பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்?
— தேமொழி
என் வாசல் தேடியே வந்தது வசந்தம்
வண்ண நறுமலர்கள் அழகாய்ப் பூத்தன
எண்ணம் போல் எங்கும் வண்ணமயம்
இளங்கதிர் கண்டு மனதிலோ இன்பமயம்
தோட்டத்துக் கற்பாதையின் ஓரம்
வரிசையாக நீலவண்ண மலர்ச்சரம்
கொல்லைப்புறத்து மதில் சுவரோரம்
மஞ்சள் வண்ணப் பூக்களின் கூட்டம்
துணையாகவே வந்திறங்கின
இணையான வெண்புறாக்கள்
குதிகால் உயர்த்தி குதிநடைபோடும்
நடைமேடை உடையலங்கார
நங்கைகளின் நடைபோலவே
முன்னும் பின்னும் நடந்தன
கல்பாவிய பாதையில் ஒயிலுடன்
கண்ணைக் கவர்ந்திடும் எழிலுடன்
மலர்ந்திருந்த மலர்களை நோக்கின
திரும்பி என்னை ஒருமுறை நோக்கின
மலர்களை மறுமுறையும் நோக்கின
தங்களுக்குள் பார்வை பரிமாறிக்கொண்டன
புரியவில்லை அப்பறவைகளின் பார்வைமொழி
பிடிக்கவில்லையோ இப்பூக்களின் நிறம்
மதிக்கவில்லை அவை என் மனக்கவலையை
தங்கவுமில்லை என் தோட்டத்தில் புறாக்கள்
சிங்காரமாக மதில்மேல் வந்திறங்கியது
சிட்டுக்குருவிகளின் கூட்டமொன்று
சிட்டுகள் உற்சாகமாக மேலும் கீழும் பறந்தன
மதிலோர மஞ்சள் பூக்களை ஆராய்ந்தன
மதிலில் அமர்ந்து கலந்துரையாடின
பிடிக்கவில்லையோ இப்பூக்களின் நிறம்
மதிக்கவில்லை அவையும் என் மனக்கவலையை
தங்கவுமில்லை என் தோட்டத்தில் சிட்டுகள்
என்ன செய்யவேண்டும் நான் அடுத்து,
பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்
பறவைகள் என் தோட்டம் தேடிவர
அடுத்து நான் என்னதான் செய்யவேண்டும்
குழப்பத்துடன் உலவினேன் நடைபாதையில்
என் செல்லப் பூனைகள் நான்கும்
என்காலை உராய்ந்தவாறே கவலையைப்
பகிர்ந்துகொண்டு என்னுடன் நடைபோட்டன