்துடன் தப்பினர்.

இயற்கையின் செயல்களுக்கு தடுப்பு சுவர் ஏது ?என்ன கொடுமை ..மனித வலிகளுக்கு மருந்திடக் கடவுள் இப்படியும் வருவாரா? இல்லை இயற்கை தன் அன்பைக் காட்டும் விதமோ? நடந்தேறியது என்னமோ பயங்கரம் தான். ….

ஆயிற்று இன்றோடு பத்து நாட்களுக்கு மேல். … அனைவரும் சிரமங்களுக்கு நடுவில் இயல்புக்குத் திரும்பி கொண்டு இருந்தனர்.கீதாவும் ரமேஷும் உறவுகளுக்கு எல்லாம் தாங்கள் நன்றாக இருப்பதைத் தெரிவித்து ஓய்ந்து போனார்கள்.

தொடர் விடுப்புக்குப் பிறகு அலுவலைத் தொடரத் தீர்மானிக்கும் போது தான் கீதாவிற்கு கிருஷ்ணம்மா பாட்டி நினைவே வந்தது .

ஐயையோ கிருஷ்ணம்மா பாட்டி இருந்தது ரொம்பவும் நெருக்கடியான ஒரு பகுதியாச்சே, இந்தப் பத்து நாட்களாக எந்தத் தகவலும் இல்லையே ….ஒண்டி கட்டை என அடிக்கடி புலம்புவாளே ..என்ன ஆனாள் ?..இயற்கையோடு ஐக்கியமாகிப் போனாளா ?…எப்படி நான் அவளை மறந்தேன் ? உயிர் உடைமை என வரும் போது தன்னைக் காப்பாற்றத் தோன்றியதே தவிர வேலை பார்க்கும் கிருஷ்ணம்மாவா நினைவிற்கு வருவாள் .இருந்தாலும் இத்தனை வருடம் பழகிய ஆன்மா …

விடு விடுவென தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் கீதா, கிருஷ்ணம்மா இருப்பிடத்தை நோக்கி ……

சுக்கு நூறாய் மாறி இருந்தது அந்த இடம் ..இங்கு தானே அவள் வீடு .சுற்றும் முற்றும் பார்த்தாள் .பல இடங்களில் பருந்துகள் வட்டமிட்டபடி இருந்தது .தென்பட்ட சிலரிடம் அவ்விடத்தில் இருந்தவர்களை பற்றி விசாரித்தாள். பாதிக்கும் பேர் இறந்து போனதாகவும், பாதி பேர் மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் கோயில் மண்டபத்திலும் இருப்பதாகக் கூறினர்.

குளமாகிய கண்களுடன் கோயில் மண்டபத்தை நோக்கி தொய்ந்து நடந்தாள். அன்று சுவரில் அவள் அழுக்கு கைப் பட்டதற்குத் திட்டினேன். இன்று அந்த சுவரே இல்லை ..தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து அவளுக்கே அவமானமாய் இருந்தது. விழும் கண்ணீரைத் துடைக்க கூடத் தோன்றாமல் நடந்தவளுக்கு ,..

“சாப்பிடு கண்ணு ..என் செல்லம், ராசா…கிருஷ்ணம்மாவின் குரல் …கிருஷ்ணம்மா இருக்கிறாள்.

திரும்பி குரல் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தாள். அங்கே கிருஷ்ணம்மா தன் இடுப்பில் ஒரு குழந்தையும், இடக்கையில் ஒரு குழந்தையும் பிடித்தபடி அழுது கொண்டிருந்த மற்றொரு சிறு குழந்தைக்குத் தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டு இருந்தாள். அந்தக் குழந்தை வாங்க மறுக்க அதனைச் செல்லம் ,ராசா எனத் தாஜா பண்ணிக் கொண்டு இருந்தாள்.

திகைக்க இக்காட்சியைப் பார்த்தபடி நின்றாள் கீதா.

