மீனாட்சி பாலகணேஷ்

சதுரானனனைச் சிறையிட்ட சதுரன்

மாலை மயங்கி இரவு வந்துற்றது. கதிரவன் மேற்குத்திசையில் மலையின்பின் மறைந்தும்விட்டான். ஆகாயவீதியில் சின்னஞ்சிறு முல்லையரும்புகள் கொடிகளில் மலர்வதனைப்போல் விண்மீன்கள் மின்னிமின்னி முகிழ்த்தன. முழுநிலவு கதிரவனிடத்திலிருந்து தான் இரந்துபெற்ற ஒளியால் மஞ்சள்நிற மதியமலராகத் தானும் பூத்து நிற்கின்றது. சூரியனிடமிருந்து காந்தி பெற்ற சூரியகாந்திப் பூப்போல காணப்படுகிறது எனலாமா? இவற்றினாலெல்லாம் உவகைகொண்ட இயற்கையன்னை தன் இளம் குழந்தையான தென்றலை மலர்களின் நறுமணத்தை ஏந்தி, எங்கணும் ‘குறுகுறு’ நடையிட்டு உலவிவரச் செய்கின்றாள்!

இதனால் முன்னிரவு தொடங்கியமை அனைவராலும் உணரப்படுகின்றது! உலகமே ஒடுங்கி அமைதியாகத் துயில் கொள்ளும் பொழுது இதுவாம். இன்னும் முதிர்ச்சியடையாத பறவைக்குஞ்சுகள், பகற்பொழுதெல்லாம் ஓடியாடித் தாய்ப்பறவைகள் கொண்டுவந்த உணவினை ஆவலாக வாய்திறந்து திறந்து உண்ணுகின்றன. தாய்ப்பறவைகள் இரவு துயில்கொள்வதற்காக முடங்கும் கூடுகளில் இவ்விளம் பார்ப்புகளும் தாய்ப்பறவைகளுடைய சிறகுகளினடியில் பாதுகாப்பாகச் சேர்ந்து ஒடுங்குகின்றனவாம். பகல்பொழுது தோறும் இன்னிசை முழங்கும் வரிகளையுடைய வண்டுகளும் துயிலச்சென்றன- எங்கு தெரியுமா? தாமரைமலர்களின் கதவுகளை அடைத்துக்கொண்டு அவை உறங்கச்சென்றனவாம்- (முளரிக் கதவமடைத்து வரிவண்டும் துயின்றன)! உலகமே இரவுப்பாடகனின் தாலாட்டிற்குச் செவிசாய்த்து மயங்கி உறங்கலாயிற்று.

மாலை வந்துற்றதென்று ‘எதிராசர்களெ’ன அறியப்படும் முனிபுங்கவர்கள் அந்திநேரத்திற்கான மந்திரங்களையோதி தாம் செய்யவேண்டிய அந்திக்கடன்களையும் வழிபாடுகளையும் இயற்றினர். பகலும் இரவும் சந்திக்கும் மாலைப்பொழுது ‘சந்தி’ என ஆன்றோர்களால் கூறப்பட்டது; அந்த (சந்தி)அந்திப்பொழுதினில் வேதமந்திரங்களை ஓதி முனிவர்கள் இறையை வழிபட்டனர். இதனை சந்திக்கும்நேரத்து வழிபாடு- ‘சந்தியாவந்தனம்1’ எனப் பெரிதும் போற்றுவர். அதுமட்டுமல்லாது, அம்முனிவோர், இறைவனையே தமது இதயக்கமலமாம் உள்ளத்திலும் இருத்திச் சிந்தித்தவாறே கண்ணிமைகளை மூடி உடலால் செய்யத்தக்க நடவடிக்கைகளை ஒடுக்கி, துயிலத்துவங்கினர்.

இந்த முருகன். ஆற்றல்மிக்கவன் எனக் கருதப்பட்ட பிரமனையே பிரணவ மந்திரத்தின் பொருளை அவன் அறிந்திராமையால், சிறையிலிட்டான். ஆகவே அவன் சதுரானனுக்கும் சதுரனாகின்றான். இந்த எட்டிக்குடிவாழ் முருகன் உறங்காமல் விழித்தபடிக்குத் தொட்டிலில் கிடக்கிறான். அவளை உறங்குமாறு வேண்டித் தாலாட்டுக்கூறுகின்றாள் அன்னை என்கிறார் புலவர்.

யாரிந்தப் புலவர் பெருமகனார்? இவர் தாம் கோவைக் கவியரசு நடேச கவுண்டர். அவர் இயற்றியது சொல்நயமும் பொருள்நயமும் அணிநலமும் மிகுந்த எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழாகும். அதிலமைந்த ஒரு தாலப்பருவத்துப் பாடலிதுவாம்.

