அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 56

1

டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(3), பாயார்ன், ஜெர்மனி.

முனைவர்.சுபாஷிணி

 

ஒரு சக மனிதரைத் தாக்கி வதைத்தல் என்பது வன்மம் நிறைந்த மனதிற்கு மட்டுமே கைகூடும். அப்படி அமைந்தவர்களில் சிலர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம்களில் அதிகாரிகளாகப் பணியாற்றியிருக்கின்றார்கள். அவர்களில் யோஹான் கான்ஸூஸ்டர் என்பவர் ஒருவர். இவர் டாஹாவ் முகாமில் 1933 முதல் 1939 வரை பணியில் இருந்தார். பங்கரில் வார்டனாகப் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். சிறைக்கதிகள் இவரின் மேல் மிகுந்த பயம் கொண்டிருந்தனர் எனக் குறிப்புக்கள் சொல்வதிலிருந்து கொடுமையான நடைமுறைகளை நிகழ்த்தியவராக இவர் இருந்திருப்பார் என்பதை அறியமுடிகின்றது. சிறைக்கைதிகளில் சிலரையும் இவர் கொன்றிருக்கின்றார் என்ற கூடுதல் தகவலும் இவர் பெயருடன் இணைந்திருக்கின்றது. இவர் அமெரிக்க ராணுவத்தினர் முகாம் பகுதிக்கு 1945ம் ஆண்டில் வருவதற்கு முன்னரே முகாமிலிருந்து வெளியேறிவிட்டார் என்பதோடு அவர் காணாமல் போய்விட்டார் என பெர்லின் ஆர்க்கைவின் குறிப்பு தெரிவிக்கின்றது.

as

இவரைப் போன்ற இன்னொருவர் ஜோசப் ஷோய்ஸ். இவரும் இந்த முகாமில் ஒரு சிறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். 1938 முதல் 1942 வரை இங்கே முகாமில் பணியில் இருந்திருக்கின்றார். இவரும் கொடுமையான வகையில் சிறைக்கைதிகளைச் சித்ரவதைச் செய்து கொன்றவர். இவர் அமெரிக்க ராணுவத்தினரால் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு 1946ம் ஆண்டு கொலைக்குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்குத்தண்டனை வழங்கி கொல்லப்பட்டார்.

யோஹான் கிக் என்பவர் 1937 முதல் 1945 வரை இந்த முகாமில் அரசியல் அமைப்பின் தலைவராக (Gestapo) பணியாற்றியவர். இவர் சிறைக்கைதிகளை மிக மோசமாக நடத்தியவர் என்ற குறிப்பு உள்ளது. அது மட்டுமன்று. சிறைக்கைதிகளில் பலரைக் கொன்றவர் என்ற தகவலும் கிடைக்கின்றது. மிகக் கொடூரமான நாஸி அதிகாரியாகச் செயலாற்றியிருக்கின்றார். இவர்களைப் போல இந்த முகாமில் இருந்தவர்கள் பலரது குறிப்புக்களை இந்த பங்கர் பகுதி அருங்காட்சியகத்தில் காண முடிகின்றது.

அமெரிக்க ராணுவம் இப்பகுதியைக் கைப்பற்றி சிறைக்கைதிகளை விடுவித்த பின்னர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம் அமெரிக்க ராணுவ மையமாக மாற்றப்பட்டது. இங்கே தான் நாஸி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்கள். இது ராணுவ சிறையாக சில ஆண்டுகள் செயல்பட்டது என்பதை இங்குள்ள குறிப்புக்கள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கே அரசியல் கைதிகளைத் துன்புறுத்தி கொலை செய்த இடத்திலேயே அங்கு பணியாற்றிய சில அதிகாரிகள் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு இங்கே காவலில் வைக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டனர். ” வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்” என்பதற்கு ஏற்றார் போன்ற நிலை தான் இவர்களுக்கு ஏற்பட்டது.

ஜெர்மனியில் நாடு முழுமைக்கும் நாஸி போர்குற்றங்களில் ஈடுபட்டோர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிலர் தூக்கு தண்டனை வழங்கி கொல்லப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் சிறைவாசம் மேர்கொண்டனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தப்பி ஓடி விட்டனர். எங்கே இருக்கின்றார்கள் என்ற விபரமே அறியாத வகையில் சில கேஸ்கள் இன்னமும் முடியாமலேயே இருக்கின்றன.

as1

கைதிகள் தங்கியிருந்த அறையில்

1942ம் ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் மட்டும், அதாவது 5 மாதங்களில், சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 109,861. இவர்களில் 70,610 பேர் இறந்து போனவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் 4711 பேர். கொல்லப்பட்டவர்கல்ள் 9267. இதில் இறந்து போனவர்கள் என்போர் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தவர் என்றும் கொல்லப்பட்டவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு உடன் உயிர் பறிக்கப்பட்டவர்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மிக அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்பட்டதால் அவர்களை எறிக்க பயன்படுத்தும் வகையில் முகாம்களின் அருகிலேயே பிண எரிப்பு ஆலைகளையும் நாஸி அரசு கட்டியது.

