உன்னையறிந்தால் …….. (49)
நிர்மலா ராகவன்
நிறைய நண்பர்களா!
கேள்வி: ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பது நல்லதுதானே?
விளக்கம்: எண்ணிக்கையைவிட, அந்த நண்பர்கள் எவ்வளவு தூரம் நமக்கு ஏற்றவர்கள் என்பதுதான் முக்கியம்.
நாம் பலருக்கும் உதவி புரிந்துகொண்டே இருந்தால், நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால், எல்லாரும் நமக்கு நன்மைதான் புரிவார்களா? யோசிப்போம்.
நண்பர்களுக்குள் நேர்மையும், நம்பிக்கையும் அவசியம். எதிரே இருப்பவர் தன்னைப்பற்றி என்ன நினைத்துவிடுவாரோ என்ற கலக்கம் இல்லாது, மனதின் ஆழத்திலிருப்பதை ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தால், அவர் நல்ல நண்பர். அவர் நம் வெற்றியில் பெருமை கொண்டு, தாமே எதையோ சாதித்துவிட்டதைப் போன்று மகிழ்பவர். நாம் மனதைவிட்டு ஏதாவது சொல்லும்போது அநாவசியமாக இடைமறிக்காது, கவனமாகக் கேட்பவர். நம்மிடம் இருக்கும் பலவீனங்களைப் பெரிதுபடுத்தாது, அவைகளுடன் நம்மை ஏற்பவர்.
நம்மிடத்தில் இருக்கும் குணங்களே இன்னொருவருக்கும் இருப்பதைக் கண்டபின் ஏற்படுவதே உண்மையான நட்பு. இரு தரப்பினரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
பலரும் தாம் கவனிக்கப்பட ஒரு நல்ல வாய்ப்பு நட்பின்மூலம்தான் என்று கருதும் காரியவாதிகளாக இருக்கிறார்கள்.
ஒருவர் பணமோ, புகழோ அடைந்துவிட்டால் அவரைப் புகழ்ந்து பேசியும், பரிசுப்பொருட்கள் அளித்தும், அடிக்கடி தொடர்புகொண்டும் அவர்களை நெருங்கிக் கொள்வார்கள். அதன்பின், `இன்னார் என்னுடைய நண்பர்!’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமையாகப் பேசுபவார்கள்.
போனால் போகிறது என்று இதையெல்லாம் அலட்சியம் செய்துவிடலாம். ஆனால், கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கேற்றபடி நம்மை வளைக்க முயலுவார்கள். சுருங்கச் சொன்னால், இத்தகையவர் முதலில் நம் பின்னாலேயே வந்து, பின்னர் அவர்களை நாம் பின்தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
மனிதன் ஒரு தீவில்லை!’ (MAN IS NOT AN ISLAND) என்று சொல்வதுண்டு. குழந்தைப்பருவத்திலிருந்தே நண்பர்களை நாடும் குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால், நமக்கு உண்மையானவர்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் புரிவதில்லை.
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், `இன்றும் என் சிநேகிதன் என்னுடன் சிநேகமாக இருப்பானோ, என்னவோ!’ (Will he ‘friend’ me today?) என்று பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுமுன் தாயிடம் சொல்லிக் கவலைப்படுவர்! தமக்குத் தெரிந்த வகையில், மிட்டாய், ரப்பர், சிறிய விளையாட்டுச் சாமான்கள் என்று பரிசுகள் கொடுத்து, பிறரைத் தம் வசப்படுத்த முயற்சிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். இருந்தாலும், உடன் படிப்பவர்களைக் கண்டு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதை அவர்களால் தவிர்க்க இயலாது.
கதை: முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கண்ணனிடம் அவனுடன் படிக்கும் மாணவிகள் பாடங்களில் சந்தேகம் கேட்டு வருவது வழக்கம். அவன் அவர்களை இழிவாக நடத்தவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.
அவனுடைய நண்பர்களுக்கோ அவன் பலருக்கும் பிடித்தவனாக ஆகிவிட்டானே என்ற வயிற்றெரிச்சல். அதை வேறு விதமாகக் காட்டிக்கொண்டார்கள். `உனக்கு GIRL FRIEND இருக்கிறாள், டோய்!’ என்று கேலி செய்ய, அவமானம் தாங்காது, கண்ணனுக்கு ஒரே அழுகை! அந்த வயதில் இது பெருமைக்குரிய சமாசாரம் இல்லை.
சிறு பெண்களும் இப்படித்தான். மலேசியாவில் காலை ஏழரை மணிக்கே பள்ளிக்கூடம் ஆரம்பமாகிவிடும் என்ற நிலையில், எல்லாப் பெண்களுக்குமே அவர்கள் விருப்பை அலட்சியம் செய்து, தலைமயிரைக் குட்டையாகத்தான் வெட்டி வைத்திருப்பார்கள் தாய்மார்கள்.
இப்பெண்கள் நீண்ட பின்னலைக் கொண்ட ஒரு சிறுமியிடம், `உனக்குத் தலையில் பேன் இருப்பதால்தான் முடி இப்படி வளருகிறது!’ என்று கேலி செய்வதன்மூலம் அந்த வருத்தத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.
