கிளாரா ஜெட்கினின் கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்

கிளாரா ஜெட்கின்: பெண்ணுரிமைப் போராளி; 1910ல் கோபன்ஹெகன் நகரில் கூட்டப்பட்ட உலக மாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில், மார்ச் 8 உலக பெண்கள் தினமாக அனுசரிப்பது என்ற முடிவை எடுத்துக் கொடுத்த வீராங்கனை
உலக பெண்கள் தின வாழ்த்துக்களுடன்
எஸ் வி வேணுகோபாலன்
சமத்துவ ஒப்பனை அல்லது
சமத்துவ பாவனை அல்லது
சமத்துவம் அசாத்தியம் எனும் சவால் அல்லது
சமத்துவம் எதற்கு எனும் துருவல் அல்லது
சமத்துவப் பேச்சே பிரச்சனைதான் எனும் புகார்……
இன்னபிற எசப்பாட்டுக்கெல்லாம் சளைக்காது
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது
சர்வதேச மகளிர் தின கீதம்
*கிளாரா ஜெட்கின் நினைவைக் கொண்டாடும்
கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்
புதுப்பித்துக் கொள்கின்றனர்
புதிய சமூகத்திற்கான கருவிகளை !
புன்னகையால் புறந்தள்ளுகின்றனர்
நிலைகுலைந்து போவோரது சாப மொழியை !
இல்லத்தில், பொதுவெளியில், பணியிடத்தில்
அடக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் பட்ட
அவலங்களுக்கு எதிரான தீர்மானமான குரல்களோடு
ஏந்திக் கொள்கின்றனர்
பாலின சமத்துவத்தின் பல்லக்கை
உன்னதப் பெருமிதம் சூடும் தோள்களோடும்
உற்சாகத் தாளமிடும் கால்களோடும் !
**********************