காலையைக் கொஞ்சம் கையில் பிடித்து…

0

க.பாலசுப்பிரமணியன்

 

வாளி நீரை வாசலில் தெளிச்சு

வாசனை மண்ணை முகர்ந்த காலம்

எங்கோ போச்சு !

மாடிவீட்டில் முடங்கிப்போய்

ஒண்டிக்குடித்தனம் உலகத்தில்

வழி முறையாச்சு !

 

கோலப்பொடியை காலையில் தின்ன

கூடிய எரும்புக் கூட்டம்

சுவற்றில் ஏறி சுண்ணாம்பு தின்பது

வெளிப்படை ஆச்சு !

கூவிய சேவல்  கூண்டில் நின்று

உயிரியல் பூங்காவில்

இன்னொறு உயிரினமாச்சு !

“டிஜிட்டல்” வாழ்வில்

கொக்கரக்கோ குரலும்

“டீவீடீயில்” “டிவிடெண்ட்” தேடுது !

 

கன்றும் மாடும் பாலினைக் கறக்க

தெருவில் வழிந்த பாலோ

தெரியாமல் போச்சு !

உடலுக்கு உரமாய்

“யூரியா” பாலும்

உரையினில் உள்ளே வந்தாச்சு!

 

வீட்டில் இடமின்றி வாத்தியம் எல்லாம்

பரணில் ஏறிப்  பாடல்கள் பாட

சுரங்கள் போச்சு !

சூரிய ஒளியை சொடுக்கிப் பிடித்து

சுண்ணாம்புச் சுவரில்

சுடராய் வைத்தாச்சு !

கரியை ஏந்திய காற்றை

கதவுக்கு வெளியே

காத்திட வைத்தாச்சு !

 

மல்லிகை மணத்தை தலையில் ஏந்திய

மங்கையர் காதலில் மயங்கிய உள்ளம்

கனவுக் காதலில் கதைகள் சொல்லுது !

மண்ணின் மைந்தா..

மண்ணை மறந்தாய் ..

 

மறந்து போன காலையைக் கொஞ்சம்

கையில் பிடித்து கதவைத் தட்டு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.