as2

பிண எரிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சவக்கிடங்கு

1942 முதல் நாஸி அரசு மிக அதிகமான அளவில் அரசியல் கைதிகளைப் பிடித்து சிரை வைத்து சித்ரவதைச் செய்யும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. நாஸி அரசு என்பது இப்போதைய ஜெர்மனி என்பதைக் கடந்து பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா, லித்துவானியா, போலந்து, நெதர்லாந்து என்ற வகையில் விரிந்த ஒரு நிலப்பகுதியாக மாறி இருந்தத காலகட்டம் அது. ஆக டாஹாவ் சித்ரவதை முகாம் போல இந்த ஏனைய நாடுகளிலும் சித்ரவதை முகாம்கள் உருவாக்கப்பட்டு யூதர்களும் நாஸி அரசை விமர்சிக்கும் மக்களும் பிடித்து சிறைவைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளோடு மேலும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது 1944ம் ஆண்டு நவம்பர் மாதம் பரவிய தொற்றுநோய். கொத்து கொத்தாக சிறைக்கைதிகளில் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அவர்களின் சடலங்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போய் சுடலையில் எரித்து முடித்தனர் முகாம் பணியாளர்கள். அது போல பல சிறைக்கைதிகள் காசநோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களை 20 பேர் ஒரு குழு என்ற வகையில் பாதிக்கப்பட்டோரை விஷ மருந்து ஊசி போட்டு கொன்றிருக்கின்றனர்.

as3

இறந்த கைதிகளின் சடலங்கள்

சித்ரவதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் பல்வகை தொழில்களைச் செய்ய ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களில் உடல் நிலை மிக மோசமாக ஆனவர்களை மருந்து கொடுத்து பாதுகாத்து காப்பாற்ற கண்காணிப்பாளர்கள் விரும்புவதில்லை. அவர்களைக் கொடுமையான வகைகளில் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்துவது போன்ற பயங்கரவாத செயல்களிலும் நாஸி அரசு ஈடுபட்டது. எப்படி முயல், எலி, நாய், குரங்கு போன்ற விலங்குகளுக்கு பல வகை மருந்துகளைக் கொடுத்து சோதனைச் செய்தார்களோ அதே போல இந்த கால கட்டத்தில் அரசியல் கைதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இவ்வகைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை அறியும் போது மனம் அதிர்ச்சியில் உறைந்து போகின்றது. இந்த முகாம் இப்படி நிகழ்த்தப்பட்ட சோதனைகளைப் பற்றியும் எல்லா தகவல்களையும் வழங்கியிருப்பதை நினைக்கும் போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

இப்படி கொடூரங்களின் இருப்பிடமாக 12 ஆண்டுகாலம் இந்த சித்ரவதைமுகாம் செயல்பட்டிருக்கின்றது. நாஸி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் எல்லா முகாம்களிலும் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஜெர்மனி படிப்படியாக பல அரசியல் மாற்றங்களை 109ம் நூற்றாண்டில் சந்தித்தது. நாஸி அரசு மறைந்தாலும் இன்றளவும் நாஸி கொள்கை முற்றிலுமாக ஜெர்மனி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் இது இயங்குகின்றது என்பதை பொது மக்கள் அறிவர். அரசு மிகக் கடுமையான சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு தீவிரவாதிகளைக் கைது செய்வதும் நடக்கின்றது.

எனது அனுபவத்தில் கடந்த 18 ஆண்டுகளில் கிழக்கு ஜெர்மனியில் இயங்கும் சில நாஸி கொள்கை சார்பு அமைப்புக்கள் மேற்கொண்ட சில வன்முறை சம்பவங்களைப் பற்றி ஊடகங்களின் வழி கேள்விப்பட்டிருக்கின்றேன். அரசின் தீவிரக் கண்காணிப்பில் இந்த அமைப்புக்கள் இருக்கின்றன.

இன்று டாஹாவ் சித்ரவதை முகாம் சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் வரலாற்றை அவர்களுக்கு பாடமாகப் புகட்டும் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கின்றது. தாம் யூதர்களுக்கு இழைத்த கொடுமையை சான்றுகளோடும் அறிக்கைகளோடும், புகைப்படங்களோடும் ஜெர்மானிய அரசு இங்கே விரிவாக வெளியிட்டுள்ளது.

as4

நினைவகத்தின் வாசலில்

ஜெர்மனிக்கு வருபவர்கள் தவறாது பார்க்க வேண்டிய அருங்காட்சியகங்களில் இதனையே முதன்மை இடத்தில் வைக்க வேண்டும் என தயங்காது பரிந்துரைப்பேன்.

அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அனேகமாக நாம் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் நாடு ஒன்றிற்குத்தான் செல்லவிருக்கின்றோம். எதுவாக இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்!!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 56

  1. பயங்கரமான வதை முகாம். இதை அருங்காட்சியகமாக மாற்றியிருப்பது நன்று. வரலாற்றுக்குள் புகுந்த வந்த உணர்வு. சுபாவின் பதிவுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.