ராகம்- நீலாம்பரி:

கதிரோன் குடபால் மலைமறைந்தான்
ககனத் தடத்திலுடு வரும்பின
கதிர்மா மதிய மலர்பூத்துக்
கமழ்பூந் தென்றலுல விடுமால்
முதிரா விளம்பார் பினந்தாயர்
முடங்குஞ் சிறையி லொடுங்கினபூ
முளரிக் கதவ மடைத்து
வரிமுழங்கும் வண்டுந்துயின்ற னவால்
எதிரா சர்களந்தியின் மறைக
ளியம்பிக் கடன்க ளியற்றியபின்
இதயக் கமலத் துணையிருந்தி
இமைகள் பொருந்தி யொடுங்கினர்காண்
சதுரா னனனைச் சிறையிட்ட
சதுரா தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
தலைவா தாலோ தாலேலோ
(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

அழகான சித்திரம்போன்ற இயற்கை வருணனைகள். தாமரை கூம்புவதையும் வண்டின் இயக்கம் நிற்பதையும் அவை உறக்கத்திலாழ்வதெனக்கூறி அழகுறப் புனையப்பெற்ற பாடல்வரிகள் உள்ளத்தில் களிப்பை மிகுவிக்கின்றன. பறவைப்பார்ப்புகள் தாயின் சிறகிலொடுங்கி உறங்குவதை நாம் மனக்கண்ணில் கண்டே இன்புறலாம்! ‘முளரிக் கதவமடைத்து வண்டுகளும் உறங்குகின்றன’ என்பதும் மிக நயமான மிகைப்படுத்தப்படாத சொற்பிரயோகம். இவ்வாறு பிள்ளைத்தமிழ் பாடும் இக்கவிஞர்களை வித்தாரகவி என அழைப்பது முற்றிலும் பொருத்தமானதே!

‘மலர்ந்து மலராத பாதிமலர்போல வளரும் விழிவண்ணமே’ எனப்பாடிய கவிஞரும் இவர்களில் சேர்த்திதானல்லவா?

c47b71c7-9b48-4902-8b13-1a8b7b7983fe
(1இந்துக்களில் ஒரு சாரார் ஒருநாளில் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார்கள்; மந்திர உச்சாடனம், பிராணாயாமம், மனதை ஒருமைப்படுத்தும் தியானம் ஆகிய மூன்று முக்கியமான செய்கைகளைக்கொண்டது சந்தியாவந்தனம். மந்திர உச்சாடனமாக காயத்திரி மந்திரம் உச்சரித்தல் புத்திக்கூர்மையை வளர்க்கும்; பிராணாயாமம் மன அழுத்தத்தினைக் குறைக்கும்; காலையில் மித்திரனையும், பகலில் சூரியனையும், மாலையில் வருணனையும் குறித்துச் சந்தியாவந்தனம் செய்யப்படும்).

*****

தொட்டிலில் கண்வளர்த்தப்பட்ட குழந்தை உறங்காமல், உறங்கப் பிடிக்காமல் சிணுங்குகின்றது; அழுகின்றது. தாய், தாலாட்டு எனும் விதத்தில் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிச் செய்யப்போகும் அரும் பெருஞ்செயல்களையும், அவனுடைய தற்போதைய குறும்புகளையும் இன்னும் பல நிகழ்வுகளையும் பற்றிப்பாடுகிறாள்.

இவ்வுலகை முறையாக, அழகாக, திருத்தமாக ஈன்றவள் அன்னை பராசக்தி; அவள் தன்னுடைய குழந்தையான முருகனுக்கு முலைப்பால் அருத்துவிக்கிறாள்; பாலுண்ட குழந்தையின் வயிறு நிரம்பியுள்ளது; அதனால் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது; அவனை அலைகள் நிறைந்த கடலில் சேரும் சரவணப்பொய்கையில் உள்ள அழகான ஒரு பூந்தொட்டிலில் கண்வளரக் கிடத்தினாள் அன்னை!

6f2ecd0a-5704-4cba-a806-f633a1f299a1
ஆனால் என்னாவாயிற்று? குழந்தை உதடுகள் நெளிய, சிறியதாகத் துவங்கி, பெருங்குரலெடுத்து அழவாரம்பித்து விட்டான்! ஏனெனில், ஆறுமுகப்பெருமானான அவன் ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக வளர்ந்தவன்; ஆறு கார்த்திகைப்பெண்டிர் அவனுக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்கள் ஊட்டிய பால் மருந்தினைவிட இனியதாம். அன்னை பாலூட்டியது போதாதென இக்குழந்தை இப்போது அந்த அறுவரின் முலைப்பாலிற்காக ஏங்கி அழுகின்றானாம்;

இக்குழந்தை சாமானியக் குழந்தையல்லவே?

