என்னைத் தேடிய நான்
இரா.ச.இமலாதித்தன்
நொடிகளைக் கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது…
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது…
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர்ரகசியமும் தோன்றி மறைகிறது…
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது…
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தப்படுத்தியது…
முடிவிலியாய் நீண்டுகொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு…!