காலையைக் கொஞ்சம் கையில் பிடித்து…
க.பாலசுப்பிரமணியன்
வாளி நீரை வாசலில் தெளிச்சு
வாசனை மண்ணை முகர்ந்த காலம்
எங்கோ போச்சு !
மாடிவீட்டில் முடங்கிப்போய்
ஒண்டிக்குடித்தனம் உலகத்தில்
வழி முறையாச்சு !
கோலப்பொடியை காலையில் தின்ன
கூடிய எரும்புக் கூட்டம்
சுவற்றில் ஏறி சுண்ணாம்பு தின்பது
வெளிப்படை ஆச்சு !
கூவிய சேவல் கூண்டில் நின்று
உயிரியல் பூங்காவில்
இன்னொறு உயிரினமாச்சு !
“டிஜிட்டல்” வாழ்வில்
கொக்கரக்கோ குரலும்
“டீவீடீயில்” “டிவிடெண்ட்” தேடுது !
கன்றும் மாடும் பாலினைக் கறக்க
தெருவில் வழிந்த பாலோ
தெரியாமல் போச்சு !
உடலுக்கு உரமாய்
“யூரியா” பாலும்
உரையினில் உள்ளே வந்தாச்சு!
வீட்டில் இடமின்றி வாத்தியம் எல்லாம்
பரணில் ஏறிப் பாடல்கள் பாட
சுரங்கள் போச்சு !
சூரிய ஒளியை சொடுக்கிப் பிடித்து
சுண்ணாம்புச் சுவரில்
சுடராய் வைத்தாச்சு !
கரியை ஏந்திய காற்றை
கதவுக்கு வெளியே
காத்திட வைத்தாச்சு !
மல்லிகை மணத்தை தலையில் ஏந்திய
மங்கையர் காதலில் மயங்கிய உள்ளம்
கனவுக் காதலில் கதைகள் சொல்லுது !
மண்ணின் மைந்தா..
மண்ணை மறந்தாய் ..
மறந்து போன காலையைக் கொஞ்சம்
கையில் பிடித்து கதவைத் தட்டு!