தற்செயலாய் இவள் பக்கம் திரும்பிய கிருஷ்ணம்மா துள்ளி ஓடி வந்தாள் ….”ஏ ..கண்ணு ..எப்டிமா இருக்க ….?இன்னிக்கி நானே வரணும்னு நினைச்சேன் தாயி ..” சொல்லும் போதே கண்ணீர் முட்டி இருந்தது .

“உங்களுக்கு ஒண்ணும் இல்லையே பாட்டி ….?”

“நான் நல்லா இருக்கேன் தாயி …இன்னும் நான் இருக்கணும்னு எழுதி இருக்கான் போல..”

“நீங்கப் பிழைத்ததே சந்தோஷம் பாட்டி ….கூறிய கீதாவின் கண்கள் கிருஷ்ணமாவிடம் இருந்த குழந்தைகளை பார்த்தது

புரிந்தவளாய் குழந்தைகளை உட்கார வைத்து விட்டு “கொஞ்சம் அப்டி வா கண்ணு ..எனச் சற்று தள்ளி வந்து குழந்தைகள் அறியாவண்ணம் …”அந்த சின்னதுக இரண்டும் எங்க தெருவுல தான் இருந்தாக. அதுங்க தாயும் தகப்பனும் போய்ட்டாக …”கைகளை வானத்தை நோக்கி காமித்த பாட்டியால் விழும் கண்ணீரை துடைக்க முடியவில்லை ..” தெய்வ புண்ணியத்துல பிள்ளைகளுக்கு ஒண்ணும் ஆகலை ….”

அவளிடம் சாப்பிட மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் காமித்து ,”இவன் யாருன்னு தெரியல கண்ணு ,அவனுக்கு சரியாப் பேசவும் வரல, இங்கன அழுதுகிட்டு நேத்துல இருந்து சுத்தி சுத்தி தேடிகிட்டு அலையறான் ….பச்சபுள்ள வயித்து பசி கூட தெரியாம தேடுது …அதான் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியாந்து ஊட்டினேன் “

காதுகள் அடைத்து கண்ணீரை விழுங்கிய கீதா, “எப்படி பாட்டி சிறு குழந்தைகளை ……கீதா முடிக்கவில்லை .

“எது யார் கைல இருக்கு கண்ணு …போன வாரம் வரைக்கும் வாழ்நாள் முழுதும் தன் தாய் தகப்பனோட வாழுற நினைப்புல தான் பிறந்திருக்கும், இப்போ அவுக இல்ல நான் பார்த்துக்குறேன் ….இதோ இவனுக்கு நேத்துவரை யாரோ, இன்னைக்கு தாயாய் ஊட்டுறேன் ..நாளைக்கு என்னமோ நடந்துட்டு போகுது ..எத்தனை யோசனையாய் இருந்தாலும் நிமிஷத்துல ஆண்டவன் தான் இருக்கேன்னு காமிக்கிறானே ..இருக்கிறவரை இந்தப் பிள்ளைகளுக்கு தாயா இருக்கேன் “……இன்னும் கிருஷ்ணம்மா சொல்லி கொண்டே போக, கீதாவிற்கு எதுவும் காதில் விழவில்லை .எத்தனை உண்மை வார்த்தைகள் பெரியவளிடமிருந்து ….

பெற்று வந்த பாசமா இது …தாயின் முகங்கள் தான் வேறு, தாய்மை எனும் குணம் ஒன்று தான் என்பது “ணங் “என்று கீதாவின் மண்டையில் பட்டது.கிருஷ்ணம்மாவின் கண்ணீர் கண்களைத் துடைத்து விட்டு வீடு வந்தாள் தெளிவாக ….

அவள் கைபேசியிலிருந்து கருணை இல்லத்திற்குப் போன் பறந்தது ..தான் வளர்க்கப் போகும் குழந்தையின் வரவுக்காக…தாயாய் காத்திருந்தாள். .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.