நான் அறிந்த சிலம்பு – 197
– மலர்சபா.
மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை
உள்வரி வாழ்த்து
பூவை நிலை
கோர்க்கப்படாத பொதிய மலையின்
ஆரமான சந்தனமும்,
கோர்க்கப்பட்ட கொற்கைக் கடலின்
ஆரமான முத்தும்,
தேவர் தலைவனாகிய
இந்திரனின் பூண் ஆரமும்,
இம்மூன்றும்
பாண்டியனின் மார்பில் திகழ்கின்றன.
இங்ஙனம்
இந்திரனின் ஆரம் அணிந்த பாண்டியன்
வளம் மிக்க துவாரகையில்
ஆநிரை மேய்த்துக் குருத்த மரத்தை முறித்த
கண்ணனே ஆவான்!
என்று அனைவரும் கூறுவர்.
பொன் போன்ற இமய மலையின் உச்சியில்
வெற்றிக்கு அறிகுறியாய்த்
தன் புலிக்கொடியை நாட்டி
இப்பகுதியில் உள்ள நிலங்களை எல்லாம்
ஆட்சி புரிந்தவன்,
மதிலையுடைய புகார் நகரத்தில் வாழும்
சோழ மன்னன் ஆவான்.
அம்மன்னனை,
போர் செய்யும் அழகிய
சக்கரப் படையை உடையத் திருமால் ஆவான்!
என்று அனைவரும் கூறுவர்.
கடலின் உள்ளே புகுந்து சென்று
அங்கே,
மூத்தல் என்றும் அடையாத் தன்மை கொண்ட
கடம்ப மரத்தினை வெட்டிச் சாய்த்தவன்,
வளம் மிக்க வஞ்சி மாநகரில் வாழும்
சேர மன்னன் ஆவான்.
அவன் மலையை ஒத்த தோளை உடைய
திருமால் ஆவான்!
என்று அனைவரும் கூறுவர்.
(கண்ணனே சேரனாக, சோழனாக, பாண்டியனாகக் கோலம் வரித்து
தமிழகத்தை ஆண்டான் எனும் உள்வரி வாழ்த்து இது.)
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
படத்துக்கு நன்றி: கூகுள்