`என் ஃப்ரெண்ட்ஸ் கேலி செய்கிறார்கள்!’ என்று எதற்காவது ஒரு குழந்தை தாயிடம் முறையிடும்போது, `இவர்கள் உன் நண்பர்களே இல்லை!’ என்று அடித்துச் சொல்லலாம். அச்சமயத்தில் குழந்தையிடம் இருக்கும் சிறப்பை விளக்குவது அவனுக்குத் தெம்பை ஊட்டுவது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாது பழகுவதும், உதவி செய்வதும்தான் உண்மையான நட்பு.
கதை: என் மகன் அகால மரணம் அடைந்ததும், என் மனக்குமுறல்களை அனுதினமும் கேட்க என்னுடன் பணிபுரிந்த ஒரு சீன மாது நேரம் ஒதுக்கினாள். பேசும்போது நான் அழுதால் அவளுக்கும் கண்ணீர் வந்தது. நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டவளிடம் எனக்கு ஆழமான நட்பு ஏற்பட்டது.
இப்படி சில மாதங்கள் கழிந்தபின், என்னை அவளுடைய மதத்திற்கு மாற்ற பெரும் முயற்சி எடுத்துக்கொண்டாள். `என் மதம் மாறினால், என் மகன் திரும்பக் கிடைத்துவிடுவானா?’ என்று நான் மறுத்துவிட, அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்குப்பின் நான் பேச முயன்றால், சிடுசிடுப்பாள். என் மனம் அமைதியடைய அவள் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால், அந்த நட்பிற்கு இப்படி ஒரு விலை நிர்ணயிக்க வேண்டுமா?
அதன்பின் அவள் மாற்றலாகிப் போய்விட்டாள். என்றாவது சந்தித்துக்கொண்டபோது, பழைய நெருக்கமோ, அந்த நட்பில் விளைந்த மகிழ்வோ இருக்கவில்லை என்பது வருத்தமான சமாசாரம். அவளைப் பொறுத்தவரையில், நான் அவளுக்குத் தோல்வியைத் தந்தவள்.
உண்மையான நண்பர்கள் நிழலைப்போல நம்மைத் தொடர வேண்டுவதில்லை. என்றாவது சந்தித்துக்கொண்டாலும், முகமன் இல்லாமல் உரையாடலை ஆரம்பிக்க முடியும். நாம் சொல்லவந்ததைப் புரிந்துகொள்வார் நண்பர். அவ்வப்போது ஏற்படும் மௌனத்திலும் ஓர் அலாதி அமைதி நிலவும்.
நல்ல நண்பன் நம்மிடம் மறைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர வேண்டாமா! அதைவிட்டு, `நான் உன் நண்பன் என்றால், நான் சொல்வதை நீ அப்படியே ஏற்காமல் மறுத்துப் பேசுவாயா?’ என்று ஆரம்பித்தால், BLACKMAIL செய்கிறார் என்று அர்த்தம். இந்த வசனத்தால்தான் பல இளவயதினர் மது அருந்துதல், போதைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
வேறு சிலர், `இவன் நல்லவன்தான். சரியான சகவாசம் இல்லாததால் கெட்டுப்போய்விட்டான். நான் திருத்தி விடுவேன்!’ என்று நம்புகிறார்கள். பிறகென்ன! பன்றியுடன் கன்றும் கெட்ட கதைதான். நம்மால் பிறரை நல்வழிப்படுத்துவதைவிட, அவர்களால் நாம் கெடுவது எளிது. எல்லாரும் மகாத்மா ஆகிவிட முடியாது. இதற்குத்தான், `துஷ்டரைக் கண்டால் தூர விலகு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக, மனிதன் மாறுதலை விரும்புவதில்லை. (THE ONLY ONE WHO LIKES A CHANGE IS A WET BABY!). ஏனெனில், புதிய இடத்தில் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களோ என்ற கலக்கம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு — அது பள்ளியோ, அலுவலகமோ — மாறிப்போகும் நிலை வரும்போது, நம்மை அதிகமாக வெளிக்காட்டாது இருப்பது அவசியம். முதல் சில நாட்கள் குறைந்த அளவில் பேசுவது நல்லது. பிறர் நம்மை எடைபோடக் காத்திருப்பார்கள். அப்போது நம்மை வீழ்த்திவிடுவது எளிது. வலுவில் வந்து நட்பு கொள்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
உடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல. புதிதாக ஒரு அலுவலகத்தில் பதவியேற்ற மேலதிகாரிகூடத் தன் கீழ் உத்தியோகம் பார்க்கும் ஒருவருடன் மிகுந்த தோழமையுடன் பழக முயற்சிப்பார். அதற்கும் ஏதாவது உட்காரணம் இருக்கும். அந்த அலுவலகத்தில் இருக்கும் பிறரைப்பற்றி அறிய இதைவிட எளிய சந்தர்ப்பம் கிடைக்குமா, என்ன! ஆனால், சற்று காலை ஊன்றிக்கொண்டதும், நண்பராக இருந்தவர் மாறிப்போவார். அதிகாரத்தைச் செலுத்தி, நம் மனதை நோகடிப்பார்.
மேலே கூறி இருப்பதெல்லாம் கணவன் மனைவியருக்கும் பொருந்தும். ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், தம்பதியருக்குள் தோழமையும், அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையும் எப்படிக் கிடைக்கும்? (ஆனால், எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்வதால் பல தம்பதியருக்குள் விரிசல் விழுந்திருக்கிறது. பத்திரம்!)
தொடருவோம்