படக்கவிதைப் போட்டி (51)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
நடிப்பாய்…
நாட்டை யாழும் மன்னனென
நடையுடை பாவனை ஒப்பனையில்,
பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
வீட்டு ஏழ்மை நிலையினையே
வெளியே காட்ட முடிவதில்லை,
நாட்டில் பலரின் கதையிதுவே
நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!
-செண்பக ஜெகதீசன்…
தெருக்கூத்து
நிழல் திரைப்படம்
விழிகளில் நுழைந்து
நம்மை
சிறைப்படுத்தி விட்டது !
நிஜம் இங்கே
தெருவோரமாய்
கேட்பாரற்றுக் கிடக்கிறது !
கட்டை கட்டி ஆடும்
கலைஞனின் அரிதாரம்
கவர்ச்சியற்றுப் போனது !
எட்டுக்கட்டையில் பாடும்
அவனது பாடலை
ரசிக்க ஆளில்லை !
கணினி இசை
நம்மைக் கலவாடிவிட்டது !
தெருக்கூத்தை
திரைக்கூத்து
தின்றுவிட்டது !
கண்ணீர்த் துளியோடு
காவியம் படைக்கிறான்
உண்மைக் கலைஞன் .
அவனைக்
கண்டுகொள்ளாமல்
படத்தில் லயிக்கிறான்
இனறைய இளைஞன் !
திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
உலகமே ஒரு நாடக மேடை அதில்
உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை
நம் பாரம்பரியத்தின் அடையாளம்
பங்குபெற ஒருவருமில்லை தற்போது
ஒப்பில்லா கலைகள் பல காணவில்லை
கவிதையாய் அனைத்தையும் பார்த்து வளர்ந்த
அளவில்லா சிலர் கலைஞர்களாய் மாறிப்போன
சிலிர்ப்பு மட்டும் உண்மை உள்ளம் சுடுகிறது
மட்டற்ற கட்டபொம்மனும் சர்க்கரவர்த்திகளும் கெத்து
களம் காட்டியதல்ல நேரடியாக பார்த்தது போன்று
காணவில்லையே இப்போது இந்த தெருக்குகூத்து…
– க.கமலகண்ணன்
படவரி 51
தமிழர்களின் பழங்கலை.
இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
உரப்பும் மனம் குரலின் சக்தி.
வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.
வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20.2-2016.
ஆழங்களின் தொலைவில்
விட்டெரிந்த கல்லின்
பின்னோக்கிய
ஒரு யாரோவுக்குள்
மேலும் மேலும்
கிணற்று மேட்டுப்
பாதங்களாக படிந்து
காய்கிறது
முகமற்ற முகவரியற்ற
கலை ஞனின்
இரண்டாம் ஜாமப் பசி..
அல்லது
முடிக்க வேண்டிய ஆட்டத்தின்
கற்பனை…
கவிஜி
திருத்தம் : கணினி இசை
நம்மைக் களவாடிவிட்டது .