படக்கவிதைப் போட்டி 59-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திருமிகு. சாமினி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு வல்லமையின் நன்றி!
அலையெறியும் கடற்கரையோரம் நின்றிருக்கும் இந்த ஆரணங்கின் மனத்தில் பொங்கிவரும் எண்ண அலைகள் சுமந்துவருபவை துன்ப நினைவுகளா? இல்லை இன்பக் கனவுகளா?
ஏந்திழையின் எண்ணங்களை எழுத்தில் படம்பிடிக்கும் வேலையை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்! நமக்குத் தொழில் அவர்தம் கவிதைகளை இரசிப்பது மட்டுமே!
***
வெளிநாட்டில் வேலைசெய்யும் கொழுநனின் நினைவோடு குலக்கொடியாள் தவித்திருக்க, அவள் தனிமைத்துயரை அவன் காதில்போடவே இந்த அலைகள் இவ்வாறு ஆர்ப்பரித்து ஓடுகின்றன என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
நீலக் கடலின் அலையெல்லாம்
நேரில் வந்து சேதிசொல்லும்,
வேலை செய்யும் வெளிநாட்டில்
விரும்பிச் சென்ற கணவன்நிலை,
கோல மயிலிவள் தனிமைத்துயர்க்
கண்ணீர் துடைக்க வந்ததுபோல்
ஓல மிட்டே அழுதுமீண்டும்
ஓடிச் செல்லும் அவனிடமே…!
***
”கைம்மாறு கருதாமல் கருங்கல்லைக் கட்டியணைக்கும் இந்தக் கடலலையானது நம்பிக்கை நீர்தெளிக்க, சுற்றத்தின் அருமையை முற்றாய் உணர்கின்றாள் இந்த மாது” என்று மொழிகின்றார் திருமிகு. ஹிஷாலி.
விண்ணில் தெறிக்கும்
சூரியன் வரவில்
செலவானது எனது
காலைக் கடன்
கருணையுடன் முடித்து வைத்த
உணவுத்துறை
எழுச்சி முகமாய் தொடரும்
கல்விப் பணி
மாமியார் மருமகள்
கூட்டு முயற்சி
மாமனாரின் சமூகப் புரட்சி
அலுவலகப் பட்டி மன்றம்
ஆண் ஆதிக்கத்திலும் சிறு
அகிம்சை அன்பு
இதெல்லாம் முடித்தப் பின்
ஈவு மீதிக்கு எடுத்துச்
சென்றது …
மாலை நேர சுற்றுப் பயணம்
மதிமயக்கும் மல்லிகை வாசம்
சுட்டெரிக்கும் மணல் மேடு
கைம்மாறு கருதாமல்
கருங்கல்லைக் கட்டி அணைக்கும்
கடல் அலை
தும்பிக்கையாய் மாறி
நம்பிக்கை நீர்தெளிக்க
சுற்றத்தைவிட இன்பம்
வேறில்லை என்று
ஐயம் தெளிந்து
புன்னகைத்தாள்!
***
புத்திரனைப் பறிகொடுத்துச் சித்தம் குலைந்திட்ட சித்திரப்பாவையின் சோகத்தைத் தன் பாடலில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.
என் பாலனை ஈவிரக்கமின்றி
”””’விழுங்கிய கடலே
என்னையும் விழுங்க மாட்டாயா
””””என்னையும் பயமுறுத்துகிறாயா
எத்தியெறியும்அலையே அறிவாயா
””””புத்திரசோகம் எப்டியென்பதை
சமீபத்தில் விவேக் அன்று
”””””சக்கரவர்த்தி தசரதன்!
***
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம் இனி!
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?
சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…
அமுதென்று நினைத்து
நஞ்சை அருந்தினேன்
மலரென்று எண்ணி
முட்களைச் சூடினேன்
ஆசை அழைத்த வழி சென்றேன்
நேசமுடன் பேசிய காதலன்
பாதி வழியில் விட்டுப்போனான்
பாழும் மனது குழம்பி, புலம்பிப்
பல நேரங்களில் சஞ்சலித்தது
என் காதல் ஜெயிக்காமல்
போனதற்குக் காரணம் இறைவா நீ
இதோஇந்த அலைகள் ஓடிவந்து
பாறையில் மோதிச் சிதறியதுபோல்
என் ஆசைகளும் சிதறிப்போயின…
கடற்கரையில் ஆரம்பித்த காதல்
கடற்கரையிலேயே கரைந்துபோனது
ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று!
கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.
***
தரைமேல் பிறக்கவைத்த இறைவன் மீனவரைத் தண்ணீரில் பிழைக்க வைக்கின்றான். அவ்வாறு தண்ணீரில் பிழைக்கச்செல்லும் நம் இந்திய மீனவர், இலங்கைப் படையால் அடையும் கொடுமைகள் சொல்லி மாளா! சொல்லில் அடங்கா!
மீன்பிடிக்கச் சென்ற தன் காதற்கணவன் உயிரோடு மீள்வானா? இல்லை இலங்கைப் படையால் மாள்வானா? எனப் பரிதவிக்கும் பாவையின் ஏக்கத்தைச் சுமந்துவரும் கவிதையொன்று நம் கவனம் கவர்கின்றது.
நீலக்கடல்தான்……எம்
கண்ணீர்த் துளிகளை விழுங்கிய
நீலக்கடல் தான்…..
கரையோரம் தவிக்கவிட்டுக்
கட்டுமரமேறி மீன்பிடிக்கச் சென்றவன்
கரைக்கு மீண்டுவருவானோ…இல்லை
கட்டுமரமிழந்து கயவர் வலையறுககக்
கைதாகிக் கண்ணீர்விட்டுக்கதறச்
சிறைக்குள் அடைபட்டிருப்பானோ….
சென்றவன் நடுக்கடலில்
சிறீலங்காக் குண்டடிபட்டு
செத்தவனாய் வருவானோ…
சிறுபேதை என்செய்வேன்…
வேதனைகள் தீர்க்கவும்
விரைந்து தீர்வைச் சேர்க்கவும்
யாரிங்கு வருவாரோ….
ஆறுதல் தான் தருவாரோ…..
கரைமேல் தவிக்கவும்
கண்ணீரில் குளிக்கவும்
நிலையாய் விதியெனவே
நீலக்கடல் படைத்ததுவோ….
கரையோரம் நிற்கும்
கதியற்ற பெண்ணுக்கு
கடல்தந்த பாடம் சீற்றந்தான்..
கடலலையின் சீற்றமல்ல….
கண்ணீர் அலைகளின் சீற்றந்தான்!
திரு. இளவல் ஹரிஹரனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!
என் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்த மேகலா ராமமூர்த்திக்கும் வல்லமைக்கும் நன்றி—சரஸ்வதிராசேந்திரன்