அவன் அழுதால் வானவர்கள் எனும் தேவர்களின் பகைவனான சூரபதுமன் முதலான அரக்கர்களும் உடன் அழுகின்றார்களாம்!! இது என்ன புதுக்கதை? அதாவது முருகன் இவர்களை வதைத்த காரணத்தால் அச்சங்கொண்டு சூரர்கள் அழுகின்றனர் எனக் கொள்ளவேண்டும். மாயங்கள் நிறைந்த ஒரு பெரிய மலையும் அழுகின்றதாம்; அதுவென்ன? கிரவுஞ்சமலையை வேலெறிந்து சிதைத்தவன் அன்றோ நமது குமரப்பெருமான்? ஆகவே குமரனின் குரல்கேட்ட போதிலேயே அம்மலையான அரக்கன் அச்சங்கொண்டு ஓலமிட்டுக் கதறுகின்றான் எனப்புலவர் கற்பனை செய்துள்ளார். அழகாக இல்லை?

இவர்கள் அனைவரையும், மலை, அரக்கர்கள் அனைவரையும் விருப்பம்கொண்டு இவ்வுலகில் படைத்த மாயையும் அவர்களுக்கு முருகனின் கையால் நேர்ந்த கதியினைக் கண்டு வருந்தி அழுகின்றாளாம்.

இந்தச் செயல்களெல்லாம் செய்த குமரனான பச்சிளம்மகவோ விம்மி விம்மி அழுகின்றதாம். இது அவன் செய்யும் மாயை!! அன்னையின் அணைப்புக்காக ஏங்கி அழும் மானுடக்குழந்தைகள் போலவே முருகப்பிரானான இக்குழந்தையும் ஏங்கியழுகின்றானாம்! அறுவர் முலைப்பாலுக்கு ஏங்கியழும் குழந்தையாகக் கற்பனை செய்து ‘அழாதே குழந்தாய்’ எனக் கூறுகிறார் புலவர்.

மேலும் இக்குழந்தை ‘வேதன்’ எனும் வேதங்களை ஓதும் பிரமனையும் சினந்து அவனது அறியாமைக்காகத் தலையில் குட்டி தளைபூட்டிச் சிறையிலிட்டு மிகுந்த காவலில் வைத்து அழவைத்தவனல்லவோ? ‘ இவனை இவ்வுலகுக்குத் தந்த தந்தையாகிய சிவபிரானுக்கும் குருவாகி பிரணவத்தின் பொருள் கூறி உபதேசித்த சுவாமிநாதன் அல்லவா இவன்? தாலேலோ; இவன் குமரன்- தமிழ்த்தெய்வமான, தமிழனான முருகன்- அழகன்- எட்டிக்குடிவாழ் தலைவன்; தாலேலோ,’ எனப் போற்றுகிறார் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள்.

திருந்தப் புவனங்கள் ஈன்றவள்தன்
திருமா முலையுண்டு அகங் குளிர்ந்து
திரைவாரி திசேர் சரவணத்தில்
செவ்விப் பூந்தொட்டிலில் அமர்ந்து
மருந்திலினிய அறுவர்முலை
மாந்த விரும்பி வாரியழ
வானோர் பகையாம் சூரரழ
மாயம் பெருத்த குன்றமழ
விரும்பிப் படைத்த மாயையழ
விம்மிவிம்மி யழுங் குழந்தாய்
வேதனழ வன்றளை பூட்டி
மிகுங்கா வலிடை விட்டவனே
தருந்தந் தைக்குக் குருமொழிசொல்
சாமி தாலோ தாலேலோ
தமிழா கரவெட் டிக்குடிவாழ்
தலைவா தாலோ தாலேலோ
(எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

இதே கருத்தினைக் கொண்ட ஒரு பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழிலும் காணப்படுகிறது. இவ்வழகிய கருத்துக்களை உள்வாங்கித் தமது பாடல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார் கவியரசு அவர்கள்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரரழ விம்மியழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஓதும் குவலயமே
(அருணகிரிநாதர்- கந்தரலங்காரம்- 5ம் பாடல்)

பெரும் புலவோர்கள், காலத்தால் வேறுபட்டாலும், ஒரேவிதமான கருத்துக்களைத் தமது பாடல்களில் வெளிப்படுத்துவர்; இது அவர்களின் கல்வி, கருத்து, சிந்தையின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது. பிற்காலத்தில் தமிழை விரும்பிப் பயிலும் நமக்கெல்லாம் கருத்திற்கினிய விருந்தாகி எண்ணங்களையும் ஏற்றப்படுத்துகின்றது. உயர்ந்த இலக்கியத்தின் தன்மை இதுதான் என அறுதியிட்டுக் கூறலாம்.

இன்னும் தொடர்ந்து இதுபோலும் பாடல்களைப் படித்து மகிழலாம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

*****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.