அந்தாதியில் ‘’கண்ணா கனியவை’’ நாற்பது எழுதினேன்….அவைகளில் ஆறு….

0ca30e0c-ebe3-4c91-a66b-ce77659b985e
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)

போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
தடியாகும் பட்டினத் தார்….(2)

தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)

குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
சாகாத அவ்வுணர்வே சத்து….(4)

சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)

உறவும் பகையும் துறவும் தெளிவும்
வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
பெறுவீடு காணப் பயன்….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *